Published : 12 Jun 2016 09:00 AM
Last Updated : 12 Jun 2016 09:00 AM

திரை விமர்சனம்: ஒரு நாள் கூத்து

மூன்று பெண்களின் திருமண வாழ்க்கை தொடங்குவதற்கு முன் நடக்கும் கூத்துதான் ‘ஒரு நாள் கூத்து’.

மென்பொருள் துறையில் வேலை செய்யும் உயர்தட்டு வர்க்கத்துப் பெண் (நிவேதா பெதுராஜ்), பண்பலை வானொலித் தொகுப்பாளராக இருக்கும் நடுத்தர வர்க்கத்துப் பெண் (ரித்விகா), அப்பா, அம்மாவுக்குக் கீழ்ப்படிந்து பொறுமை காக்கும் கிரா மத்துப் பெண் (மியா ஜார்ஜ்) ஆகியோர் தங்கள் திரு மணத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். மூவ ருக்கும் மூன்று விதமான பிரச்சினைகள். அவற்றை அவர்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள், அவர்கள் எதிர்பார்ப்பு நிறைவேறியதா என்பதுதான் படம்.

திருமணத்துக்கு முந்தைய பரபரப்புகள், நடை முறைச் சிக்கல்கள், அதனால் ஏற்படும் அழுத்தங் கள், வலிகளைக் காட்சிப்படுத்திய விதத்தில் ஈர்க் கிறார் அறிமுக இயக்குநர் நெல்சன் வெங்கடேசன். சங்கர் தாஸும் இவரும் இணைந்து கதை, திரைக் கதை, வசனத்தை எழுதியிருக்கிறார்கள். திருமணத் துக்காகக் காத்திருந்து கனவு காண்பவர்கள், கனவு களில் பொசுங்கிப்போகிறவர்கள் ஆகியோரில் ஆண் களைவிடப் பெண்களே அதிகம் என்பதை யதார்த்தத் துக்கு நெருக்கமாகச் சித்தரித்திருக்கிறார் இயக்குநர்.

பெண் கதாபாத்திரங்கள் மட்டுமல்ல; இவர்கள் சார்ந்து நிற்கிற காதலன், வரன், தோழன், அப்பா, அண்ணன் என ஆண் கதாபாத்திரங்களும் நம் மத்தியில் உலவிக்கொண்டிருக்கிற, நம்மைக் கடந்துபோகிற கதாபாத்திரங்களாகவே உருப் பெற்றிருக்கிறார்கள். இதனால் படத்துடன் எளிதாக ஒன்றிவிட முடிகிறது.

மூவரின் பிரச்சினைகளும் அவை வெவ்வேறு பரி மாணங்களை எடுக்கும் விதமும் நம்பகத் தன்மை யுடன் காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன. திரைக்கதையை உயிர்ப்புடன் நகர்த்திச் செல்லும் பல சம்பவங்கள் யதார்த்தத்துக்கு அருகில் இருப்பவை. இவற்றைக் காட்சியாக்கிய விதமும் வசனங்களை அளவாகப் பயன்படுத்திய விதமும் பாராட்டத்தக்கவை.

காட்சிகளைப் போலவே வசனங்களும் இயல்பாக வும் தேவையான இடங்களில் அழுத்தமாகவும் உள்ளன. மியா ஜார்ஜ் தன் தோழியிடம் பேருந்து நிறுத்தத்தில் பேசும் காட்சி போகிறபோக்கில் நடைமுறை யதார்த்தங்களைப் பேசிவிட்டுச் செல்கிறது. மொட்டை மாடியில் மியாவும் அவர் தோழியும் பேசும் இடமும் நன்றாக அமைந்துள்ளது. கடைசிக் காட்சியில் தன் அப்பாவுக்கு நிவேதா சொல்லும் பதில் கூர்மையானது.

மூன்று பெண்களின் பிரச்சினைகளும் தனித் தனிப் பாதைகளில் பயணிக்கின் றன. இவற்றை இணைக்கும் கிளை மாக்ஸ் திருப்பம் செயற்கையாகத் திணிக்கப்பட்டதாக உள்ளது. நிவேதாவின் பிரச்சினை உருப் பெற்ற அளவுக்கு ரித்விகா, மியா ஜார்ஜ் ஆகியோரின் பிரச்சினை கள் நம்பகத் தன்மையோடு உருப்பெறவில்லை.

தினேஷ் தனது தன்னிலை விளக்கத்தைத் தன் காதலியிடம் மிக மிகத் தாமதமாக ஏன் தெரிவிக்க வேண்டும்? மியாவை விரும்பும் இளைஞன், அவரைச் சென்னைக்கு வரும்படி சொல்வதும் நம்பகத்தன்மை யுடன் அமையவில்லை. எதிர்மறையான முடிவுக்காக மெனக்கெட்டு யோசித்ததுபோலவே இறுதிக் கட்டம் உள்ளது.

சாமானியக் குடும்பத்தில் பிறந்து, படித்து முன் னேறி, தன் குடும்பத்துக்கான கடமைகளிலிருந்து காத லுக்காகத் தப்பிக்க விரும்பாத பாத்திரம் தினேஷுக்கு. தன்னைவிட உயர்ந்த அந்தஸ்து கொண்ட காதலியை விடவும் முடியாத, உடனடியாக ஏற்கவும் முடியாத தத்தளிப்பை நன்கு வெளிப்படுத்துகிறார்.

பார்வையாலேயே தன் மனநிலையை வெளிப் படுத்தும் மியா ஜார்ஜின் நடிப்பு கவனிக்கத்தக்கது. அவரை முதிர்கன்னியாகச் சித்தரிக்க முயன்ற இயக்குநருக்குத் தோல்விதான்.

அறிமுக நடிகை நிவேதா பெதுராஜ் அப்பாவுக்கும் காதலனுக்கும் இடையிலான ஊடாட்டத்தில் நசுங்கும் நவயுகப் பெண்ணாக, காதல் தரும் கிளர்ச்சி, பிரிவு தரும் தவிப்பு, விலகலின் வலி, தீர்க்கமாக முடிவெடுக் கும் துணிச்சல் என்று பலவித உணர்ச்சிகளையும் நன்கு வெளிப்படுத்தி ஆச்சரியப்பட வைக்கிறார்.

ஆர்.ஜே.வாக வரும் ரித்விகா, மைக்கின் முன் பேசும் தோரணை, நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளையிடம் கெஞ்சும் விதம் ஆகியவற்றில் காட்டும் துல்லியம் அவரது நடிப்பின் முதிர்ச்சியைக் காட்டுகிறது. தொண்டையை அடைக்கும் துக்கத்தையும் மீறித் தத்துவம் சொல்லி நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் ரித்விகாவின் நடிப்பு அபாரம்.

ரமேஷ் திலக், கருணாகரன், சார்லி, பால சரவணன் ஆகியோர் தத்தமது பாத்திரங்களில் நன்கு பொருந்தியிருக்கிறார்கள்.

கோகுல் பினோயின் கேமரா, ஐடி உலகம், பண்பலை அலுவலகச் சூழல், கிராமத்துப் பின்புலம், நகர்ப்புற வாழ்க்கை ஆகியவற்றை இயல்பாகத் திரையில் காட்டியிருக்கிறது.

ஜஸ்டின் பிரபாகரின் பின்னணி இசை கதையை விட்டு விலகாமல் ஒலிக்கிறது. ‘அடியே அழகே', ‘எப்போ வருவாரோ' பாடல்களிலும், பின்னணி இசையிலும் தன்னுடைய முத்திரையை அழுத்தமாகப் பதித்திருக்கிறார். பிசிறின்றி மூன்று கதைகளையும் தொகுத்த விதத்தில் படத் தொகுப்பாளர் வி.ஜே.சாபு ஜோசப் கவர்கிறார்.

மூன்று இழைகளை வைத்துப் படத்தை உருவாக்கியிருக்கும் இயக்குநர், அவற்றை இணைக்கும் சவாலில் சறுக்கியிருக்கிறார். என்றாலும் வெவ்வேறு பின்புலங்களில் வெவ்வேறு வடிவம் எடுக்கும் ஒரு பிரச்சினை பற்றிய நேர்த்தியான பதிவைச் சுவையாகத் தந்ததற்காக அவரைப் பாராட்டலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x