Published : 17 Dec 2013 12:00 AM
Last Updated : 17 Dec 2013 12:00 AM

பயமுறுத்தும் பாதரசம் பயன்பாடு குறைக்கப்படுமா?

வெள்ளியை உருக்கி ஊற்றியது போல அழகாக இருக்கும் பாதரசம், பூமியில் ஏற்படுத்திவரும் பாதிப்புகள் அளவிட முடியாதவை. வெறும் 0.6 கிராம் பாதரசம், சுமார் 20 ஏக்கர் அளவுள்ள ஏரியை மாசுபடுத்தும் தன்மை கொண்டது. இதனால் மனிதர்களுக்கு நரம்பு மண்டலம் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன.

மின்சாரம் இல்லாமல் ஒரு நிமிடம்கூட வாழ முடியாத நிலையில் நாம் இருக்கிறோம். இன்றைய தேதியில் அதிக மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவது அனல் மின்நிலையங்களில் நிலக்கரி எரிக்கப்படுவதன் மூலம்தான். உலகின் மிக முக்கியப் பிரச்சினையாக உருவெடுத்துள்ள பருவநிலை மாற்றத்துக்கு நிலக்கரியை எரிப்பது முக்கியக் காரணம்.

நிலக்கரியில் இருந்து பாதரசம் வெளியாவது தற்போது கவனத்துக்கு வந்திருக்கிறது. ஐ.நாவின் அங்கமான 'ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் திட்டம்' சமீபத்தில் வெளியிட்ட ஆண்டு அறிக்கை இதைக் கூறுகிறது. நிலக்கரியைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிப்பதைக் குறைக்க வேண்டும் என்றும் அது கேட்டுக்கொண்டுள்ளது. அமெரிக்கா, சீனா, இந்தியா உள்ளிட்ட நாடுகளில்தான் நிலக்கரி பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் அனல் மின் நிலையங்கள் அதிகம் உள்ளன.

காடுகளை அழித்தல், எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மூலமும் பாதரசம் வெளியாகிறது. அது மட்டுமல்லாமல், நம் தினசரி வாழ்வுடன் இணைந்த சில பொருட்களில் அது இருக்கிறது. குறிப்பாக மருத்துவக் கருவிகளான தெர்மாமீட்டர், ரத்த அழுத்தம் அறியும் கருவிகளில் பாதரசம் பயன்படுத்தப்படுகிறது. இந்தக் கருவிகள் பழுதடையும்போது கழிவாகத் தூக்கி எறியப்படுகின்றன. சுற்றுச்சூழலில் அவை பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன.

கருவில் இருக்கும் குழந்தைகள், மன அழுத்தம், தற்கொலை எண்ணம், முடக்கு வாதம், சிறுநீரகம் செயலிழப்பு, அல்ஸெய்மர் நோய், பார்வை, பேச்சுத்திறன் பாதிப்பு, ஒவ்வாமை, ஆண்மைக்குறைவு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் பாதரச மாசுபாட்டால் ஏற்படும். எனவே, பாதரசத்தைக்கொண்ட மருத்துவக் கருவிகளுக்கு மாற்றாக வேறு கருவிகளைப் பயன்படுத்த உலகெங்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதுகுறித்து சென்னையில் உள்ள சென்டர் ஃபார் டெவலப்மெண்ட் ஃபைனான்ஸில் பணிபுரிந்து வரும் சுற்றுச்சூழல் ஆய்வாளர் ராஜேஷ் ரங்கராஜன் கூறுகையில், "பாதரசத்தால் ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்கச் சர்வதேச அளவில் அளவில் ‘மினமாட்டா ஒப்பந்தம்' கொண்டு வரப்பட்டது. அதன்படி 2020இல் உலகம் முழுவதும் பாதரசம் உள்ள பொருட்களின் பயன்பாட்டைக் கைவிட முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதிதான் பாதரசம் உள்ள மருத்துவக் கருவிகளுக்குப் பதிலாக மாற்றுக் கருவிகளைப் பயன்படுத்தும் முயற்சி" என்றார்.

ஜப்பான் நகரமான மினமாட்டாவில் 1956ஆம் ஆண்டு முதன்முதலாகப் பாதரசத்தால் ஏற்படும் நோய் கண்டறியப்பட்டது. இதனால் பாதரசம் மூலம் உருவாகும் நோய்கள் 'மினமாட்டா நோய்' எனப்படுகின்றன. 2010ஆம் ஆண்டு 'மினமாட்டா ஒப்பந்தம்' ஏற்படுத்தப்பட்டது. இந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஜப்பானில் நடந்த சர்வதேச மாநாட்டில் 91 நாடுகள் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு, கொள்கை அளவில் ஏற்றுக்கொண்டன. இந்த ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திடவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது.

"இந்நிலையில், இந்தியாவின் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக, தமிழகத்தில் 5 அரசு மருத்துவமனைகளும், 9 தனியார் மருத்துவமனைகளும் பாதரசத்துக்குப் பதிலான மாற்று மருத்துவக் கருவிகளைப் பரிசோதனை முயற்சியாகப் பயன்படுத்தி வருகின்றன. இதில் நல்ல முடிவுகளும் கிடைத்துள்ளன. இந்த முயற்சி நாடு முழுவதும் கொண்டு செல்லப்படும்போது, குறைந்தபட்சம் மருத்துவத் துறையிலாவது பாதரசத்தின் பயன்பாட்டை நீக்க முடியும்" என்றார் ராஜேஷ் ரங்கராஜன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x