Last Updated : 25 Jun, 2016 12:47 PM

 

Published : 25 Jun 2016 12:47 PM
Last Updated : 25 Jun 2016 12:47 PM

புற்றுநோயிலிருந்து மீண்டவரின் 35,000 கி.மீ. பயணம்

நம்பிக்கை பயணம்’ என்ற பெயரில் நாடு முழுவதும் மோட்டார் சைக்கிளில் தனியாளாகச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுவருகிறார் 26 வயது இளைஞர் ஹர்தேஜ் பாரதேஷ். அவருடைய நோக்கம் புற்றுநோய் சார்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது.

மத்தியப் பிரதேச மாநிலம் ரிவாவைச் சேர்ந்த இவர், சட்டம் பயின்றவர். அவர் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வுப் பயணத்தை மேற்கொள்வதற்கு முக்கியக் காரணம், 23 வயதில் அவரும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டதுதான். தற்போது அதிலிருந்து முழுமையாக மீண்டு, புது மனிதனாக மாறியுள்ளார். அதை நிரூபிக்கும் வகையில் நாடு முழுவதும் மோட்டார் சைக்கிளில் பயணம் மேற்கொண்டு தன்னைப் போல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நம்பிக்கை வார்த்தைகளைக் கூறி, தைரியம் அளிக்கும் பணியில் தீவிரம் காட்டி வருகிறார்.

இந்த மோட்டார் சைக்கிள் பயணம் ராய்ப்பூரில் மே 1-ம் தேதி தொடங்கியது. இதுவரை நான்கு மாநிலங்களில் சுமார் 7,000 கிலோ மீட்டர் தூரம் மோட்டார்சைக்கிளில் பயணம் செய்துள்ளார். இந்தக் காலத்தில் 2,000 புற்றுநோயாளிகளைச் சந்தித்து உரையாடியுள்ளார். 29 மாநிலங்களில் 35 ஆயிரம் கி.மீ. தூரம் பயணம் செய்யத் திட்டமிட்டுள்ளார்.

நோயும் மீண்டெழுதலும்

நண்பர்களுடன் ஹர்தேஜ் பாரதேஷ் எடுத்த செல்ஃபி

சமீபத்தில் மதுரை வந்திருந்த ஹர்தேஜ் பாரதேஷ், தனது பயணம் குறித்துப் பகிர்ந்துகொண்டது: “சட்டக் கல்லூரியில் இறுதியாண்டு படித்துக்கொண்டிருந்தபோது என் வலது கழுத்தில் சிறிய கட்டி வந்தது. அது மூன்றாம் நிலை புற்றுநோய் கட்டி என்பதால் உடனடியாகச் சிகிச்சை பெற வேண்டும் மருத்துவர்கள் எச்சரித்தனர். தேர்வுகள் பாதிக்கப்படும் என்பதால் சிகிச்சைக்குச் சம்மதிக்கவில்லை. பத்து மாதமாக நாட்டு மருந்துகளைச் சாப்பிட்டுச் சமாளித்தேன்.

சட்டப் படிப்பு முடிந்தது. மேல்படிப்புக்காகப் பெங்களூர் சென்றிருந்தபோது புற்றுநோய் கட்டியால் அதிக வலியும் வேதனையும் ஏற்பட்டது. பரிசோதனையில் புற்றுநோய் கட்டி இறுதி நிலையான நான்காவது நிலைக்குச் சென்றுவிட்டதாகவும், இனியும் தாமதித்தால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று கருதப்பட்டதால், ஹைதராபாத்துக்குச் சென்று ஐந்து மாதம் கீமோதெரபி சிகிச்சை பெற்றேன்.

கீமோதெரபியால் முடி கொட்டியது. உடல் உருக்குலைந்தது. இருந்தாலும் புற்றுநோயில் இருந்து குணமடைந்தேன். உருக்குலைந்த உடலைப் பழைய நிலைக்குக் கொண்டுவர யோகா பயின்றேன், இசையில் மூழ்கினேன், சைக்கிளிங், ஜிம் எனக் கவனத்தை வெவ்வேறு பக்கங்களில் திருப்பினேன்.

புறக்கணிப்பு

கல்லூரியில் நல்ல மதிப்பெண் எடுத்துத் தேர்வாகியிருந்தேன். புற்றுநோயில் இருந்து மீண்டு பழைய நிலைக்குத் திரும்பிய பிறகு, வேலை தேடிப் பல்வேறு நிறுவனங்களுக்கு நேரில் சென்றேன். நான் புற்றுநோயில் இருந்து மீண்டவன் என்பதைத் தைரியமாகத் தெரிவித்தேன். என்னுடைய சான்றிதழ்களைப் பார்த்து மகிழ்ச்சி தெரிவித்த பலரும், புற்றுநோயால் பாதிக்கப்பட்டவன் என்பதால் வேலை தர மறுத்துவிட்டனர்.

அப்போதுதான் புற்றுநோயாளிகளைச் சமூகம் எப்படிப் பார்க்கிறது என்பதை உணரத் தொடங்கினேன். புற்றுநோயாளிகளின் நலனுக்காக ஏதாவது செய்ய வேண்டும் எனத் தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தபோது, புற்றுநோயால் கால்கள் பாதிக்கப்பட்ட ஒருவர் மாரத் தான் ஓடி விழிப்புணர்வு ஏற்படுத்திய செய்தி கவனத்துக்கு வந்தது.

முடங்க வேண்டாம்

மோட்டார் சைக்கிளில் தனியாளாக நாடு முழுவதும் சுற்றிப் புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தலாம் என நினைத்து, பெற்றோரிடம் விருப்பத்தைத் தெரிவித்தேன். முதலில் அவர்கள் பயந்தனர். மோட்டார் சைக்கிளில் தனியாளாகச் சாலையில் பயணம் மேற்கொள்வதா? மொழி தெரியாத மாநிலங்களுக்குப் போய் சிரமப்படுவதா எனக் கேள்வி மேல் கேள்வி கேட்டுத் துளைத்தெடுத்தனர். என் தந்தை வழக்கறிஞர், தைரியமானவர். என்னுடைய பயணத் திட்டத்தை அவர் ஏற்றுக்கொண்டார். பின்னர்க் குடும்பத்தினரும் சம்மதம் தெரிவித்தனர்.

எனக்குக் குடிப் பழக்கமோ புகைபிடிக்கும் பழக்கமோ இல்லை. இருந்தபோதும் புற்றுநோய் வந்தது. யாருக்கு வேண்டுமானாலும் புற்றுநோய் வரலாம். புற்றுநோய் வந்துவிட்டதே என மூலையில் முடங்காமல், தொடர்ந்து சிகிச்சை எடுத்துக்கொண்டால், புற்றுநோய்க்குக் குட்பை செல்லிவிடலாம் என்றார்.

நாம்தான் புற்றுநோயில் இருந்து குணமடைந்து விட்டோமே. இனிமேல் நம்ம வேலையை மட்டும் பார்ப்போம் எனப் பலரையும் போல் ஒதுங்கிவிடாமல், புற்றுநோயால் வாழ்க்கையே போய்விட்டது எனத் துயரத்தில் துடிப்பவர்களிடம் முன்புபோலவே மீள முடியும் என்னும் நம்பிக்கையை உருவாக்கி வருகிறார் ஹர்தேஜ் பாரதேஷ்.

இதை வெறும் வார்த்தைகளாக இல்லாமல் மோட்டார் சைக்கிள் பயணம் மூலம் நேரடியாக நிரூபித்துவருவது, பலருடைய மனதில் மிகப் பெரிய நம்பிக்கை விதையை விதைத்து வருகிறது.

எனக்குக் குடிப் பழக்கமோ புகைபிடிக்கும் பழக்கமோ இல்லை. இருந்தபோதும் புற்றுநோய் வந்தது. யாருக்கு வேண்டுமானாலும் புற்றுநோய் வரலாம். புற்றுநோய் வந்துவிட்டதே என மூலையில் முடங்காமல், தொடர்ந்து சிகிச்சை எடுத்துக்கொண்டால், புற்றுநோய்க்குக் குட்பை செல்லிவிடலாம்

எனக்குக் குடிப் பழக்கமோ புகைபிடிக்கும் பழக்கமோ இல்லை. இருந்தபோதும் புற்றுநோய் வந்தது. யாருக்கு வேண்டுமானாலும் புற்றுநோய் வரலாம். புற்றுநோய் வந்துவிட்டதே என மூலையில் முடங்காமல், தொடர்ந்து சிகிச்சை எடுத்துக்கொண்டால், புற்றுநோய்க்குக் குட்பை செல்லிவிடலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x