Last Updated : 29 Apr, 2017 11:12 AM

 

Published : 29 Apr 2017 11:12 AM
Last Updated : 29 Apr 2017 11:12 AM

அந்தமான் விவசாயம் 31: நலம் தரும் நறுமணப் பயிர்கள்

நறுமணப் பயிர்களைப் பற்றிய நீண்ட முகவுரை நமக்குத் தேவையில்லை. ஏனென்றால் உணவைப் பதப்படுத்தவும், இருப்புத்திறனை அதிகப்படுத்தவும், உணவின் சுவை- மணத்தை மேம்படுத்தவும் இப்பயிர்களை நாம் தொன்றுதொட்டுப் பயன்படுத்தி வந்திருக்கிறோம். மேலும், பண்டைக் காலத்திலேயே வெளிஉலகுக்கு தமிழகத்தை அறிமுகம் செய்துவைத்தது நறுமணப் பயிர்களே.

தற்காலத்தில் ஆயத்த உணவுகளின் ஆதிக்கம் அதிகரித்து வருவதால் அவற்றில் பயன்படும் செயற்கையான பதப்படுத்தும் வேதிப்பொருட்களும் பெருகிவிட்டன. இவ்வகையான வேதிப்பொருட்கள் புற்றுநோய் உள்ளிட்ட நோய்களை விளைவிக்கக் கூடியவை, இதற்கு மாறாக நறுமணப் பயிர்களிலிருந்து பெறப்படும் பொருட்கள் உணவின் சுவையை அதிகரிப்பதோடு ஆரோக்கியமும் தரவல்லவை.

இயல் நறுமணப் பொருட்கள்

அந்தமானைப் பொறுத்தவரை பல்வேறு காலகட்டங்களில் இப்பயிர்கள் வணிகர்களாலும், காலணி ஆதிக்கம் செலுத்தியவர்களாலும் குடியமர்ந்தோராலும் தேவைக்காக அறிமுகம் செய்யப்பட்டன. ஆனால் கடற்கரைச் சமவெளியிலும், அடர்ந்த காட்டுக்குள்ளும் மணம் வீசும் அந்தமான் இயல் நறுமணப் பொருட்கள் இவர்களுடைய கண்களுக்குப் புலப்படாமல் போனது சற்று ஆச்சரியத்தைத் தருகிறது. இத்தீவுகளில் பல்லாண்டுகளாக வாழ்ந்துவரும் அனைத்துப் பழங்குடியினரும் இத்தகைய நறுமணப் பயிர்களை அறிந்திருப்பதோடு அவற்றை உணவாகவும் மருந்தாகவும் பயன்படுத்தி வருகின்றனர்.

உள்நாட்டு ரகங்கள்

தற்காலத்தில் நறுமணப் பயிர்கள் பெரும்பாலும் தென்னை மரங்களுக்கு இடையில் ஊடுபயிராகவும், மற்றப் பயிர்கள் அல்லது மரங்களோடு சேர்ந்து கலப்பு பயிராகவும் அந்தமானில் வளர்க்கப்படுகின்றன. இவை தரும் நறுமணமும் சந்தையில் கிடைக்கும் பெரும் பணத்துக்குக் காரணம், அறிமுகம் செய்யப்பட்ட ரகங்களோடு சில உள்நாட்டு ரகங்களும் இத்தீவுகளில் பயிர்செய்யப்படுவதே.

அந்தமான் நிகோபார் தீவுகளில் கிராம்பு, லவங்கப்பட்டை, ஜாதிக்காய், மிளகு, இஞ்சி முதலான நறுமணப் பயிர்கள் விளைகின்றன. தகுந்த தட்பவெப்பம், மழை, மண் வகைகள் இருப்பதால் இவற்றின் தரம் சிறப்பாக உள்ளது. ஆனால், அறுவடைக்குப் பிந்தைய தொழில்நுட்பமும் மதிப்புக்கூட்டல் முறைகளுமே பெரும்பாலும் இவற்றின் சந்தை மதிப்பை நிர்ணயிக்கின்றன.

மேம்பாட்டு முயற்சிகள்

சந்தைப்படுத்தலுக்கான மாபெரும் வாய்ப்புகள் இருக்கும்போதும், மணப்பயிர்களின் சாகுபடி இன்னும் இங்கே முழுமை பெறவில்லை. இன்றும் 70 சதவீதத்துக்கும் மேலாக நேரடியாகச் சூரியஒளியில் உலர்த்தும் முறையே பின்பற்றப்படுகிறது. காற்றின் ஈரப்பதம் அதிகம் இருப்பதால், பாலித்தீன் பைகளில் அடைக்கப்படும் மணப்பொருட்கள் விரைவில் தரம் இழக்கும் நிலை ஏற்படுகிறது. சமீபகாலமாக மத்திய வேளாண் ஆராய்ச்சி நிலையம், விவசாயத் துறை, மற்ற மேம்பாட்டு நிறுவனங்களின் முயற்சியால் இப்பயிர்களைப் பயிரிடுவது அதிகரித்துவருகிறது.

நறுமணப் பொருட்களைச் சுத்தம் செய்தல், கழுவுதல், கொதிக்க வைத்தல், பதப்படுத்தல், உலர்த்துதல், மெருகேற்றுதல், பொடி செய்தல், தரம் பிரித்து கட்டுதல் முதலியவற்றுக்கான இயந்திரங்களும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இக்காரணங்களால் சந்தையில் அந்தமான் நறுமணப் பொருட்களின் வரவு அதிகரித்து, பயிரிடும் பரப்பளவை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் பெருகிவருகின்றன.

(அடுத்த வாரம்: அங்கக முறையில் மணப்பயிர் சாகுபடி)
கட்டுரையாளர், இந்திய வேளாண் ஆராய்ச்சிமன்றத்தின் முதுநிலை ஆராய்ச்சியாளர்
தொடர்புக்கு: velu2171@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x