Last Updated : 19 Jan, 2014 04:04 PM

 

Published : 19 Jan 2014 04:04 PM
Last Updated : 19 Jan 2014 04:04 PM

ஹரிகதையைப் படிக்க ஏழு ஜென்மம் போதாது: விசாகா ஹரி

சேர்ந்தே இருப்பது எது? என்ற கேள்விக்கு கதாகாலட்சேபமும் விசாகா ஹரியும் என்ற பதில் கச்சிதமாகப் பொருந்திப் போகிறது. ஹரிகதா என்றதுமே விசாகா ஹரியின் பெயர்தான் நினைவில் பளிச்சிடுகிறது. ஹரிகதா எனப்படும் கதாகாலட்சேபத்தில் தனக்கென தனி பாணியை உருவாக்கியிருப்பவரைச் சந்தித்தோம்.

சிறு வயது அனுபவங்கள்?

மயிலாப்பூர் ரோஷன் மெட்ரிகுலேஷன் பள்ளியில் படித்தேன். கான்வென்ட்டாக இருந்தாலும் சமஸ்கிருதத்தை ஊக்குவிப்பார்கள். அப்போதே காளிதாசரின் ரகுவம்சத்தைப் பாடமாக நடத்துவார்கள். கேட்கவே சுவாரசியமாக இருக்கும். கர்நாடக சங்கீதத்திற்கும் நல்ல ஊக்கம் கிடைத்தது.

அப்போதே லால்குடி ஜெயராமனிடம் சிட்சை பெற்றீர்களா?

ஒன்பதாவது படிக்கும்போதே அவரிடம் பாட்டு கற்றுக்கொண்டேன். அப்போது அவருடைய ஒரு பிரத்யேக நிகழ்ச்சிக்கு நான், என் தம்பி சாகேத் ராமன் அப்பறம் வேறு சில மாணவர்கள் தேர்வானோம். அப்படியே தொடர்ந்து பாட்டுக் கற்றுக்கொள்ளத் தொடங்கினேன்.

அவரிடம் இசை பயின்றது எப்படி இருந்தது?

அவரைப் பொறுத்தவரை ஒவ்வொரு வகுப்பும் ஒரு பரீட்சைதான். தயார்படுத்திக்கொண்டு போனால்தான் மேலே பாட்டு கற்றுக்கொள்ளமுடியும். அவர் நாங்கள் வருவதற்கு முன்னரே தயாராக இருப்பார். ஒரு நிமிடம்கூட தாமதமாகப் போக முடியாது. நாலு மணிக்குத் தொடங்கும் வகுப்பு, எட்டு மணி வரை நீளும். அவருடைய ஊனையும் உயிரையுமே இதில்தான் வைத்திருந்தார்.

கீர்த்தனம் கற்றுத் தருவது மட்டுமில்லை, அதை எப்படி மேடையில் பாடினால் சரியாக இருக்கும் என்பதையும் சேர்த்தே சொல்லித் தருவார். வயது வித்தியாசம் பார்க்காமல் சிறுவர்களுக்கும் பெரிய பெரிய கீர்த்தனைகளைச் சொல்லிக் கொடுப்பார். கீர்த்தனைகளை ஒவ்வொருவருக்கும் தன் கைப்பட முத்து முத்தாக எழுதிக் கொடுப்பார்.

கீர்த்தனைகளை நாங்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக கர்நாடக சங்கீதத்தில் குறுக்கெழுத்துப் போட்டி, புதிர்ப்போட்டி நடத்துவார். இது மட்டுமல்ல, செஸ் விளையாடவும், பட்டம் பண்ணவும் கற்றுக் கொடுத்தார். வகுப்பு முடிந்து கிளம்பும்போது ஜோக்ஸ் சொல்வார். எங்களை பீச்சுக்குக்கூட அழைத்துக்கொண்டு போயிருக்கார். எல்லாத்தையும் ரசிக்கத் தெரிந்தால்தான் இசை நன்றாக வரும் என்று சொல்வார். படிப்பை நிறுத்தினாலும் பாட்டை நிறுத்தக்கூடாது என்பார். இப்போது நினைத்துப் பார்த்தால் படிப்பைக்கூட நிறுத்தி இருக்கலாமோ எனத் தோன்றுகிறது. சி.ஏ. படித்து, கோல்ட் மெடல் வாங்கி என்ன பயன்? பாட்டு பயிற்சி செய்யவே ஏழு ஜென்மம் போதாதுபோல இருக்கிறது.

அடிப்படையில் நீங்கள் ஒரு பாடகர்தானே? உங்கள் இசைக் கச்சேரிகள் பற்றிச் சொல்லுங்கள்

நான் இசைக் கச்சேரிகளை விடவே இல்லை. ரசிகர்கள் இசை ஞானத்தைத்தான் அதிகம் விரும்புகிறார்கள். ஹரிகதாவுக்கு உள்ளேயே இசைக் கச்சேரியும் சேர்ந்து அமைகிறது. விஷயங்களை பேசிப் பேசிப் புரிய வைக்க ஹரிகதாதான் சிறந்த வடிவம். இசைக் கச்சேரிகளில் இசை நுணுக்கங்கள் நமக்கு மட்டுமே தெரியுமே தவிர, கேட்க வந்திருக்கும் ரசிகர்களுக்கு புரிய வைக்க நேரம் இருக்காது. ஹரிகதைக்கு கூட்டம் வர காரணமே இந்த புரிதலை வாங்கத்தான். பேச்சைக் கேட்கக்கூட பல மொழிக்காரர்களும் வருகிறார்கள். ஒரு முறை துபாயில் என் கணவரின் உபன்யாசம் ஏழு நாள் நடந்தபோது தினமும் ஒரு ரஷ்யன் வந்தார். மொழி புரியாமல் தினம் வரக் காரணம் என்ன என்று கேட்டபோது இந்த தெய்வீகம் எனக்குப் புரிகிறது என்றார்.

ஹரிகதாவுக்கு தகவல்களை எப்படிச் சேகரிப்பீர்கள்?

புராண இதிகாசங்களுக்கு அண்ணாதான் என் குரு. அவர் பக்தி விஷயங்களை ஏற்கனவே செய்துவைத்திருக்கிறார். இதில் எந்த இடத்தில் என்ன பாட்டு என்பதைத் தேர்ந்தெடுப்பது மட்டும்தான் என் வேலை. என் கணவர் ஹரிஜி என் மற்றொரு குரு. அவரிடம் பல விளக்கங்களைக் கேட்டுக்கொள்வேன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x