Last Updated : 21 Jan, 2017 10:52 AM

 

Published : 21 Jan 2017 10:52 AM
Last Updated : 21 Jan 2017 10:52 AM

நோய்க்கு நாமே இடம் கொடுக்கலாமா?

இக்காலக் குழந்தைகள் சுத்தத்தில் எப்படி இருக்கிறார்கள்? ‘சுகாதாரம்னா என்ன?’ - ஒரு கிராமத்துப் பள்ளி மாணவர்களிடம் கேட்ட கேள்வி இது. சுற்றுப்புறத்தை நல்லா வச்சுக்கணும் என்றும், பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்தக்கூடாது என்றும், உடம்பில் நோய் வராம பாத்துக்கணும் என்றும் தினமும் குளிக்கணும் என்றும் மாணவர்கள் தங்களுக்குத் தெரிந்த பதில்களைச் சொன்னார்கள். ஆனால், பின்பற்றுவதில் அவர்கள் எப்படி இருக்கிறார்கள்?

குளிப்பதற்கு நேரமில்லை

‘நேரமாகிவிட்டது’ என்றோ, இல்லையென்றால் ‘நேரமில்லை’ என்றோ ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லிக்கொண்டு, பேருக்குக் கொஞ்சம் தண்ணீரை உடம்பின் மேல் ஊற்றிவிட்டு, ‘இதோ வந்துவிட்டேன்’ என்ற நிலையில் கடமைக்குத்தான் பலரது குளியலும் இருக்கிறது. வாரத்துக்கு எத்தனை நாள் அழுக்கு தேய்த்து ஒழுங்காகக் குளிக்கிறோம் என்று நினைத்துப் பாருங்கள். ‘அக்குள்’ போன்ற மறைவான பகுதிகளில் நன்றாகத் தேய்த்துக் குளிக்கிறோமா? அது அவசியம். அத்துடன் குளித்த பிறகு ஈரம் போக நன்றாகத் துடைக்கவும் வேண்டும். ஆடை அணிவதிலும் அலங்கரிப்பதிலும் நமக்கு இருக்கும் ஈடுபாடு, சுயசுத்தத்தைப் பேணுவதில் இருக்கிறதா? இக்காலக் குழந்தைகளுக்குச் சுத்தம் பற்றி முறையாக வழிகாட்டுகிறோமோ!

காந்தியின் அக்கறை

ஒருமுறை பம்பாயில் ‘பிளேக் நோய்’ தீவிரம் காட்டியபோது காந்தியடிகள், தானே சுகாதாரக் குழுவினருடன் சேர்ந்து சுற்றுப் புறத்தைச் சுத்தப்படுத்த கடுமையாக முயற்சித்தார். வீடுவீடாகச் சென்று கழிப்பறையை ஆய்வு செய்து, சுத்தமாக வைத்திருக்க வேண்டியதன் அவசியத்தைக் கூறினார். ‘இந்தியர்கள் சுத்தத்தைக் குறித்துக் கவலைப்படமாட்டார்கள், சுற்றுப்புறத்தைச் சுகாதாரமாக வைத்திருக்க மாட்டார்கள்’ என்று அந்தக் காலத்தில் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை, பொய் என்று நிரூபிக்க அதிகக் கவனம் செலுத்தினார் காந்தி. இது நடந்தது ஏறக்குறைய நூறு ஆண்டுகளுக்கு முன்பு.

‘உடல் ஆரோக்கியம், சுகாதாரத்தைக் கடைப்பிடிப்பதில் இருந்து தொடங்குகிறது’, என்று காந்தி சொன்ன கருத்து இன்றைய தலைமுறையினருக்குத் தெரியாமல் போனது வருத்தமான செய்திதான். அவருக்கு இருந்த ஆழ்ந்த அறிவின் காரணமாகவே அவரால் 1905 காலகட்டத்தில் ‘இந்தியன் ஒப்பினியனில்’ ஆரோக்கியம் குறித்து ‘ஆரோக்கிய வழி’ என்ற தலைப்பில் கட்டுரைகளை எழுத முடிந்தது. பின்னாளில் அதுவே ‘ஆரோக்கியத் திறவுகோல்’ என்ற பெயரில் நூல் வடிவம் பெற்றது.

சுயசுத்தம் என்றவுடன் என்னமோ ஏதோ என்று நினைக்கிறார்கள். தலையில் தொடங்கிக் கால்வரை சுத்தமாக வைத்திருப்பதில் கவனம் செலுத்தினாலே போதும். தலையை அடிக்கடி அலசித் தூய்மையாக வைத்திருப்பது மிக அவசியம். குறிப்பாகப் பெண்கள் வாரத்துக்கு இரண்டு முறையாவது தலையை அலச வேண்டும். தினமும் காலையிலும் இரவிலும் பல் துலக்குவதும், அழுக்கு தேய்த்துக் குளிப்பதும் அவசியம். செருப்பில்லாமல் குழந்தைகள் வீட்டைவிட்டு வெளியில் செல்லக்கூடாது. இவை எல்லாமே நமக்குத் தெரிந்தவைதான். ஒன்றும் புதிதல்ல. ஆனால், இவற்றைக் கடைப்பிடிக்கிறோமா என்பதுதான் கேள்வி.

சரியாகக் கை கழுவுகிறோமா?

‘சாப்பிட வாங்க’ என்று அம்மா அழைத்தவுடன், குழந்தைகள் ஒரே ஓட்டமாக ஓடிப்போய் வாளியிலோ அல்லது வாஷ்பேசினிலோ கையை நனைத்துவிட்டுச் சாப்பிட உட்கார்ந்துவிடுகிறார்கள். சில வீடுகளில் பெற்றோரும் கை கழுவுவதில்லை, குழந்தைகளும் கை கழுவுவதில்லை.

சாப்பிடும் முன் கைகளைச் சுத்தமாகக் கழுவ வேண்டியது மிக மிக அவசியம். இதை ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் மாதம் 15-ம் தேதி ‘உலகக் கைகழுவும் நாள்’ என்ற பெயரில் வலியுறுத்த வேண்டியதாகிவிட்டது. விளையாடிவிட்டு வந்த பிறகும், மலம் கழித்துவிட்டு வந்த பிறகும், சாப்பிடுவதற்கு முன்பும் கைகளை நன்றாக, நிதானமாகத் தேய்த்துக் கைகளைக் கழுவ வேண்டும். அவசரம் காட்டக்கூடாது.

கைவிரல் நகங்களை வாரத்தில் ஒருநாள் வெட்டிவிடுவதை வழக்கமாக்கிக்கொள்ள வேண்டும். குழந்தைகளின் நகத்தைப் பார்த்தால் நகத்தினுள் ‘கண்ணேங்கரேலென்று’ அழுக்கு சேர்ந்திருக்கும். நாம் சாப்பிடும் உணவுடன் இந்த அழுக்கும் கிருமிகளும் சேர்ந்து உடலுக்குள் சென்று உடல்நலக் கேட்டை ஏற்படுத்தும்; வயிற்று வலி, வயிற்றுப்போக்கு, வயிற்றில் பூச்சித்தொல்லை, சளி, இருமல் போன்ற பிரச்சினைகளுக்கு இதுவும் ஒரு காரணம்.

ஏன் இந்த அவசரம்?

குழந்தைப் பருவத்தில் ஆரோக்கியத்துக்கு அதிக முக்கியத்துவம் தர வேண்டும். ஆனால், நம் ஊரில் நிலைமையோ தலைகீழ். காலையில் குழந்தைகள் எழுந்திருப்பதே மிகத் தாமதமாகத்தான். விளையாட வேண்டிய பருவத்தில், நாம்தான் பள்ளிக்குத் தள்ளிவிட்டு விடுகிறோம். பள்ளிக்கு நேரமாச்சு, இன்னும் அரை மணி நேரத்தில் கிளம்பியாக வேண்டும் என்று காலையில் குழந்தைகளைப் பெற்றோர் படுத்தும்பாடு சொல்லி மாளாது.

பல் துலக்குதல், காலைக்கடன் கழிப்பது, குளித்துச் சாப்பிடுவது என்று எல்லாமே இந்த அரை மணி நேரத்துக்குள் நடந்தாக வேண்டும். அப்போது எப்படி அந்தக் குழந்தை ஆரோக்கியமாக இருக்கும்? சுத்தம் கண்டிப்பாக நோய்க்கு இடம் தராது, சுகம் தரும்; நிச்சயமாக ஆரோக்கியமான உடலையும் தரும்.

கட்டுரையாளர்,
மதுரை தேசியக் கண் மருத்துவச் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர்
தொடர்புக்கு: veera.opt@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x