Published : 11 Nov 2014 09:02 AM
Last Updated : 11 Nov 2014 09:02 AM

திரை விமர்சனம்: ஜெய்ஹிந்த் 2

‘ஜெய்ஹிந்த்’ படம் நாட்டை வேட்டை யாட வரும் தீவிரவாதிகளைக் குறி வைத்தது. ‘ஜெய்ஹிந்த் 2’ படம், ‘கல்விக் கொள்ளை’யைக் குறிவைக்கிறது. இயக்குநராகவும் களமிறங்கும் அர்ஜுன் இன்றைய போக்கிற்கு ஏற்பச் சமூகப் பிரச்சினை ஒன்றைக் கையில் எடுத்தி ருக்கிறார்.

காவல்துறையில் சேர வேண்டும் என்று கமாண்டோ பயிற்சி முடித்துவிட்டுக் காத்திருக்கும் அபிமன்யு (அர்ஜுன்), வேலையில் சேர லஞ்சம் கொடுக்க மறுத்து, கராத்தே பள்ளியை நடத்தி வாழ்க் கையை ஓட்டிவருகிறான். அபிமன்யுவின் கட்டுடல், சண்டைத் திறனைப் பார்த்து அவனைக் காதலிக்கிறாள் நந்தினி (சுர்வின் சாவ்லா).

தனியார் பள்ளி கேட்கும் கட்டணத் தையும் நன்கொடையையும் தந்து தனது 4 வயது மகளைச் சேர்க்கமுடியாமல் போகும் ஒரு ஏழைத் தொழிலாளியின் குடும்பம் தற்கொலை செய்துகொள்கிறது. இதைக் கண்டு அதிரும் அபிமன்யு, தனியார் பள்ளிகளுக்கு எதிராகப் போர் தொடுக்கிறான். ஊடகங்களைக் கூட்டி ‘‘அனைத்து தனியார் பள்ளிகளையும் நாட்டுடமையாக்க வேண்டும்’’ என்கி றான். ஊடகங்கள் அந்தக் கருத்தை எடுத்துச் செல்ல, தனியார் பள்ளிகளின் முதலாளிகள், அபிமன்யுவை ஒழிக்க வியூகம் வகுக்கிறார்கள். வில்லனின் சூழ்ச்சியால், செய்யாத கொலைக்கு விசாரணைக் கைதியாகச் சிறையில் இருக்கும் நாயகன் எப்படி வெளியே வருகிறான், தனது லட்சியத்தில் எப்படி வெல்கிறான் என்பதே ஜெய்ஹிந்த் 2.

நிஜமான ஒரு பிரச்சினையைக் கையில் எடுத்ததற்காக இயக்குநர் அர்ஜு னுக்கு சபாஷ் போடலாம். ஆனால் பிரச்சினையைச் சித்தரித்த விதத்தில் யதார்த்தத்தைக் கோட்டைவிட்டி ருக்கிறார். எல்.கே.ஜி. சீட் கிடைக்காததால் குடும்பமே தற்கொலை செய்துகொள்வது போன்ற அதீதமான காட்சிகள் படத்தின் நம்பகத்தன்மையைக் குறைக்கின்றன. வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் படிக்கும் தனியார் பள்ளி முதலாளிகளின் வாரிசுகளைக் கடத்தி அவர்களைப் பணியவைக்கிறார். ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் என்னும் ஹீரோவுக்கு இது பொருந்தலாம். ஆனால் பிரச்சினையின் நிஜமான தீவிரத்தையும் அதற்கான நடை முறை சார்ந்த தீர்வையும் சித்தரிக் காமல் அதிரடிப் புழுதியில் யதார்த் தத்தை மறைப்பதாகவே இது அமைந்து விடுகிறது. கிளைக் கதைகளைக் கையாண்ட விதமும், அவற்றைத் திரைக் கதையுடன் இணைத்த விதமும் பலவீனமாகவே இருக்கின்றன.

கோடி கோடியாய் பணம் சேர்த்த தனியார் பள்ளி முதலாளிகள், அர்ஜுனைப் பார்த்து ‘‘உங்கள் லட்சியத்துக்காக நாங்கள் என்ன செய்ய வேண்டும் சொல் லுங்க’’ என்று பொங்கும்போது மொத்தத் திரையரங்கமும் சிரிப்பலையில் அதிர்கிறது! படத்தில் பேசப்படும் பிரச் சினை எந்த அளவுக்கு தீவிரமாக சூழலை உருவாக்கி சொல்லப்பட்டது என்பதற்கு இது ஒரு சான்று.

குடிமக்கள் அனைவருக்கும் ஒரே விதமான தரத்தில் கல்வி கிடைக்க வேண்டும் என்று வலியுறுத்தும் படத்தில் கல்வித் துறை பற்றியும், கல்வித் தரம் பற்றியும் முன்வைக்கப்படும் கருத் துக்கள் நறுக்கென்று இருந்தாலும், மத்தியக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) தனி ஆவர்த்தனத்தை இயக்குநர் வசதி யாக மறந்துவிட்டார்.

அர்ஜுன் ஆக்‌ஷன் காட்சிகளில் அதகளம் பண்ணியிருக்கிறார். சிறைச் சாலை சண்டைக் காட்சியிலும் கிளை மாக்ஸ் காட்சியில் கம்பிவலைக் கூட்டுக்குள் குரங்குபோலத் தாவித் தாவித் தாக்கும் காட்சியிலும் தன் திறமையைக் காட்டியிருக்கிறார். இங்கி லாந்தில் பழைய விமானங்கள், ஹெலிகாப்டர்கள் நிறுத்திவைக்கப் பட்டிருக்கும் யார்டில் மாணவர்களை மீட்கும் விறுவிறுப்பான காட்சி, ஷங்கர் ஸ்டைல்!

நாயகி சுர்வினுக்குக் கதையில் முக்கியத்துவம் இல்லை. புதுமுக நடிகை சிம்ரன் கபூர் கவர்ச்சிக்காக மட்டும் பயன்படுத்தப் பட்டிருக்கிறார். பிரம்மானந்தத்தின் காமெடி எடுபடவில்லை.

அர்ஜுன் இயக்கிய படங்களில் இதமான பாடல்கள் இருக்கும். இந்தப் படத்தில் அது இல்லை. ஆனால் பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ள விதம் நன்றாக உள்ளது. என்.சி.வேணு கோபாலின் ஒளிப்பதிவு சிறப்பு.

ஆனாலும், திரைக்கதையை மேலும் செப்பனிட்டு, சமூகப் பிரச்சினையைக் கையாள்வதில் கனம் கூட்டியிருக்கலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x