Published : 21 Aug 2016 02:24 PM
Last Updated : 21 Aug 2016 02:24 PM

களம் புதிது: சமஉரிமைக்கு அர்த்தம் கொடுத்த சாக்ஷி

கேள்வி கேட்பதும், விமர்சனம் செய்வதும் மிக எளிது. அதனால்தான் பலரும் அந்த வழியைத் தேர்ந்தெடுக்கிறார்கள். ரியோ ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கச் சென்ற இந்தியர்கள் பதக்கம் வெல்லவில்லையே என்று பலரும் கேள்விக் கணைகளைத் தொடுத்தார்கள். இவர்கள் எல்லாம் செல்ஃபி எடுக்கத்தான் லாயக்கு என்று விமர்சனச் சேற்றை வாரியிறைத்தார்கள். ஆனால், மல்யுத்தப் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றதன் மூலம், இவை அனைத்தையும் தவிடுபொடியாக்கியிருக்கிறார் சாக்‌ஷி மாலிக். இந்த மகத்தான வெற்றியின் மூலம் 2016 ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவின் பதக்கக் கணக்கை அவர் தொடங்கிவைத்தார்.

யாருமே எதிர்பாராத கடைசி விநாடிகளில் எதிராளியை வீழ்த்திப் பதக்கம் வென்றதன் மூலம், மல்யுத்தப் பிரிவில் பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண் என்ற புதிய வரலாற்றை எழுதியிருக்கிறார் 23 வயது சாக்‌ஷி! ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வெல்லும் நான்காவது இந்தியப் பெண், இந்திய ஒலிம்பிக் வரலாற்றில் மல்யுத்தப் பிரிவில் பதக்கம் வெல்லும் ஐந்தாவது நபர் என்று அடுக்கடுக்கான சாதனைகளை ஏற்படுத்தியிருக்கிறார்.

“பெண் குழந்தை பிறந்தால் ஐந்து மரக்கன்றுகளை நடுங்கள். அவை மரமாக வளர்ந்தால், அந்தப் பெண்ணின் திருமணத்துக்கு உதவியாக இருக்கும்” என்று கருத்து சொல்லும் சிந்தனையாளர்கள் நிறைந்த நாட்டைச் சேர்ந்தவர்தான் சாக்‌ஷியும். அவருடைய பெற்றோர் ஐந்து மரக் கன்றுகளை நட்டார்களா என்று தெரியாது. ஆனால், தங்கள் மகளை ஆணுக்கு நிகராக வார்த்தெடுத்திருக்கிறார்கள். பெண்களால் என்ன முடியும் என்ற கற்பிதத்தை உடைத்துப் பெண்களால் எல்லாமே முடியும் என்று நம்பிக்கையுடன் நிமிர்ந்து நிற்கும் சாக்‌ஷி மாலிக், பெண் சக்தியின் மற்றுமொரு அடையாளம்.

தீராத மல்யுத்த தாகம்!

சொல்லிக்கொள்ளும்படி எந்தவொரு பின்புலமும் இல்லாத குடும்பத்திலிருந்து வந்தவர் சாக்‌ஷி. ஹரியாணா மாநிலம் ரோட்டக் மாவட்டத்தைச் சேர்ந்த சுக்பீர் சுதேஷ் தம்பதியின் இளைய மகள். நான்கு வயதுவரை தன் தாத்தாவின் கிராமமான மோக்ராவில் வளர்ந்தாள் சாக்‌ஷி. இந்தியா முழுவதுமே குழந்தை வளர்ப்பில் பாலினப் பாகுபாடு நிலவும்போது ஹரியாணாவும் அதற்கு விதிவிலக்கல்ல. அப்படியான பாகுபாட்டுடன்தான் சிறுமி சாக்‌ஷி வளர்க்கப்பட்டாள்.

ஆறாம் வகுப்புக்குத் தேறிய பிறகு, சாக்‌ஷி தன் பெற்றோரிடமே வந்துவிட்டாள். சாக்‌ஷியின் தாத்தா அந்தப் பகுதியின் பேர்பெற்ற மல்யுத்த வீரர். அதனால்தானோ என்னவோ பொம்மைகளை வைத்து விளையாட வேண்டிய வயதாக மற்றவர்கள் நினைத்திருந்த வயதில் மல்யுத்தத்தைத் தேர்ந்தெடுத்தாள் சாக்‌ஷி. மகளின் விருப்பத்துக்கு மறுப்பேதும் சொல்லவில்லை அவளுடைய பெற்றோர். தன் பத்து வயது மகளை உள்ளூர் மல்யுத்த அகாடமியான சோட்டு ராம் ஸ்டேடியத்துக்கு அழைத்துச் சென்றார் சுதேஷ். தாயும் மகளுமாக வந்த அவர்களை அங்கே யாரும் அத்தனை உவப்புடன் எதிர்கொள்ளவில்லை. ஆண்களுக்கான அரங்கில் இவர்களுக்கு என்ன வேலை என்பதாகத்தான் அனைவரது பார்வையும் இருந்தது. ஆனால், மகளின் கனவைச் சிதைக்கக் கூடாது என்பதில் சாக்‌ஷியின் பெற்றோர் உறுதியாக இருந்ததால் சிறுவர்களுக்கு மத்தியில் பத்து வயது சாக்‌ஷியும் மல்யுத்தம் பழகினார்.

குருவின் வழியில்

உள்ளுக்குள் கனன்றெரியும் நெருப்பைக் கண்டுபிடித்துவிடுகிற குரு அமைவதும் வெற்றிக்கு முக்கியக் காரணம். அப்படியொரு குருவாக சாக்‌ஷிக்கு அமைந்தார் ஈஸ்வர் தஹியா. ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஒரே இடத்தில் மல்யுத்தப் பயிற்சியளித்ததால் கடும் கண்டனத்துக்கு அவர் ஆளானார்.

சமஉரிமைக்கு அர்த்தம் கொடுத்த சாக்‌ஷி

உள்ளுக்குள் கனன்றெரியும் நெருப்பைக் கண்டுபிடித்துவிடுகிற குரு அமைவதும் வெற்றிக்கு முக்கியக் காரணம். அப்படியொரு குருவாக சாக்‌ஷிக்கு அமைந்தார் ஈஸ்வர் தஹியா. ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஒரே இடத்தில் மல்யுத்தப் பயிற்சியளித்ததால் கடும் கண்டனத்துக்கு அவர் ஆளானார்.

“பெண் குழந்தைகளுக்கு மல்யுத்தம் கற்றுத்தந்த என்னைப் பைத்தியம் என்று கேலி செய்தார்கள். அவர்கள் சொல்வதைப் போல பெண்கள் எல்லோரும் பலம் குறைந்த ஆடுகள் அல்ல. ஒலிம்பிக்கில் பதக்கம் வென்று எங்கள் சாக்‌ஷி தன்னை சிங்கம் என்று இப்போது நிரூபித்துவிட்டாள்!” கண்களில் பெருமிதம் பொங்க, தன் மாணவி சாக்‌ஷியைப் புகழ்கிறார் ஈஷ்வர். உள்ளூரில் தன்னுடன் மோதுவதற்குத் திறமையான பெண் போட்டியாளர்கள் இல்லாததால் ஆண்களுடன் போட்டி போட்டிருக்கிறார் சாக்‌ஷி.

2006-ம் ஆண்டு சப் ஜூனியர் பிரிவில் தேசிய அளவில் பதக்கம் வென்றதுதான் சாக்‌ஷியின் முதல் பதக்கம். அதற்கடுத்து எல்லாமே ஏறுமுகம்தான். ரோட்டக்கில் ஏற்கெனவே பல மல்யுத்த வீராங்கனைகள் இருந்தாலும் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கிக்கொண்டார் சாக்‌ஷி. 2014-ம் ஆண்டு நடந்த காமன்வெல்த் போட்டிகளில் வென்ற வெள்ளிப் பதக்கம், சாக்‌ஷியின் இடத்தை உறுதி செய்தது!

மகள் பெற்றோருக்கு ஆற்றிய கடமை

மகளுக்காக வீட்டை விற்றுவிட்டு, பயிற்சி பெறும் அரங்கத்துக்குப் பக்கத்தில் குடியேறிய பெற்றோருக்கு, தன் ஒலிம்பிக் வெற்றி மூலம் மகிழ்ச்சியையும் பெருமிதத்தையும் ஒருசேர அளித்திருக்கிறார் சாக்‌ஷி. அதிகாலையில் எழுந்துவிடுகிற மகளுக்கு எப்போதும் துணைநின்றார் சாக்‌ஷியின் அம்மா சுதேஷ் மாலிக்.

“என் பொண்ணு மல்யுத்தம் செய்யறதைப் பார்த்துட்டுப் பலரும் பலவிதமா பேசினாங்க. இந்த விளையாட்டைப் பொண்ணுங்க விளையாடக் கூடாதுன்னு சொன்னாங்க. மல்யுத்தம் செஞ்சா நளினம் குறைஞ்சு, உடம்பு இறுகிடும், அப்புறம் கல்யாணமே ஆகாதுன்னுகூட சொன்னாங்க. இந்த மாதிரி பேச்செல்லாம் என் பொண்ணு காதுல விழாம பார்த்துக்கிட்டேன். அவளும் கல்யாணம், விசேஷம்னு எதுலயும் ஆர்வமா கலந்துக்க மாட்டா. இன்னைக்கு இந்த வெற்றி மூலமா எல்லாருக்கும் அவ பதில் சொல்லிட்டா” என்று மகளின் வெற்றியைக் கொண்டாடுகிறார் சாக்‌ஷியின் அம்மா.

அடுத்தடுத்துக் காணப்போகும் களங்களுக்காகக் காத்திருக்கிற சாக்‌ஷி, “இந்த வெற்றி, இரவு பகல் பாராமல் நான் எடுத்துக்கொண்ட 12 ஆண்டு பயிற்சிக்கான பரிசு!” என்று சொல்லியிருக்கிறார்.

போட்டி முடிந்த பிறகு, “சோர்வாக இருக்கிறதா?” என்று கேட்ட அம்மாவிடம், “பதக்கம் வென்ற பிறகு யாருக்காவது சோர்வு இருக்குமா அம்மா?” என்று கேட்ட சாக்‌ஷிக்கு, வீட்டுக்குத் திரும்பியதும் ஆலு பராத்தா சாப்பிட வேண்டும் என்று ஆசையாக இருக்கிறதாம்!

பாடம் கற்போம்

தங்கள் மகள் பதக்கம் வென்ற நொடியைக் கண்ணீர் மல்கத் தொலைக்காட்சியில் பார்த்துக்கொண்டிருந்தார் சாக்‌ஷியின் அப்பா. அம்மாவோ ஆனந்தக் கூத்தாடினார். வாழ்த்து சொல்கிறவர்களுக்கு நன்றி சொல்லியே களைத்துப்போனார் சாக்‌ஷியின் அண்ணன் சச்சின். சாக்‌ஷியின் குடும்பம் மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவுமே இந்த வெற்றியைக் கொண்டாடித் தீர்த்தது.

சாக்‌ஷியின் வெற்றி ஒரு நிதர்சனத்தை உணர்த்தியிருக்கிறது. நம் நாட்டில் பெண் குழந்தைகள் மீதான வெறுப்பு ஆண் பெண் பிறப்பு விகிதத்தில் பெரும் ஏற்றத்தாழ்வை ஏற்படுத்திவருகிறது. நாட்டின் ஒட்டுமொத்த விகிதத்துடன் ஒப்பிடும்போது ஹரியாணா மாநிலத்தில் பெண் குழந்தை பிறப்பு விகிதம் குறைவு. பெண் குழந்தைகளைக் கருவிலேயே கொல்லாமல், அவர்களுக்கு சமஉரிமையும் வாய்ப்பும் கொடுத்தால் அவர்கள் எத்தனை பெரிய சிகரத்தையும் அடைவார்கள் என்பதை சாக்‌ஷி போன்றவர்கள் நிரூபித்துக்கொண்டிருக்கிறார்கள்!

இப்படியாக, ஒலிம்பிக் போட்டியில் இந்தியா பதக்கமே வெல்லாதோ என்ற தவிப்பைத் தன் வெற்றியின் மூலம் தீர்த்துவைத்தார் சாக்‌ஷி. அந்த நம்பிக்கையை தன் வெற்றியால் நீட்டித்தார் பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து. ஜிம்னாஸ்டிக் போட்டியில் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்று, நான்காவது இடத்தைப் பெற்றதன் மூலம் இந்தப் பிரிவில் தேர்வான முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றிருக்கிறார் தீபா கர்மாகர். இப்படி, 2016 ஒலிம்பிக்கில் இந்தியக் கொடியை உயர்த்திப் பிடித்த அனைவருமே பெண்கள்! வீட்டில் மட்டுமல்ல, சமூகத்திலும் பெண்களின் விளையாட்டுப் பங்களிப்புக்கு ஊக்கமளிக்க வேண்டிய நேரம் இது. அரசாங்கம் முனைப்புடன் செயல்பட்டால் வரும் ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கப் பட்டியல் நிச்சயம் நீளும்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x