Published : 02 Dec 2013 10:53 AM
Last Updated : 02 Dec 2013 10:53 AM

சிம்புவுடன் நடிக்க நயன்தாரா போட்ட நிபந்தனைகள்

சிம்புவுடன் மீண்டும் இணந்து நடிக்க நயன்தாரா எப்படி ஒப்புக்கொண்டார் என்பது பற்றித்தான் கோலிவுட் முழுக்க இன்னும் பரபரப்பாய் பேசிக்கொண்டிருக்கிறது. ‘வல்லவன்’ படத்தில் நடித்தபோது சிம்புவுடன் ஏற்பட்ட நெருக்கத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் அத்தனையும், இணையத்தில் வெளியானபோது நயன் அடைந்த மனவேதனைக்கு அளவே இல்லை. அவர் அறையை விட்டு வரவே மூன்று நாட்கள் பிடித்தது என்றார் அவரது முன்னாள் ஒப்பனை உதவியாளர். ஆனால் காலம் எல்லாக் காயங்களையும் குணப்படுத்தி விட்டதையே, நயன்தாராவின் தற்போதைய மனநிலை படம் பிடித்துக் காட்டுகிறது.

சிம்புவுடன் மீண்டும் நடிக்க ஒப்புக்கொண்ட பின், பாண்டிராஜின் அலுவலகத்திற்குச் சென்று சில விஷயங்களை உறுதியாகப் பேசிகயிருக்கிறார் நயன். படத்தைப் பற்றி ஃபேஸ்புக்கில் நிலைத் தகவல்களை வெளியிடும்போது, தன்னைப்பற்றிய செய்திகளை அறவே தவிர்த்து விடவேண்டும் என்று சிம்புவைக் கேட்டுக்கொண்டிருக்கிறாராம் நயன். அதேபோலப் படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவர் சிம்பு என்பதால், படத்துக்கு விளம்பரக் கேம்பைன்கள் செய்யும்போது, வ் ‘ராஜா ராணி’க்குச் செய்ததுபோல எந்த ’கிம்மிக்’ வேலையிலும் ஈடுபடக்கூடாது என்றும் திட்டவட்டமாக சொல்லியிருக்கிறாராம். இந்த நிபந்தனைகளுக்கு சிம்பு ஒப்புக்கொண்ட பிறகே ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுக் கொடுத்தாராம் நயன்தாரா.

இத்தனை தெளிவாகத் தனது மறுபிரவேசத்தை திட்டமிட்டுவரும் நயன்தாராவுக்கு தமிழ்த்திரையில் இருக்கிற மரியாதையும் அவருக்கான இடமும் இன்னும் அப்படியே இருப்பதற்குக்கு என்ன காரணமாக இயக்கக முடியும் என்பது பலருக்கும் புரியாத புதிர். ஆனால் நிஜமான காரணம் நயந்தராவின் ’டெடிகேஷன்’ என்கிறார்கள் அவரை வைத்துப் படத்தை இயக்கிய இயக்குநர்கள்.

‘ராஜா ராணி’ படப்பிடிப்புக்கு ஒருநாள் கூட நயன்தாரா தாமதமாக வந்ததில்லை என்கிறார் அந்தப்படத்தின் இயக்குனர் அட்லி. அந்தப்படத்தில் நயன்தாரா எத்தனை அழகாக இருந்தாரோ அதே அளவு, ஜெய்யின் காதலியாக நடித்த காட்சிகளில், அவரே முதிர்ச்சியாகத் தெரிந்தார். நயந்தாராவை விட, நிஜத்திலும் ஜெய் வயதில் குறைந்தவர். தன்னை விட வயதில் சிறியவரான ஜெய்யுடனும் அவர் ஜோடியாக நடிக்கிறார். தன் வயதுடைய ஹீரோக்களின் படங்களிலும் நடிக்கிறார். தெலுங்கிலோ இன்னும் ஆச்சர்யம். தன் அப்பா வயதுடைய ஹீரோக்கள் நடிக்க அழைத்தால் கூட வேண்டாம் என்று மறுப்பதில்லை.

நயன்தாராவிடம் மட்டுமே காணப்படும் இந்த குவாலிட்டி அவர் மீது தனிப்பட்ட மதிப்பை ஏற்படுத்தி உருவாக்கியிருக்கும் அதே நேரம், எப்படி அவரால் கால்ஷீட் குழப்பம் இல்லாமல் நடிக்க முடிகிறது என்பதும் ஆச்சரியமான விஷயமாக இருக்கிறது. தற்போது பாண்டிராஜ் - சிம்பு படத்தில் நடிக்க டிசம்பர் மாதம் தேதிகளை ஒதுக்கிக் கொடுத்திருக்கிறார். இதில் நடித்து முடித்த கையோடு ஜெயம் ரவியுடன் ஜோடியாக நடிக்கவிருக்கிறார். இந்த படத்தை ஜெயம் ரவியின் அண்ணன் ஜெயம் ராஜா இயக்கப் போகிறார். நயன்தாராவுடன் ஜோடி சேரும் நாளுக்காக ரவியும் காத்திருப்பதாகச் சொல்லியிருக்கிறார். இதற்கிடையில் விரைவில் சிவகார்த்திகேயன் ஒப்பந்தமாகவிருக்கும் படம் ஒன்றில் இவருக்கு ஜோடியாக நடிக்க நயன்தாராவை கேட்டிருக்கிறார்களாம். அதற்கும் அவர் ஓ.கே சொல்லியிருக்கிறார் என்கிறார்கள்.

நயந்தாராவைப் பொறுத்தவரை ஹீரோக்களின் வயது பொருட்டல்ல. கதையும், இயக்குனரும், படக்குழுவில் இடம்பெற்றிருக்கும் தொழில்நுட்பக் கலைஞர்களும் பிடித்துவிட்டால், அவர் பிரபுதேவா இயக்கும் அல்லது நடிக்கும் படத்திலும் கூட நடிக்கத் தயார். மொத்தத்தில் அவருக்கு சினிமாவை சினிமாவாக பார்க்கத் தெரிந்திருக்கிறது. அதோடு தனிப்பட்ட வாழ்க்கையை போட்டு குழப்பிக்கொள்ளக் கூடாது என்பதிலும் தெளிவாக இருக்கிறார். தமிழ் சினிமா உலகில் இத்தனை ஆண்டுகள் முன்னணி நாயகியாக அவர் தொடர இதுதான் முக்கிய காரணம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x