Published : 18 Jan 2014 12:00 AM
Last Updated : 18 Jan 2014 12:00 AM

நீச்சல் குளங்களைப் பராமரிப்பது எப்படி?

ஆறு, கிணறு உள்ளிட்ட நீர்நிலைகளுடனான நமது உறவு ஆழமானது. குளிப்பது, குடிப்பதில் தொடங்கி உயிர் வாழ்வதற்கான இன்னபிற தேவைகள் அனைத்துக்கும் நீரையே சார்ந்திருக்கும் நமக்கு, “மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும்'' என்று பாடிய நீண்ட நெடிய பாரம்பரியம் உண்டு. பரந்து விரிந்த நீர் நிலைகளில் மகிழ்ந்து குளித்த மாபெரும் வரலாற்றுக்குச் சொந்தக்காரர்களாகிய நமக்கு, இன்று குளிக்க ‘பக்கெட்’ தண்ணீர், குடிக்க ‘பாக்கெட்' தண்ணீர் என்கிற நகர வாழ்க்கை பழகிப் போனது விந்தைதான். நம் மீது திணிக்கப்பட்ட அல்லது நாமே விரும்பி ஏற்றுக் கொண்ட இந்த நகரத்துச் சூழலிலும், நீர் நிலைகள் நமது நினைவுகளை விட்டு அகலவில்லை. நகரத்து வீடுகளில் பரந்து விரிந்து கிடக்கும் நீச்சல் குளங்களே இதற்குச் சாட்சி.

முன்பு வசதிப் படைத்தவர்களுக்கு மட்டுமே வாய்க்கும் வரமாக இருந்த நீச்சல் குளங்கள், தற்போது அமைக்க எளிதாகவும் விலை குறைவாகவும் இருப்பதால், மத்திய தர வீடுகளுக்கும் வந்து விட்டன. 30 க்கு 15 அடி அளவில் ஒரு நீச்சல் குளம் கட்ட சுமார் நான்கு லட்சம் ரூபாய் இருந்தால் போதும். இதனால் தனி வீடுகள், அடுக்கு மாடிக் குடியிருப்புகள் என நமது வாழிடங்கள் அனைத்திலும் நீச்சல் குளங்கள் நிரம்பி வழிகின்றன. நீச்சல் உடலுக்கும் மனதுக்கும் புத்துணர்ச்சி அளிப்பதால், மன அழுத்தங்களுக்கு மத்தியில் நாட்களை நகர்த்தும் நகர வாழ்க்கையில் நீந்தும் பழக்கம் அதிகரித்து வருகிறது.

நீச்சல் குளங்களின் பராமரிப்பைப் பொறுத்தவரை, அடுக்குமாடி குடியிருப்புகளில் மாதாந்திர பொது பராமரிப்பு கட்டணத்திலிருந்து நீச்சல் குளங்களுக்கும் செலவிடப்படுகின்றன. எனவே, அவர்களுக்கு இது குறித்த கவலை இல்லை. தனி வீட்டுகளில் பராமரிப்புச் செலவு முழுக்க முழுக்க உரிமையாளரையேச் சாரும். மேலும், தொடர் கண்காணிப்பும் பராமரிப்பும் இருந்தால்தான், நீச்சல் குளங்கள் குளியலுக்கு ஏற்றதாக இருக்கும்.

நீச்சல் குளங்களை எப்படிப் பராமரிப்பது?

• உங்கள் நீச்சல் குளம் மூடிய குளமா அல்லது திறந்த வகை குளமா என்பதைப் பொறுத்து நீரின் தன்மை மாறும்.

• சூரிய ஒளி, நேரடியாகப்படாதவரை தண்ணீரில் பாசிகள் வளராது. எனவே திறந்த குளத்தை விட கூரை பொருத்தப்பட்ட நீச்சல் குளமே சிறந்தது.

• சூரிய ஒளியை மறைக்க மெல்லிய பிளாஸ்டிக் தகட்டா லான கூரைகளைப் பொருத்தினாலே போதுமானது.

• நீச்சல் குளத்தை சுற்றி புல்வெளி இருந்தால் மண், தூசு போன்றவை நீச்சல் குளத்தில் சேராமல் இருக்கும்.

• நீச்சல் குளத்திலுள்ள நீர் சுத்தமாக இருக்க வேண்டும்; இல்லையெனில் நோய் தொற்றுகள் ஏற்படும் வாய்ப்புண்டு. எந்த நீரை பயன்படுத்துகிறீர்கள் என்பதும் கவனிக்கப்பட வேண்டிய செய்தி.

• உங்கள் வீட்டில் கிடைக்கும் நிலத்தடி நீர் வெகு உவர்ப்பாக இருந்தால், அதை சுத்திகரித்தே பயன்படுத்த வேண்டும். இதற்கு, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் அல்லது தனியார் ஆய்வுக் கூடங்களின் உதவியை நாடலாம்.

• மாதத்துக்கு ஒரு முறை நீச்சல் குளத்தின் நீரை மறு சுத்திகரிப்பு செய்ய வேண்டும். இல்லையெனில், நீரிலுள்ள பாக்டீரியாக்கள் புழுக்களாக மாறி, நீச்சல்குளத்தில் துர்நாற்றம் வீசக் கூடும்.

• தக்க நிபுணர்களின் ஆலோசனையுடன், குளோரின் போன்ற பொருட்களை நீரில் கலக்கலாம். இதனால் சரும நோய்கள் மற்றும் உடல் சுகாதார கேடுகளிலிருந்து தற்காத்துக் கொள்ளமுடியும்.

• நீச்சல் குளத்தின் மொத்த நீரும் உறிஞ்சப்பட்டு, இன்னொரு தொட்டிக்கு எடுத்துச் செல்லப்பட்டு, அங்கு வடிகட்டி மீண்டும் நீச்சல் குளத்துக்கு வரும் வசதிகள் செய்யப்பட்டிருக்கவேண்டும். வடிகட்டி கள் நாள் ஒன்றுக்கு, குறைந்தபட்சம்10 மணி நேரம் இயங்கவேண்டும்.

• நீச்சல் குளத்தின் உட்புறச் சுவர் மற்றும் தரைகளில் ‘வாட்டர் புரூஃப்’ கற்கள் பதிப்பது கட்டாயம். இவை நீச்சல் குளத்திலுள்ள நீரின் தன்மையில் மாற்றங்கள் நிகழாமல் பாதுகாக்கும்.

• பல நீச்சல் குளங்களில் வெறுமனே டைல்ஸ்களை மட்டுமே பதித்திருப்பார்கள்; இது போதாது.

• நீச்சல் குளத்தை ஒட்டியோ, அதற்கு வெகு அருகிலோ அலங்கார விளக்குகள் மற்றும் இசை ஒலி பெருக்கிகள் பொருத்துவதைத் தவிர்க்கவும்.

• ஃபில்டர்களை இயக்கும் தானியங்கி மோட்டார் களைக்கூட நீச்சல் குளத்திலிருந்து தள்ளி பாதுகாப்பான இடத்தில் வைப்பது நல்லது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x