Last Updated : 25 Mar, 2014 12:38 PM

 

Published : 25 Mar 2014 12:38 PM
Last Updated : 25 Mar 2014 12:38 PM

ஹோமியோபதி: நோய் முதல் நாடும் சிகிச்சை

ஒவ்வொரு மனிதரும் தனித்துவமானவர் என்பது போலவே, ஒவ்வொரு மனிதருக்கு வரும் நோயும், அதன் காரணங்களும் தனியானவை. ஒருவருக்குத் தலைவலி வருகிறதென்றால், அதற்கு ஒற்றைப் பொது மருந்து கிடையாது என்பதே ஹோமியோபதி காட்டும் வழிமுறை. ஒவ்வொரு உயிரும், அதற்கே உரிய பிரத்யேக உயிர்சக்தியால் கட்டுப்படுத்தப்படவும் நிர்வகிக்கவும் படுகிறது என்பதை உலகுக்கு முதலில் சொன்னவர் டாக்டர் ஹானிமன்.

ஜெர்மனியைச் சேர்ந்த அலோபதி மருத்துவரான டாக்டர் சாமுவேல் ஹானிமன், 1796ஆம் ஆண்டில் கண்டுபிடித்த மருத்துவ முறைதான் ஹோமியோபதி. அலோபதி மருத்துவத்தின் பக்கவிளைவுகள் குறித்துப் பெரும் சங்கடம் கொண்டிருந்த டாக்டர் ஹானிமனுக்கு, ஹோமியோபதி மருத்துவம் பெரும் மனநிம்மதியைத் தந்தது.

டாக்டர் ஹானிமனுக்குப் பிறகு மருத்துவ அறிவியல் எத்தனையோ வளர்ச்சிகளைக் கண்டுவிட்டது. முதலில் நுண்ணோக்கி வந்தது. அதன்வழி நுண்ணுயிர்களைப் பார்க்கும் தொழில்நுட்பம், மருத்துவ அறிவியலில் பெரிய திருப்புமுனையாக இருந்தது. மரபணு ஆய்வுகள் மேலும் பல சாளரங்களைத் திறந்துவிட்டன. ஒவ்வொரு தனிமனிதரின் மரபணுவும் பிரத்யேகக் குணாம் சங்களைக் கொண்டது இதன் மூலம் நிரூபணமானது. ஆனால், இந்த உண்மையை டாக்டர் ஹானிமன், நவீன மருத்துவம் சொல்வதற்கு 200 ஆண்டுகளுக்கு முன்பே சொல்லிவிட்டார். அவர் அதைச் சொன்னபோது, சிலரே அவரது கூற்றை நம்பினார்கள்.

முள்ளை முள்ளால் எடுப்பது

எந்தப் பொருள், எந்த நோயை ஆரோக்கியமான நிலையிலுள்ள மனிதனிடத்தில் தோற்றுவித்ததோ, அந்தப் பொருள்களைத் தூய்மையான நிலையில் கொடுத்தால் அந்த நோயைக் குணப்படுத்த முடியும் என்பதே ஹோமியோபதியின் அடிப்படைக் கோட்பாடு. அந்த மருந்துப் பொருள்தான் வெள்ளையாக, சிறுசிறு சீனி உருண்டைகளாக ஹோமியோபதி மருத்துவர்களால் கொடுக்கப்படுகின்றன.

ஹோமியோபதி மருத்துவ முறையைப் பொருத்தவரை, நோயின் அறிகுறிகளுக்கு மட்டுமே மருந்து அளிக்கப்படுவ தில்லை. ஒரு நோயாளியைக் குணப்படுத்த நோயாளியின் உடல், உளவியல் பண்புகள் விசாரிக்கப்படுகின்றன.

ஒரே நோய் காரணமாக அவதிப்படுபவர்களாக இருக்கலாம். ஆனால், அந்த நோயால் ஒவ்வொரு மனிதரும் வெவ்வேறு காரணங்களால், வழிமுறைகளால் பாதிக்கப்படு கிறார். அந்தக் காரணியையே ஒரு ஹோமியோபதி மருத்துவர் தெரிந்துகொள்ள முயற்சிக்கிறார். ஹோமியோபதியைப் பொருத்தவரை, மனஅழுத்தம், கவலை ஆகியவை உடலை வெவ்வேறு வகை நோய்க்காகப் பாதிக்கின்றன. இதுதான் மற்ற மருத்துவமுறைகளில் இருந்து ஹோமியோபதியை வித்தியாசப்படுத்துகிறது.

பொது மருந்தில்லை

இதை இன்னும் தெளிவாகப் புரிந்துகொள்ளும் வகையில் விளக்குகிறார் ஹோமியோபதி மருத்துவர் டாக்டர் மஞ்சுளா அஸ்வின்:

மிகவும் பொதுவான பிரச்சினையான வயிற்றுப்போக்கால் ஒருவர் அவதிப்பட்டால், ஹோமியோபதியில் பொதுவான மருந்து வழங்கப்படுவதில்லை. அவரது இயல்பு என்ன, மன அமைப்பு என்ன, எதனால் அவருக்கு அந்த வயிற்றுப்போக்கு வந்தது என்பதை ஆலோசித்தே மருந்து வழங்குகிறோம். தலைவலி, மூட்டுவலி, சளி, தொண்டைப் புண் என எதுவாக இருந்தாலும் அலோபதியில் டாக்டர் சொல்லாமலேயே, மருந்துக்கடைக்குச் சென்று மாத்திரை வாங்கிவிடலாம்.

ஹோமியோபதியில் இது சாத்தியம் இல்லை. ஒருவரது உடல் வெப்பம், நோய் வரும் சூழ்நிலை, தண்ணீர் தாகம், உறக்க இயல்பு உள்ளிட்ட எல்லாவற்றையும் பார்ப்போம். அதுதான் ஒரு மனிதனிலிருந்து இன்னொரு மனிதனை வித்தியாசப்படுத்துகிறது. அந்த இயல்பைப் பரிசோதித்து அதற்குப் பொருத்தமான அறிகுறி கள் கொண்ட மருந்து இருக்கும்.

டெங்கு மற்றும் மலேரியா கடுமையாகப் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு, ரத்தத்தட்டுகளின் எண்ணிக்கையை ஒரே வேளை மருந்தில் கூட்டியிருக்கிறோம்.

மூக்கடைப்புடன் என்னிடம் ஒரு பெண் நோயாளி வந்தார். அவருக்கு ஈஸ்னோஃபில் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. சராசரியாக 400தான் இருக்கவேண்டும். அவருக்கு ஆயிரத்துக்கும் மேலே ஈஸ்னோஃபில் இருந்தது. அவருக்கு மருந்து கொடுத்து 24 மணி நேரத்தில் சரியானது. அவருக்குத் திடீரென்று மூக்கடைப்பு வந்ததற்குப் பின்னணியில், உளவியல் காரணமும் இருந்தது. அதை அவரிடம் பேசித் தெரிந்துகொண்டோம். அலுவலகத்தில் அவருக்கு அடுத்த நிலையில் பணிபுரியும் ஊழியர் நேரடியாக அகௌரவமாகப் பேசியிருக்கிறார். அந்த அவமரி யாதையால் பாதிக்கப்பட்டுத் திடீரென்று மூக்கடைப்பு தாக்கியிருக்கிறது" என்கிறார்.

எத்தனை சதவீதம்?

ஆனால், ஹோமியோ பதியைப் பொருத்தவரை அனைத்து நோயாளிகளுக்குத் தீர்வு அளிப்பது சாத்தியம் என்று சொல்ல முடியாது. 60 சதவீதம் பேருக்குத்தான் முழுமையான தீர்வு கிடைக்கிறது. எஞ்சிய 40 சதவீதம் பேரின் பிரச்சினையைத் தீர்க்க முடியாமல் இருப்பதற்கு, அவர்களுடைய நோய்க்கான காரணங்களை மருத்துவரால் சரியாகக் கணிக்க முடியாமல் இருக்கலாம். நோயாளி சரியாக ஒத்துழைக்கவோ, தகவல்களைச் சொல்லாமல் இருப்பதாலோ கணிக்க முடியாமல் போகலாம். நோயாளியின் அறிகுறிகளுக்குப் பொருத்தமான மருந்தை டாக்டரால் தேர்ந்தெடுக்க முடியாதபோதும், இந்த மருத்துவம் பயனளிப்பதில்லை.

டாக்டர் ஹானிமன் எழுதிய ‘மெட்டிரீயா மெடிக்கா’ நூலும், அவரைத் தொடர்ந்து பல மருத்துவ அறிஞர்கள் எழுதிய நூல்களும் நோய்களின் காரணிகள், நோயின் வெவ்வேறு இயல்புகள், அதற்குத் தகுந்த மருந்துகளைப் பரிந்துரைக்கின்றன. மருத்துவரின் அனுபவமும் நோயாளிக்கான மருந்தைத் தேர்ந்தெடுப்பதில் அதிகப் பங்கு வகிக்கிறது.

திடீர் நோய் சாத்தியமா?

“சென்னையில் தூசி அதிகமாக இருக்கிறது. ஆனால் அதனால் எல்லோருமே அது தொடர்பான நோய்களால் பாதிக்கப்படுவதில்லை. எல்லோருக்கும் தும்மல் வருவதில்லை. சிலரை மட்டுமே தூசி பாதிக்கிறது. ஒருவரது எதிர்ப்புசக்தி, மனவலிமை பலவீனமாக இருக்கலாம். ஒரு நோயைக் கிளர்த்தக்கூடிய காரணிகளைப் பார்க்க வேண்டும்.

இதைப் பற்றியும் ஹானிமன் எழுதியுள்ளார். ஒருவர் திடீரென்று நோயாளியாக மாறிவிட மாட்டார். அவருடைய உயிர்சக்தி எல்லாவற்றையும் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஒவ்வொரு செல்லும், ஒவ்வொரு வேதிவினையும், ஒவ்வொரு ஹார்மோனும் சீரான இயந்திரம் போல வேலை செய்துகொண்டிருக்கும். உடலுக்கு யாரும் அதைச் சொல்லிக் கொடுக்கவில்லை. இயற்கையாகவே அந்தச் சக்தியை உடல் பெற்றுள்ளது.

ஆனால், உடல் ஏன் நோயைப் பெறுகிறது? அதைத் தூண்டும் காரணிகள் இருக்கும். அந்தக் காரணியைக் கண்டறிந்து சிகிச்சை அளிப்பதே ஹோமியோபதி.

நோயறிதலைப் பொருத்த வரை அலோபதிக்கும், ஹோமியோபதிக்கும் பரிசோதனைகள் ஒன்றுதான். ரத்த அழுத்தம், ஈ.சி.ஜி. முதல் ஸ்கேனிங் வரை எல்லாப் பரிசோதனை முடிவுகளையும் நாங்களும் பயன்படுத்துகிறோம்.”

ஹோமியோபதி சிகிச்சையை மேம்படுத்த ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. டெங்கு, மலேரியா, சின்னம்மை, எலிக் காய்ச்சலுக்குத் தடுப்பு மருந்துகள் தொடர்பாக ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. இந்தியாவில் கேரளத்தில் நிறைய ஆராய்ச்சிகள் நடந்துவருகின்றன. ரீச், எக்ஸ்பெர்ட் போன்ற ஆராய்ச்சி நிறுவனங்கள் இயங்கிவருகின்றன.

மும்பையைச் சேர்ந்த டாக்டர் பிரஃபுல் விஜய்கர், புற்றுநோய், எய்ட்ஸ் நோய்களுக்கான சிகிச்சைகள் தொடர்பாக இந்தியாவில் ஹோமியோபதி சார்ந்து முக்கிய ஆராய்ச்சிகளைச் செய்துவருகிறார்.

இந்தியாவைத் தவிர ஜெர்மனி, இங்கிலாந்து, இலங்கை போன்ற நாடுகளில் ஹோமியோபதி மருத்துவம் இருக்கிறது. ஆனால், இந்தியாவில்தான் ஹோமியோபதி பரவலாக இருக்கிறது.

ஹோமியோபதி தீர்க்கக்கூடிய நோய்கள்

குழந்தைகளுக்குப் பொதுவாக மூச்சிளைப்பு, சைனஸ், வயிற்றுக் கோளாறு, காய்ச்சல், சளி தொடர்பான பிரச்சினைகள், மூச்சுப் பிரச்சினை எல்லாவற்றுக்கும் நூறு சதவீதம் திறன்மிக்க சிகிச்சைகள் உள்ளன. ஆட்டிசம், கவனப் பற்றாக்குறையால் அவதிப்படும் குழந்தைகள், ஆட்டிசம் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்க்க ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. 20 வயது முதல் 40 வயதுவரை உள்ளவர்களை எடுத்துக்கொண்டால் நீரிழிவு, தைராய்டு, பெண்கள் எனில் கருப்பைக் கட்டி, ஹார்மோன் பிரச்னைகளுக்கு நல்ல தீர்வு உண்டு. நீரிழிவுப் பிரச்சினையால் நரம்புக் கோளாறு வந்தவர்களுக்குத் திறன்மிக்க சிகிச்சை உண்டு. இன்சுலின் சார்பு நீரிழிவு நோயாளிகளைச் சரிசெய்ய முடியும். ஹார்மோன் மாத்திரைகள் இல்லாமலேயே பெண்களுக்கு மருத்துவத் தீர்வு, ஆண்கள், பெண்கள் இருவருக்கும் மூலநோய்க்குச் சிகிச்சை, பிஸ்துலாவுக்கு சிகிச்சை, சிறுநீரகக் கற்களைக் கரைக்க, முடக்குவாத நோய்களுக்குச் சிகிச்சை கிடைக்கும்.

தீர்க்க முடியாத நோய்கள்

எய்ட்ஸ் நோய்க்குப் பெரிய தீர்வு இல்லை. முற்றிய நிலையில் உள்ள புற்றுநோயாளிகளுக்கு வலியைக் குறைக்க முடியும், தீர்வு இல்லை. பல் நோய்களுக்கு மருந்து இல்லை. உடலில் பெரிய கட்டியுடன் இருப்பவர்களுக்கு அறுவைசிகிச்சை ரீதியான தீர்வுதான் சாத்தியம். மருத்துவத் தாதிகளின் உதவி தேவையாக இருப்பதால் பெரும்பாலான ஹோமியோபதி மருத்துவர்கள் பிரசவம் பார்ப்பதில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x