Published : 03 Mar 2017 09:38 AM
Last Updated : 03 Mar 2017 09:38 AM

கோலிவுட் கிச்சடி: வசனத்துக்கு வாழ்க்கை

ரஜினியின் பிரபலமான பழைய படத் தலைப்புகளை விற்பதும் வாங்குவதும் ஒரு தொழில்போல நடந்துகொண்டிருக்கிறது கோடம்பாக்கத்தில். 'முள்ளும் மலரும்' படத்தில் ரஜினி பேசிய “கெட்ட பையன் சார் இந்தக் காளி” என்னும் புகழ்பெற்ற வசனத்தைச் சற்றே மாற்றி, ‘கெட்ட பையன் சார் இவன்’ என்ற தலைப்பில் படமாக இயக்குகிறார் தீபக் சுந்தராஜன். இவர் பல வெள்ளிவிழாப் படங்களை இயக்கிய மூத்த இயக்குநர் ஆர். சுந்தராஜனின் மகன். இந்தப் படத்துக்கு இசையமைக்கும் ஏ.எச். காஷிஃப்பும் வாரிசுக் கலைஞர்தான். ஏ.ஆர் .ரஹ்மானின் தங்கை மகன். படத்தின் நாயகன் ‘சதுரங்க வேட்டை’ புகழ் நட்டி என்கிற நடராஜ்.

சோனியாவின் சாகசம்

ஒன்றல்ல, இரண்டல்ல… தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி என ஐந்துமொழிகளில் தயாராகியிருக்கும் ‘அகல்யா’ என்கிற திகில் படத்தில் நடித்து முடித்திருக்கிறார் சோனியா அகர்வால். நாயகன் இல்லாத இந்தப் படத்தில் ஆவிகளை வேட்டையாடி அழிக்கும் சாகசப் பெண்ணாக நடித்திருக்கிறாராம். “பிரபலமான பல பிராண்டுகளுக்கு விளம்பரங்களை இயக்கிய அனுபவத்துடன் ஹாலிவுட் ஹாரர் பாணி படமாக இதை இயக்கியிருக்கிறேன்” என்கிறார் கேரளத்திலிருந்து இங்கே பூச்சாண்டி காட்ட வந்திருக்கும் ஷிஜின்லால்.

மறுத்த நயன்தாரா

ஒரு நட்சத்திர நாயகனை மனதில் வைத்து உருவாக்கப்படும் கதை அவரால் நிராகரிக்கப்பட்டால் அதில் மற்றொரு முன்னணி நாயகன் நடிப்பார். இந்த ‘ரெடிமேட்’ அம்சம் தற்போது கதாநாயகிகளுக்கும் பொருந்த ஆரம்பித்துவிட்டது. ‘யாமிருக்க பயமே’,, ‘கவலை வேண்டாம்’படங்களை இயக்கிய டீகேவிடம் கதைச் சுருக்கத்தைக் கேட்டு நயன்தாரா கால்ஷீட் தருவதாக ஒப்புக்கொண்டிருக்கிறார். திரைக்கதை ரெடியான பிறகு அதைக் கேட்கக்கூட நேரமில்லாத அளவுக்கு ஐந்து படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார் நயன். இதனால் அந்தக் கதையை காஜல் அகர்வாலிடம் இயக்குநர் கூற உடனே ஓகே சொல்லிவிட்டாராம் அவர். நயன் மறுத்த திகில் நகைச்சுவைக் கதையில் தற்போது அழகிய ஆவியாக வலம் வர இருக்கிறாராம் காஜல்.

‘இலை’யாகும் ஸ்வாதி

மலையாளத்தில் ‘சுதி வாத்மீகம்’ படத்தின் மூலம் அறிமுக மாகிப் பாராட்டப்பட்டவர் ஸ்வாதி நாராயணன். தனது அடுத்த படத்துக்கு கோடம்பாக்கம் வந்துவிட்டார். “ திண்டுக்கல் அருகே ஒரு கிராமத்தில் 1991-ம் ஆண்டு நடந்த உண்மைக் கதையை இயக்குநர் பினிஷ் ராஜ் படமாக்கியிருக்கிறார். பெண்களைப் பள்ளிக்கு அனுப்பக் கூடாது என்ற ஊர்க் கட்டுப்பாடு கொண்ட ஒரு கிராமம். அங்கிருந்து பல்வேறு தடைகளைத் தாண்டி படித்து பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் சாதனை படைக்கும் ஒரு ஏழைப் பெண்ணின் கதை. கதையைக் கேட்டதும் அழுதுவிட்டேன். விறுவிறுப்பான ஸ்போர்ட்ஸ் படம் பார்ப்பதுபோல் இருக்கும். ‘இலை’ என்ற எனது கதாபாத்திரம் மறக்க முடியாத ஒன்றாக மாறும். இந்தப் படத்துக்காக வெயிலில் கறுத்து நடித்தேன்” என்கிறார் ஸ்வாதி.

பசுவும் படப்பிடிப்பும்

இளம் இசையமைப்பாளர்கள் பலரும் கதாநாயகர்களாக அவதாரம் எடுத்துக்கொண்டிருக்கும் சீசன் இது. கொஞ்சம் வித்தியாசமாக மூத்த இசையமைப்பாளர் சிற்பி தனது மகன் நந்தன்ராமை‘பள்ளிப் பருவத்திலே’ படத்தின் மூலம் நாயகனாக அறிமுகப்படுத்துகிறார். வாசுதேவ் பாஸ்கர் இயக்கும் இந்தப் படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகிறார் வெண்பா.இவர் ‘கற்றது தமிழ்’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவராம். அழிந்து வரும் விவசாயத்தை இளைஞர்கள் நினைத்தால் காப்பாற்றலாம் என்பதைக் காதல் கதையுடன் கூறவரும் இந்தப் படம் முழுவதையும் காவேரி டெல்டா பகுதியில் படமாக்குகிறார்களாம். படப்பிடிப்பின் முடிவில் 100 நலிந்த விவசாயக் குடும்பங்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு நாட்டுப் பசுக்களை தானமாக வழங்கப்போவதாக அறிவித்திருக்கிறது படக்குழு.

ஆஸ்கர் சந்திப்பு

இயக்குநர் விக்னேஷ் சிவன், சூரியா நடிப்பில் தற்போது ‘தானா சேர்ந்தக் கூட்டம்’ படத்தை இயக்கிவருகிறார். படப்பிடிப்பு முடியும் தறுவாயில் இருக்க, திடீரென்று ரஜினியை சந்தித்துத் திரும்பியிருக்கிறார் சிவன். அதைப் புகைப்பட ஆதாரத்துடன் தனது ட்விட்டர் தளத்தில் பகிர்ந்திருக்கும் அவர் “இந்த நாள் இறைவன் எனக்குத் தந்த ஆஸ்கர்” என்று குறிப்பிட்டுள்ளார். ரஜினிக்கு விக்னேஷ் சிவன் கூறிய கதை பிடித்திருக்குமா?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x