Last Updated : 02 Jan, 2016 11:34 AM

 

Published : 02 Jan 2016 11:34 AM
Last Updated : 02 Jan 2016 11:34 AM

குறுந்தொடர் 4: மழைநீரைச் சேகரிப்பது யார் பொறுப்பு?

நீர் மேலாண்மைக்குப் புத்துணர்ச்சி ஊட்டும் வகையில் ஒவ்வொரு வீட்டிலும் மழைநீர் சேகரிப்பு அமைப்பை நிறுவ வேண்டும் என்ற சட்டத்தைத் தமிழக அரசு 2002-ம் ஆண்டு கொண்டுவந்தது. சட்டம் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மழைநீர் சேகரிப்பு ஏன் அவசியம்?

மழைநீர் சேகரிப்பின் அவசியம்

மழைநீரை ஏன் சேகரிக்க வேண்டும் என்பதற்கு மூன்று காரணங்களைச் சொல்லலாம்.

1.பூமியில் காணப்படும் நீருக்கு மழையே முதன்மை ஆதாரம். இது இந்தியாவில் உள்ள பெரும்பாலான மாநிலங்களுக்கு நிச்சயம் பொருந்தும்.

2.இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் தேவையான அளவு மழை பெய்கிறது. இது தமிழ்நாட்டுக்கும் பொருந்தும். உலகில் குறைந்த அளவே மழை பெய்யும் நாடுகள் இருக்கின்றன; அங்கு வேண்டுமானால் மழைநீர் சேகரிப்பு அவசியமில்லாமல் இருக்கலாம்.

3.வருடத்தில் ஒரு சில நாட்களே மழை பெய்கிறது. அதை மழை பெய்யும் நாட்கள் (Rainy days) என்கிறார்கள். உதாரணமாக, சென்னைக்கு ஒரு வருடத்தில் சராசரியாக 57 நாட்களே மழை பெய்கிறது. அந்நாட்களில் பெய்யும் மழைநீரைச் சேமித்தால்தான், மழை பெய்யாத நாட்களில் நம்முடைய தண்ணீர்த் தேவையைப் பூர்த்தி செய்துகொள்ள முடியும். இதுவே நிதர்சனம்.

யார் செய்ய வேண்டும்?

நாட்டில் வாழும் ஒவ்வொரு குடிமகனுக்கும் மழைநீர் சேகரிப்பில் பங்கு உண்டு, ஏழை எளிய மக்களைத் தவிர. மழைநீர் சேகரிப்பைப் பொது இடங்களில், அதாவது பூங்காக்கள், விளையாட்டு மைதானங்கள், சாலைகள், அரசுக்குச் சொந்தமான கட்டிடங்களில் அரசும், தனி இடங்களில் பொதுமக்களும் செய்ய வேண்டும். இதைக் காட்டிலும் பெரிய பங்கு ஊடகவியலாளர்கள் கட்டிடக் கலைஞர்கள் மற்றும் கட்டிட அமைப் பாளர்கள், மாநகராட்சி, நகராட்சிப் பொறியாளர்கள், சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத்தைச் சார்ந்த திட்ட வல்லுநர்களுக்கும் (CMDA Planners) உண்டு.

ஒரு விஷயம் சார்ந்த விழிப்புணர்வு என்றவுடனேயே அது பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கும் பொது மக்களுக்கும் மட்டும்தான் அவசியம் என்ற தவறான எண்ணம் நம்மில் பலருக்கும் உள்ளது. குறிப்பிட்ட ஒரு விஷயம் சார்ந்து, சமூகத்தைச் சார்ந்த மற்ற துறைகளில் உள்ளவர்களுக்கும் விழிப்புணர்வு கண்டிப்பாகத் தேவை. மழைநீர் சேகரிப்பைப் பொருத்தவரை, மேலே கூறப்பட்ட துறையைச் சேர்ந்தவர்களுக்கு அவசியம் தேவை.

யார் கடமை?

மழைநீர் சேகரிப்பில் சரியான முறைகளைப் பற்றி மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது ஊடகவியலாளர்கள், ஒவ்வொரு அடுக்குமாடிக் குடியிருப்பிலும் மழைநீர் சேகரிப்பைச் சரியான முறையில் நடைமுறைப்படுத்த வேண்டியது கட்டிட அமைப்பாளர்கள் மற்றும் கட்டிடக் கலைஞர்கள், உரிய மழைநீர் சேகரிப்புடன் குடியிருப்புகள் கட்டப்பட்டிருக்கின்றனவா என்பதை உறுதி செய்து சான்றிதழ் வழங்க வேண்டியது நகராட்சிப் பொறியாளர்கள் மற்றும் சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத்தை சார்ந்த திட்ட வல்லுநர்கள் (CMDA Planners).

மழைநீர் சேகரிப்பைப் பொறுத்தவரை நகராட்சிப் பொறியாளர்களுக்கு மற்றொரு முக்கிய பங்கும் இருக்கிறது: சாலைகளில் பெய்யும் மழைநீர் தற்போது மழைநீர் வடிகால்கள் மூலம் அளவுக்கு அதிகமாகக் கடலுக்கு அனுப்பப்பட்டு வீணாக்கப்படுகிறது. இதைச் சேகரிக்க அவர்கள் கண்டிப்பாக முயற்சி எடுக்க வேண்டும். மழைநீர் வடிகால்களை அதிக எண்ணிக்கையில் கட்டுவதை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

பொறுப்பை உணர்வோம்

கடந்த நாற்பது ஆண்டுகளில், மழைநீர் சேகரிப்பில் கட்டிடக் கலைஞர்களின் பங்கும் அதிகரித் துள்ளது. முப்பது, நாற்பது ஆண்டுகளுக்கு முன்புவரை ஒரு மனையை விலைக்கு வாங்கி, அதில் ஒரு வீட்டைக் கட்டி, தங்களுடைய தண்ணீர்த் தேவையை பூர்த்தி செய்துகொள்ள கிணற்றையோ அல்லது ஆழ்துளை கிணற்றையோ உருவாக்கி நிலத்தடி நீரை மக்கள் பயன்படுத்திவந்தனர். அதனால், நிலத்தடி நீரைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு மக்களையே சார்ந்திருந்தது.

இப்போதோ, அடுக்குமாடிக் குடியிருப்புகளிலேயே மக்கள் அதிகம் வாழ்கிறார்கள். அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டிடக் கலைஞர்களாலேயே கட்டப்படுகின்றன. அங்கு நிலத்தடி நீர் ஆதாரமும் அவர்களாலேயே உருவாக்கப்படுகிறது. அதனால் மழைநீர் சேகரிப்பின் மூலம் நிலத்தடி நீராதாரத்தைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பும் அவர்களுடையதாகிறது. மேலும் குடியிருப்புகளைக் கட்டு வதற்கும் நல்ல நீர் தேவைப்படுகிறது .

இந்த இரண்டு காரணங்களுக்காகக் கட்டிட அமைப்பாளர்கள், தாங்கள் கட்டும் அடுக்குமாடிக் குடியிருப்புகளில் உள்ள நிலத்தடி நீராதாரங்களை மழைநீர் சேகரிப்பின் மூலம் தக்கவைத்துக்கொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகிறது. அப்படிச் செய்யாத நிலையில், எதிர்காலத்தில் நன்னீர் தேவை பற்றாக்குறை நிச்சயம் ஏற்படும்.

மழைநீர் சேகரிப்பின் அடிப்படை அம்சங்கள் அனைத்தையும் பார்த்துவிட்டோம்.

(நிறைவடைந்தது)

- கட்டுரையாளர், மழை இல்லத்தின் இயக்குநர்
தொடர்புக்கு: sekar1479@yahoo.co.in/ தொலைபேசி: 96770 43869



மழைநீர் சேகரிப்பு தொடர்பான அனைத்து விவரங்கள், இலவச ஆலோசனைகளுக்கு சென்னை மந்தைவெளியில் உள்ள மழை இல்லத்தை அணுகலாம்: மழை இல்லம், 4, மூன்றாவது டிரஸ்ட் லிங்க் தெரு, மந்தைவெளி (பட்டினப்பாக்கம் அருகில்), சென்னை - 600028. இணையதளம்: >www.raincentre.net







FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x