Last Updated : 27 Jun, 2016 10:31 AM

 

Published : 27 Jun 2016 10:31 AM
Last Updated : 27 Jun 2016 10:31 AM

கடன் சுமையிலிருந்து இந்தியா மீள்வது எப்போது?

கடந்த வாரம் மேற்கு வங்க மாநில நிதி அமைச்சர் அமித் மித்ரா, தங்கள் மாநிலம் கடன் பொறியில் சிக்கியுள்ளதாக அளித்த தகவல் பெரும்பாலான நாளிதழ்களில் முதல் பக்கச் செய்தியாக இடம்பெற்றிருந்தன.

ஒரு மாநிலமே கடன் பொறியில் சிக்கித் தவிக்கும்போது அனைத்து மாநிலங்களையும் உள்ளடக்கிய மத்திய அரசு எத்தகைய கடன் சுமையில் சிக்கியிருக்கும் என்ற கேள்விக்கு விடை தேடியபோதுதான் இந்தியாவின் கடன் சுமை கண்ணைக் கட்டியது.

இந்தியாவின் பட்ஜெட்டை செல்லரித்துப் போகச் செய்வதே கடன் சுமைதான். வாங்கிய கடன் மற்றும் அதற்கு கட்ட வேண்டிய வட்டி, புதிய திட்டங்களுக்கு வாங்கும் புதிய கடன் இதனால் நாளுக்கு நாள் கடன் சுமை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

மத்திய அரசின் கடன் சுமை ரூ. 47 லட்சம் கோடி. மாநில அரசுகளின் கடன் சுமையைச் சேர்த்து மொத்தம் உள்ள கடன் தொகை ரூ. 65 லட்சம் கோடி. அதாவது நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் இது 65 சதவீதமாகும்.

கவலைப்பட வேண்டாம். நமது கடன் சுமை ஜிடிபியில் 65 சதவீதம்தான். அமெரிக்காவுக்கு 75 சதவீதமாக உள்ளது என்று அரசு அதிகாரிகள் இதற்கு விளக்கம் அளிக்கலாம்.

இந்தியா புதிதாக கடன் வாங்குவதே ஏற்கெனவே வாங்கிய கடனுக்கு வட்டி கட்டத்தான் என்ற நிலையில் உள்ளது. இதைத்தான் கடன் பொறி என்கின்றனர்.

மன்மோகன்சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசு தனது கடைசி ஆண்டு காலத்தில் (2014) ரூ. 4.57 லட்சம் கோடி கடன் வாங்கியது. இதில் ரூ. 4.27 லட்சம் கோடி தொகை வாங்கிய கடனுக்கான வட்டிக்காக அளிக்கப்பட்டது.

நமக்கு சாதகமான விஷயம் என்றால் நம்மை விட அதிக கடன் சுமையில் உள்ள அமெரிக்காவை கை காட்டுகிறோம். ஆனால் அவர்கள் வாங்கும் கடனுக்கான வட்டித் தொகை ஒரு சதவீதம் முதல் 3 சதவீதம் வரைதான் உள்ளது. ஆனால் நாம் வாங்கும் கடனுக்கு 7 சதவீதம் முதல் 9 சதவீதம் வரை வட்டி கட்ட நேரிடுகிறது.

அமெரிக்காவின் பெடரல் ரிசர்வ் கடனுக்கான வட்டிக்கு 6 சதவீதத்தை மட்டுமே ஒதுக்குகிறது. ஆனால் நாம் நமது பட்ஜெட்டில் 25 சதவீதத்தை ஒதுக்க வேண்டியுள்ளது.

மேலும் அமெரிக்கா தனது கரன்சியான டாலரில் மட்டுமே கடன் வாங்குகிறது. ஆனால் இத்தகைய வசதி வேறு எந்த நாட்டுக்கும் கிடையாது.

நம்மை விட அமெரிக்க கடன் சுமை அதிகம் என்று நாம் பெருமைப்பட்டுக் கொள்ள முடியாது. இரண்டு மிகப் பெரிய நெருக்கடியை அந்நாடு எதிர் கொண்டு சமாளித்துள்ளது. 2.5 டிரில்லியன் டாலர் அளவுக்கு ஏற்பட்ட சப் பிரைம் எனப்படும் வீட்டுக் கடன் பிரச்சினை. அத்துடன் இரட்டை கோபுரம் தகர்க்கப்பட்ட பிரச்சினையால் ஏற் பட்ட மாபெரும் பொருள் சேதம். மேலும் அமெரிக்காவில் பள்ளிப் படிப்பு முற்றி லும் இலவசம். சமூக பாதுகாப்புக்கும் அந்நாடு அதிகம் நிதி ஒதுக்குகிறது. அதேபோல அங்கு அனைவருக்குமான மருத்துவ சேவைக்கும் அதிகம் செலவிடப்படுகிறது.

இந்தியாவின் கடன் சுமை அதிகரித் ததற்கு பல காரணங்கள் உள்ளன. பிரபலமான மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்துவதற்காக கடன் வாங்கி யுள்ளன. மத்திய அரசு கட்டமைப்பு திட்டங்களுக்காக கடன் வாங்கியுள்ளது.

உணவு, எரிபொருள், உர மானியத் துக்கு இந்திய அரசு அதிகம் செலவிடு கிறது. அனைத்துக்கும் மேலாக இங்கு ராணுவத்துக்கான ஒதுக்கீடு அதிகரித் துக்கொண்டே செல்கிறது. இந்தியாவின் பட்ஜெட்டில் 30 சதவீதம் ராணுவத்துக்கு செல்கிறது. கடனுக்கான வட்டி செலுத்த 25 சதவீதம் போய்விடுகிறது. இதனால் சுமார் 45 சதவீத பட்ஜெட் தொகைதான் செலவுக்கு பயன்படுத்தப்படுகிறது. இதற்குள்ளாக கல்வி, சுகாதாரம் உள்ளிட்டவற்றை கவனித்தாக வேண்டியுள்ளது. இது தவிர பல இடங்களில் விரயம் மற்றும் ஊழலில் பெருமளவு தொகை கரைகிறது.

கடன் பொறியிலிருந்து தப்பிக்க வேண்டுமாயின் அரசு வருமானத்தை அதிகரிக்க வேண்டும். அதேசமயம் செலவுகளைக் குறைக்க வேண்டும். மக்கள் நலத் திட்டங்கள் உண்மையில் ஏழை மக்களுக்கானது என நடுத்தர மக்கள் உணர வேண்டும். எரிபொருள் மானியம், உணவு மானியம், மின்சார மானியம், சமையல் எரிவாயு மானியம் உள்ளிட்ட அனைத்தும் தங்களது பிறப்புரிமை என கருதக் கூடாது.

ராணுவத்துக்கு அதிக ஒதுக்கீடு செய்து, உலகத் தரம் வாய்ந்த ராணு வத்தை வைத்துக் கொண்டு பொருளா தாரத்தில் மூன்றாம் தர உலக நாடாக இருக்கக் கூடாது. இதற்கு நிர்வாக ரீதியில் பெருமளவு மாற்றங்களைச் செய்தாக வேண்டும். குறிப்பாக பொருள் விரயத்தைக் குறைக்க வேண்டும். ஊழலை அகற்ற வேண்டும்.

மாநில அரசுகள் கடன் பத்திர வெளியீடு மூலம் நிதி திரட்டுகின்றன. 2008-ம் ஆண்டிலிருந்து கடன் பத்திர வெளியீடு மூலம் நிதிதிரட்டி வருகின்றன. 2017-ம் நிதி ஆண்டிலிருந்து கடன் பத்திரங்களுக்கு வட்டியுடன் திரும்ப செலுத்த வேண்டிய நிலையில் உள்ளன. மாநில அரசுகள் பெற்ற கடன் தொகை ரூ. 15,360 கோடியிலிருந்து ரூ. 32,225 கோடியாக அதிகரித்துள்ளது.

கடன் பொறியில் சிக்காமலிருக்க…

1997- ம் ஆண்டுக்குப் பிறகு ரிசர்வ் வங்கியிலிருந்து மாநில அரசுகள் கடன் பெறுவது குறைந்தது. குறிப்பாக 2003-ம் ஆண்டுக்குப் பிறகு மாநில அரசுக்கோ அல்லது மத்திய அரசுக்கோ கடன் வழங்குவதை ரிசர்வ் வங்கி முற்றிலுமாக நிறுத்திவிட்டது.

இதனால் மாநில அரசானாலும் சரி, மத்திய அரசானாலும் சரி வெளிச் சந்தையில்தான் கடன் பெற்றாக வேண்டும்.

ரிசர்வ் வங்கியில் கடன் பெற்றபோது வட்டி விகிதம் குறைவாக இருக்கும், இருந்தது. ஆனால் வெளிச் சந்தையில் கடன் பெற ஆரம்பித்தபோது, பண வீக்க நிலவரத்துக்கேற்ப வட்டி விகிதம் அமைந்தது.

இத்தகைய சூழலில் புதிதாக கடன் பெறும் மாநிலங்கள் கடன் பொறியில் சிக்காமலிருக்க வேண்டுமானால் அவை செலுத்த வேண்டிய ஒட்டுமொத்த வட்டித் தொகை குறைவாக இருக்க வேண்டும். அப்போதுதான் சொந்த நிதி ஆதாரத்திலிருந்து வட்டி கட்ட முடியும்.

அடுத்தது மாநில அரசானாலும் சரி, மத்திய அரசானாலும் சரி வளர்ச்சி விகிதத்தை விட குறைவான வட்டி விகிதத்தில் கடன் பெற வேண்டும். வளர்ச்சி விகிதம் 5 சதவீதமாக இருந்து வட்டி விகிதம் 9 சதவீதமாக இருந்தால் கடன் பொறியில் சிக்குவதிலிருந்து தப்ப முடியாது.

மாநில அரசுகளின் கடன் பத்திரங்கள் ஒரே வட்டி விகிதம் கொண்டதாகத்தான் சந்தையில் மதிப்பிடப்படுகிறது. வளர்ச்சியடைந்த மாநிலங்களான தமிழகம், மஹாராஷ்டிரம் உள்ளிட்ட மாநிலங்கள் வெளியிடும் பத்திரத்துக்கு நிர்ணயிக்கப்படும் வட்டியும் பிஹார் உள்ளிட்ட பின்தங்கிய மாநிலங்கள் வெளியிடும் கடன் பத்திரத்துக்கான வட்டியையும் ஒரே அளவாக இருந்தால் பாதிக்கப்படுவது வளர்ச்சியடைந்த மாநிலங்கள்தான்.

குடும்பத்தில் வரவைவிட அதிகமாக கடன் வாங்கினால் தாக்குப் பிடிக்க முடியுமோ? அதைப்போலத்தான் நாட்டிற் கும். நிதி ஆதாரம், திரும்ப செலுத்தும் திறன் ஆகியவற்றைப் பொறுத்தே கடன் வாங்க வேண்டும். இல்லையெனில் திவாலாக வேண்டியதுதான்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x