Published : 14 Dec 2013 12:35 PM
Last Updated : 14 Dec 2013 12:35 PM

நல்ல எதிர்காலம் தரும் பி.டெக். படிப்புகள்

வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் பி.டெக். எனர்ஜி என்வேரான்மென்ட் இன்ஜினியரிங் பாடப்பிரிவுக்கு 55 சீட் ஒதுக்கப்பட்டுள்ளது. எரிசக்தி உற்பத்தி, எரிசக்தி மிச்சப்படுத்துதல், மேம்படுத்தல் மற்றும் திட்ட மதிப்பிடல் குறித்த பாடங்கள் இதில் இடம்பெற்றுள்ளன. சுற்றுச்சூழல் எவ்வாறு மாசுபடுகிறது, அதை எப்படித் தடுக்க வேண்டும் என்றும் கற்றுக்கொடுக்கப்படுகிறது. சூரிய ஒளி, காற்றாலை, நீர் மின்சாரம், அனல் மற்றும் அணுமின் சக்தி துறையிலும், மாசு கட்டுப்பாட்டு வாரியத்திலும் வேலைவாய்ப்பு கிடைக்கக்கூடிய பட்டப்படிப்பாக உள்ளது. பெரிய நிறுவனங்களில் எனர்ஜி ஆடிட்டிங் பட்ஜெட் பணியிடங்களிலும் சேரலாம். மனித குலத்துக்கு சவாலாக விளங்கும் எரிசக்தி, சுற்றுச்சூழல் துறைக்கு அரசு, தனியார் துறைகள் முக்கியத்துவம் கொடுத்துவருவதால், பி.டெக். எனர்ஜி என்வேரான்மென்ட் இன்ஜினியரிங் எதிர்கால வாழ்க்கையை செம்மைப்படுத்தும் என்பதில் ஐயமில்லை.

பி.டெக். பயோ-இன்பர்மேட்டிக்ஸ் பட்டப்படிப்புக்கு கோவை வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மொத்தம் 35 சீட் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பட்டப்படிப்பு ஐ.டி. துறையுடன் இணைவு பெற்ற படிப்பை அளிப்பதால் கூடுதல் வேலைவாய்ப்புகள் கிடைக்கும். இது பிளான்ட் பயோடெக், மாலிகுலர் பயோடெக், கம்ப்யூட்டர் புரோகிராம் நெட்வொர்க் உள்ளிட்ட பாடப்பிரிவுகள் கொண்ட படிப்பாகும். ஆராய்ச்சிப்படிப்பு படிப்பதன் மூலம் கூடுதல் வாய்ப்புகள் காத்திருக்கின்றன.

பி.எஸ்சி. அக்ரி பிசினஸ் மேனேஜ்மென்ட் பட்டப்படிப்புக்கு கோவை வேளாண்மைப் பல்கலைக்கழத்தில் 45 சீட்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் விவசாய விளைபொருட்கள் உற்பத்தி முறை, மைக்ரோ ஃபைனான்ஸ், பேங்கிங், வேளாண்மை உற்பத்தி செலவுக் கணக்கு, பேக்கிங் செய்வது, விற்பனை செய்யும் முறை குறித்து கற்பிக்கப்படுகிறது. தமிழகத்தில் சூப்பர் மார்க்கெட் தொழில் அபார வளர்ச்சி கண்டு வரும் நிலையில், இந்த பட்டப்படிப்பை தேர்வு செய்யும் மாணவர்கள், காய்கறி, பழ விற்பனை நிலையம், சூப்பர் மார்க்கெட் வைத்து தொழிலதிபராகவும் வாய்ப்பு உள்ளது.

பி.டெக். அக்ரிகல்ச்சர் இன்பர்மேஷன் டெக்னாலஜி பட்டப்படிப்பு விவசாயம், தகவல் தொழில்நுட்பம் சார்ந்த பாடப்பிரிவுகளை உள்ளடக்கியது. லேண்ட்ஸ்கேப், எக்காலஜிஸ்ட் ஆகிய பாடப்பிரிவுகளும் உள்ளது. இதைப் படிப்பவர்கள் ஐ.டி. மேனேஜர், ஃபார்ம் பிளான்டேஷன் மேனேஜராக பணிக்கு செல்லலாம். வேளாண்மைத் துறையில் தகவல் தொழில்நுட்பத்தின் பயன்பாடு அதிகரித்துவரும் நிலையில், இப் படிப்புக்கு நல்ல எதிர்காலம் உள்ளது. கோவை வேளாண்மைப் பல்கலைக்கழத்தில் இதற்கு 30 சீட்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

பி.டெக். செரிகல்ச்சர் (பட்டுக்கூடு) பட்டப்படிப்பு தமிழகத்தில் கோவை வேளாண்மைப் பல்கலைக்கழத்தில் மட்டுமே உள்ளது. பட்டுக்கூடு உற்பத்தி, பட்டுக்கூடு பயிர் வளர்ப்பு, உற்பத்தி, விற்பனை குறித்த பாடப்பிரிவுகள் இதில் உள்ளன. பட்டுக்கூடு தொழிற்கூடங்களுக்குத் தேவையான இயந்திரத் தொழில்நுட்பங்கள் குறித்தும் கற்றுக்கொடுக்கின்றனர். அரசு பட்டுநூல் வாரியம், தனியார் ஜவுளி ஆலை, நூற்பாலைகளில் வேலைவாய்ப்பு கிடைக்கும். வெளிநாடுகளிலும் வரவேற்பு உள்ளதால், வேலைக்கு உத்தரவாதம் உள்ள படிப்பாக விளங்குகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x