Last Updated : 09 Aug, 2016 12:35 PM

 

Published : 09 Aug 2016 12:35 PM
Last Updated : 09 Aug 2016 12:35 PM

வேலை வேண்டுமா?- பரோடா வங்கியில் அதிகாரி ஆகலாம்

தற்போது பட்டதாரிகளுக்கு ஜாக்பாட் காலம் என்று சொல்லலாம். காரணம் பட்டதாரிகளுக்கு வங்கி வேலைவாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன. ஒருபுறம் வங்கிப் பணியாளர் தேர்வு நிறுவனம் (Institute of Banking personnel Selection-IBPS) பல்வேறு பொதுத்துறை வங்கிகளுக்கு எழுத்தர்களையும், அதிகாரிகளையும் தேர்வுசெய்வதற்காகத் தேர்வு நடத்துகிறது. இன்னொரு புறம் பாரத ரிசர்வ் வங்கி, பாரத ஸ்டேட் வங்கி போன்ற வங்கிகள் தேர்வு நடத்தி அதிகாரிகளைத் தேர்வுசெய்து வருகின்றன.

படிப்போடு வேலை

இன்னும் ஒரு படி மேலாக, ஐடிபிஐ, யுனைடெட் பேங்க் ஆஃப் இந்தியா உள்ளிட்ட வங்கிகள் தாங்களே வங்கி சம்பந்தப்பட்ட படிப்பைப் படிக்க வைத்துப் பின்னர் அவர்களைத் தங்கள் வங்கிகளில் பணியமர்த்திக்கொள்கின்றன. இந்த வரிசையில் தற்போது பொதுத்துறை வங்கியான பரோடா வங்கியும் சேர்ந்துள்ளது.

பரோடா வங்கியானது அதிகாரி (Probationary Officer) பணியில் 400 காலியிடங்களை நேரடி நியமன முறையில் நிரப்ப முடிவுசெய்துள்ளது. இதற்குத் தகுதியான நபர்களைத் தேர்வுசெய்து அவர்களை வங்கி நிர்வாகம் சம்பந்தப்பட்ட படிப்பைப் படிக்க வைத்துப் பின்னர் அவர்களைத் தனது வங்கியிலேயே பணியமர்த்தவும் முடிவுசெய்திருக்கிறது. தேர்வுசெய்யப்படும் நபர்கள் பரோடா மணிபால் ஸ்கூல் ஆஃப் பேங்கிங் என்ற நிறுவனத்தில் வங்கி மற்றும் நிதி தொடர்பான முதுகலைப் பட்டச் சான்றிதழ் படிப்பில் (Post Graduate Certificate in Banking and Finance) படிக்க வைக்கப்படுவார்கள். இது 9 மாத காலப் படிப்பாகும். இதற்கான படிப்புச் செலவு ரூ.3.45 லட்சத்தை பரோடா வங்கி கல்விக் கடனாக வழங்கிவிடும். இந்தக் கடனுக்கு மிகக் குறைந்த வட்டியே வசூலிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

என்ன கேட்பார்கள்?

இந்தச் சான்றிதழ் படிப்பை முடித்த பிறகு அவர்கள் பரோடா வங்கியில் ஏதேனும் ஒரு கிளையில் பணியில் சேர வேண்டும். அங்கு 3 மாத காலப் பயிற்சியை முடித்த பின்பு அவர்களுக்கு வங்கி மற்றும் நிதி தொடர்பான முதுகலைப் பட்டயத்தை (Post Graduate Diploma in Banking and Finance) மணிபால் பல்கலைக்கழகம் வழங்கும். அதன் பின்னர் அவர்கள் பரோடா வங்கியில் அதிகாரியாகப் பணியமர்த்தப்படுவார்கள்.

வங்கி அதிகாரி பணியில் சேர வகை செய்யும் மேற்கண்ட சான்றிதழ் படிப்பில் சேரப் பட்டதாரிகள் விண்ணப் பிக்கலாம். குறைந்தபட்சம் 60% மதிப்பெண் அவசியம். எஸ்சி, எஸ்டி வகுப்பினர் மற்றும் மாற்றுத் திறனாளி களாக இருந்தால் 55% மதிப்பெண் போதுமானது. வயது 20 முதல் 28-க்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினருக்கும், மாற்றுத் திறனாளிகளுக்கும் மத்திய அரசின் இடஒதுக்கீட்டு விதிமுறைகளின்படி வயது வரம்பில் தளர்வு உண்டு.

தகுதியான நபர்கள் எழுத்துத் தேர்வு, உளவியல் தேர்வு (Pschometric Assessment), குழு விவாதம், நேர்முகத் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வுசெய்யப்படுவார்கள். ஆன்லைன் வழியிலான எழுத்துத் தேர்வு செப்டம்பர் 25-ம் தேதி தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை உள்பட நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் நடைபெறவுள்ளது. எழுத்துத் தேர்வில் ரீசனிங், கணிதம், பொது அறிவு, பொது ஆங்கிலம் ஆகிய 4 பகுதிகளில் தலா 50 வினாக்களுக்கு விடையளிக்க வேண்டும். இது தவிர ஆங்கிலத்தில் விரிவாக விடையளிக்கும் ஒரு பகுதியும் இருக்கும். தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் பட்டதாரிகள் ஆகஸ்டு மாதம் 21-ம் தேதிக்குள் ஆன்லைனில் ( >www.bankofbaroda.co.in) விண்ணப்பிக்க வேண்டும். கூடுதல் விவரங்களை பரோடா வங்கியின் இணையதளத்தில் விரிவாகத் தெரிந்துகொள்ளலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x