Last Updated : 26 Mar, 2017 12:59 PM

 

Published : 26 Mar 2017 12:59 PM
Last Updated : 26 Mar 2017 12:59 PM

நம்மைச் சுற்றி: கொள்ளைகொண்ட குரலும் சர்ச்சைக்குரிய எதிர்ப்பும்

ஓவியம், இசை, பாடல், கவிதை போன்ற கலைகள் எல்லாம் எல்லோருக்கும் கைவந்துவிடுவதில்லை. அதனால்தான் கலைஞர்களை நாம் மிகவும் உயர்வாக மதிக்கிறோம். அப்படிப்பட்ட கலைஞர்களில் ஒருவர் நஹீத் அஃப்ரின். தன்னுடைய இனிமையான குரலால் கோடிக்கணக்கான இதயங்களைக் கொள்ளைகொண்டவர்!

புகழ்பெற்ற இந்தித் தொலைக்காட்சி அலைவரிசை ஒன்றில் நடைபெற்ற குழந்தைகளுக்கான பாட்டுப் போட்டியில் 16 வயது நஹீத் அஃப்ரின் கலந்து கொண்டு, இரண்டாவது இடத்தைப் பிடித்தார். இந்தித் திரைப்படங்களிலும் பாடிவருகிறார். மேடை நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார். இவரின் குரலுக்காகவே மக்கள் அலைகடலெனத் திரண்டுவருகிறார்கள்.

அசாம் மாநிலத்தைச் சேர்ந்த நஹீத் அஃப்ரினுக்குத் தற்போது, 46 இஸ்லாம் குருமார்கள் ‘ஃபத்வா’விதித்து, மதம் வகுத்த வழியை மீறி இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்பதா என்ற கேள்வியும் எழுப்பியுள்ளனர்.

ஃபத்வா மூலம் மனத்தளவில் பாதிக்கப்பட்டிருக்கிறார் நஹீத் அஃப்ரின். “ நான் குழந்தையிலிருந்தே பாடிவருகிறேன். இஸ்லாமியப் பாடகர்களின் பாடல்கள்தான் என்னையும் பாடத் தூண்டின. எனக்கு எதிராக ஃபத்வா விதிக்கப்பட்டிருப்பதைத் தொலைக்காட்சியில் பார்த்துத்தான் தெரிந்துகொண்டேன். அதிர்ச்சியாக இருந்தது. எனக்கு ஆதரவாக இஸ்லாமியப் பாடகர்கள் பலர் குரல் கொடுத்துள்ளனர். கடவுள் எனக்குக் கொடுத்த பரிசு இனிமையான குரல். அதைச் சரியான வழியில் கொண்டுசெல்வேன். எந்தக் காரணத்துக்காவும் நான் பாடுவதைக் கைவிடமாட்டேன்” என்று தன் வலிமையான கருத்தைத் தெரிவித்திருக்கிறார் நஹீத் அஃப்ரின்.

அசாம் முதல்வர் உட்பட பல்வேறு தரப்பிலிருந்தும் நஹீத் அஃப்ரினுக்கு ஆதரவுக் குரல்கள் எழுந்தவண்ணம் உள்ளன. அதேசமயம், ‘இது ஃபத்வா அல்ல, ஒரு வேண்டுகோள்தான்’ என்று அசாம் முஸ்லிம் சட்ட வாரியம் விளக்கம் அளித்துள்ளது

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x