Published : 21 Jun 2016 12:33 PM
Last Updated : 21 Jun 2016 12:33 PM

வேலை வேண்டுமா?- விமானப்படை அதிகாரி ஆகலாம்

இந்தியாவின் முப்படைகளில் ஒன்றான விமானப்படையில் வான்வெளிப் பிரிவு, தொழில் நுட்பப் பிரிவு மற்றும் தரைப் பணிப் பிரிவில் உள்ள அதிகாரி பணியிடங்கள் (Commissioned Officers) அனைத்தும் விமானப்படை பொது நுழைவுத் தேர்வு (Airforce Common Admission Test-AFCAT) மூலமாக நிரப்பப்படுகின்றன. இந்த நுழைவுத் தேர்வில் வெற்றி பெறுபவர்கள் நுண்ணறிவுத் தேர்வு, உளவியல் தேர்வு, குழு விவாதம் ஆகியவற்றின் அடிப்படையில் வெவ்வேறு பிரிவுகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.

தேவையான தகுதிகள்

இந்த ஆண்டுக்கான விமானப்படை பொது நுழைவுத் தேர்வு ஆகஸ்ட் மாதம் 23-ம் தேதி சென்னை உள்பட நாடு முழுவதும் பல்வேறு முக்கிய நகரங்களில் நடத்தப்படவிருக்கிறது. ஆண், பெண் இரு பாலரும் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். ஒவ்வொரு பிரிவுக்கும் தனித்தனிக் கல்வித் தகுதி, வயது வரம்பு தகுதிகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. அதன்படி, வான்வெளிப் பிரிவுக்கு (Flying Branch) ஏதேனும் ஒரு பாடத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண் வேண்டும். பிளஸ் டூவில் கணிதம், இயற்பியல் படித்திருக்க வேண்டியது அவசியம். அதன் பிறகு கல்லூரியில் பி.இ., பி.டெக். போன்ற தொழில்முறை படிப்பு கள் மட்டுமின்றி கலை, அறிவியல் இப்படி எந்தப் பிரிவிலும் பட்டம் பெற்றவராக இருக்கலாம். வயது 20 முதல் 24-க்குள் இருக்க வேண்டும். உயரம் குறைந்தபட்சம் 162.5 செ.மீ. தேவை. நல்ல பார்வை அவசியம்.

நிரந்தர வேலை வாய்ப்பு

அதேபோல், தொழில்நுட்பப் பிரிவுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் பி.இ. அல்லது பி.டெக். பட்டம் பெற்றவராக இருக்க வேண்டும். வயது 20 முதல் 26-க்குள் இருக்க வேண்டும். உயரம் குறைந்தபட்சம் 157.5 செ.மீ. வேண்டும். தரைப்பணிப் பிரிவை (Ground Duty) பொறுத்தவரையில் நிர்வாகப் பிரிவுக்கு 60 சதவீத மதிப்பெண்ணுடன் ஏதேனும் ஒரு பட்டப் படிப்பும் கணக்குப் பிரிவுக்கு பி.காம். படிப்பும், கல்விப் பிரிவுக்கு எம்.சி.ஏ., எம்.பி.ஏ., எம்.எஸ்.சி., எம்.ஏ. படிப்பும் வேண்டும். உயரம் குறைந்தபட்சம் 157.5 செ.மீ. அவசியம். பணிக்கு வெவ்வேறு பிரிவுகளில் அதிகாரியாகத் தேர்வு செய்யப்படுவோர் நிரந்தரப் பணியிலும் சேரலாம். குறுகிய காலப் பணியிலும் சேரலாம். குறுகிய காலப் பணியில் 10 ஆண்டுகள் பணியாற்ற வேண்டும். அதன்பிறகு 4 ஆண்டுகள் பணிக் காலத்தை நீட்டித்துக் கொள்ளவும் வாய்ப்பு உண்டு.

சம்பளத்தைப் பொறுத்தமட்டில், வான்வெளிப் பிரிவுக்கு அதிகாரியாகத் தேர்வு செய்யப்படுவோருக்கு ஆரம்ப நிலையில் ரூ.82 ஆயிரமும், தொழில்நுட்பப் பிரிவில் ரூ.71,550, தரை பணி பிரிவில் ரூ.68,550-ம் கிடைக்கும். சம்பளம் தவிரக் குடியிருப்பு, தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் மருத்துவ வசதி, ரேஷன் பொருட்கள், கேண்டீன் வசதி, காப்பீடு என ஏராளமான சலுகைகளும், வசதிகளும் உண்டு. மேற்கண்ட பணிகளில் சேருவதற்காக நடத்தப்படும் விமானப் படை பொது நுழைவுத் தேர்வுக்கு ஜூன் மாதம் 30-ம் தேதிக்குள் ஆன்லைனில் >www.careerairforce.nic.in என்கிற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். தகுதிகள் தொடர்பான விரிவான விவரங்களையும் இதே இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x