Last Updated : 27 Nov, 2013 12:00 AM

 

Published : 27 Nov 2013 12:00 AM
Last Updated : 27 Nov 2013 12:00 AM

சிங்க ராஜாவும் நரி மந்திரியும்

காட்டு ராஜாவான அந்த சிங்கத்துக்கு வயசாயிடுச்சி. அதால வேட்டையாட முடியல. வேகமா ஓடக்கூட முடியல. அதனால சாப்பிட எதுவும் கிடைக்காம அது ரொம்ப கஷ்டப்பட்டது. பாவம், சில நாள் அது பட்டினி கிடக்கும்.

எத்தனை நாள்தான் இப்படியே இருக்கறது? சாப்பாட்டுக்கு ஏதாவது செய்தாகணுமே? மண்டையைப் பிச்சுக்கிட்டு யோசிச்சது.

ஒரு ஐடியா கிடைச்சுது. உணவைச் சேகரிச்சிட்டு வர ஒரு உதவியாளை நியமிக்க முடிவுசெஞ்சது.

உடனடியா நினைவுக்கு வந்தது குள்ள நரிதான். நரியைத் தவிர வேறு யாரும் இந்த மாதிரி வேலைக்குச் சரிபட்டுவர மாட்டாங்கன்னு நினைச்சுது.

உடனே சிங்கம் நரியை வரவழைச்சுது.

“இனிமேல் நீதான் என் மந்திரி. உன்னைக் கேட்டுதான் எதையும் செய்வேன்”ன்னு சொல்லுச்சி.

நரியால் சிங்கத்தின் பேச்சை நம்ப முடியல. ஆனா ராஜா பேசும்போது மறுத்துப் பேச முடியுமா?

“ராஜா, உங்களுக்கு மந்திரியா இருக்கறது என் அதிர்ஷ்டம்”ன்னு நரி சொல்லுச்சி.

கிழச்சிங்கத்துக்கு ஒரே சந்தோஷம். “நீ என்ன செய்யணும்னு சொல்றேன் கேடடுக்கோ. உனக்கே தெரியும், இந்தக் காட்டுக்கே நான்தான் ராஜா. ஒரு ராஜா உணவுக்காக மத்த விலங்குங்க பின்னாடி ஓடினா அது பார்க்கறதுக்கு நல்லாயிருக்குமா? அதனால, எனக்குத் தேவையான உணவை எப்படியாவது ஏற்பாடு பண்றதுதான் உன் முதல் வேலை” என்றது சிங்கம்.

நரி பயந்துபோச்சு. சிங்கத்துக்கு எப்படி நம்மால சாப்பாடு போட முடியும்னு யோசிச்சது.

சிங்கம் விடவில்லை. “நீ ஒரு நாளைக்கு ஒண்ணுன்னு தினமும் ஒரு விலங்கை எனக்காகக் கூப்பிட்டு வரணும். நீதான் கெட்டிக்காரனாச்சே. ரொம்ப சுலபமா செஞ்சிடுவேன்னு எனக்குத் தெரியும்” என்றது.

நரி ஒப்புக்கொண்டது. வேறு வழி?

சிங்கத்துக்காக உணவு தேடும் வேலையில் இறங்கியது நரி. அப்போ ஒரு கழுதை எதிரில் வந்தது. கழுதையிடம் போய், “நண்பா, எங்கே ரொம்ப நாளா ஆளையே காணோம்? எங்க போயிட்ட?” என்றது.

“இங்கேயேதானே நான் சுத்திக்கிட்டு இருக்கேன்? என்ன விஷயம்?”னு கேட்டுச்சி கழுதை.

“நீ ரொம்ப அதிர்ஷ்டக்காரன். நம்ம சிங்க ராஜா உன்னை முதல் மந்திரியா தேர்ந்தெடுத்திருக்காரு” என்றது.

“சிங்கமா!” வாயைப் பிளந்தது கழுதை. “ஐயோ எனக்கு சிங்கத்தைப் பார்த்தாலே பயம்பா. அவர் ஒரே அடியில என்னைக் கொன்னு சாப்பிட்டிடுவாரு. அவரு எதுக்காக என்னை முதல் மந்திரியா ஆக்கணும்? ஆளை விடுப்பா” என்றது கழுதை.

“பயப்படாதே. நீ மட்டும் முதன் மந்திரியா ஆயிட்டேன்னு வச்சிக்கோ, உன் நிலைமை எங்கேயோ போயிடும். ராஜாவுக்கு அடுத்தபடியா நீதான். எல்லா விலங்குகளும் உனக்கு மரியாதை தரும். எதாவது காரியம் ஆகணும்னா உன் பின்னாடிதான் வருவாங்க” என்றது நரி.

அப்பாவியான கழுதை, நரியின் பேச்சை நம்பிடுச்சி. சிங்கத்தைப் பார்க்க நரியோட போச்சு.

நரியும் கழுதையும் சிங்கத்தின் இருப்பிடத்தை அடைந்தன. சிங்கம் கழுதையைப் பார்த்துச் சிரிச்சுக்கிட்டே, “வா நண்பா. இன்னிலேர்ந்து நீ என்னோட முதல் மந்திரி”ன்னு சொல்லுச்சு.

கழுதைக்கு மகிழ்ச்சி தாங்கல. வெட்கத்துடன் தலை குனிந்தபடி சிங்கத்துக்குப் பக்கத்தில் வந்தது. சிங்கம் அதன் தலையில் ஓங்கி ஒரு அடி அடிச்சது. கழுதை அந்த நிமிஷமே உயிரை விட்டது.

சிங்கம் கழுதையைச் சாப்பிட ஆரம்பித்தது. நரி சும்மா இருக்குமா? “மகாராஜா, கொஞ்சம் பொறுங்க. என்னதான் பசியா இருந்தாலும் ஒரு ராஜா குளிக்காம சாப்பிடக்கூடாது இல்லையா?”ன்னு கேட்டுச்சி.

சிங்கம் அதை ஒப்புக்கிட்டு குளிக்கப் போச்சு.

நரி கழுதையின் உடலைப் பார்த்தது. அதற்கும் ஒரே பசி. கழுதையின் தலையைக் கிழிச்சு, மூளையை எடுத்துச் சாப்பிட்டது.

குளிச்சுட்டு வந்த சிங்கம் கழுதையின் உடல் முன்பு போல் இல்லைன்னு கண்டுபிடிச்சுடுச்சி. “கழுதையோட தலை ஏன் கிழிஞ்சிருக்கு? உள்ளே ஒண்ணுமே இல்லையே?”ன்னு கேட்டுச்சி.

“என்ன மகாராஜா! உங்களுக்குத் தெரியாதா? கழுதைகளுக்கு எல்லாம் மூளையே கிடையாது”ன்னு சொல்லுச்சு.

சிங்கம் நம்பல. “அது எப்படி மூளை இல்லாம இருக்கும்? பொய் சொல்லாதே”ன்னு சொல்லுச்சு.

“கழுதைக்கு மூளை இருந்திருந்தா என்கூட வந்திருக்குமா?”ன்னு கேட்டுச்சு நரி.

நரி சொல்வது சரிதான்னு சிங்கமும் அமைதியாகிடுச்சு.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x