Published : 25 Jan 2017 09:59 AM
Last Updated : 25 Jan 2017 09:59 AM

காரணம் ஆயிரம்: குளிர் அடிக்காத காற்று

ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் ஆங்காங்கே பள்ளி மாணவர்களும், சிறுவர்களும்கூடக் கலந்து கொண்டு போராடிய காட்சியைப் பார்த்தோம். நள்ளிரவில், நடுக்கும் குளிரில்கூடத் தீவிரமான போராட்டம் நடைபெற்றது. சரி, குளிர்காற்று ஏன் வீசுகிறது? நமக்கு மார்கழியில் குளிர்காலம் தொடங்கிவிடுகிறது. அது தை, மாசி என இரண்டு மாதங்களுக்கு நீளும்.

காற்று நம் மீது பட்டால் ஜில் உணர்வுதான் நமக்கு ஏற்படும். அதிலும் லேசான குளிர்காற்று என்றால், உடல் சிலிர்க்கும். உண்மையில் காற்று குளிரைக் கொண்டுவருகிறதா? நிச்சயமாக இல்லை. காற்று குளிரையெல்லாம் கொண்டு வருவதில்லை.

ஆனால், காற்று வீசும்போதுதானே நமக்கு அதிகம் குளிர் அடிக்கிறது? வீடுகளில், ‘வாடைக்காற்று வீசுகிறது, வெளியே சுற்றாதே. வீட்டுக்குள் வந்துவிடு’ என்று அம்மா சொல்வதைக் கேட்டிருப்பீர்கள். அப்படியென்றால் காற்றுதானே குளிரைக் கூட்டி வருகிறது.

இன்னொரு உதாரணத்தைப் பார்ப்போம்.

உங்கள் தாத்தா, பாட்டி, அப்பாவுடன் சேர்ந்து குளிர் காலங்களில் ‘வாக்கிங்’ சென்றிருக் கிறீர்களா? நடக்கும்போது காற்று வீசினால் கூடுதலான குளிரை உணர்வோம். இதை வைத்துப் பார்த்தாலும் காற்றுதானே எங்கிருந்தோ குளிரை எடுத்து வருகிறது.

இப்படிப் பல உதாரணங்கள் சொன்னாலும், உண்மையில் காற்று குளிரைக் கொண்டுவரும் காரணி அல்ல. அதாவது, காற்று குளிரைக் கொண்டுவருகிறது என்றால் அங்கு வெப்பநிலையில் மாற்றம் ஏற்பட வேண்டும். அதாவது வெப்பநிலை குறைய வேண்டும். ஆனால் அப்படி எதுவும் நிகழாது. அதவாது வெப்பநிலையில் எந்த மாற்றமும் ஏற்படாது. இதைச் சோதித்துக்கூடப் பார்க்கலாம். காற்று வீசும்போது அங்கு ஒரு வெப்பநிலைமானியை வையுங்கள்.

அது வெப்பநிலையைக் குறைத்துக் காட்ட வேண்டும் அல்லவா? ஆனால், அந்த மாதிரி வெப்பநிலையில் எந்த மாற்றத்தையும் வெப்பநிலைமானி குறைத்துக் காட்டாது. அப்படியென்றால் காற்று நிச்சயமாகக் குளிரைக் கொண்டுவரவில்லை என்றுதானே அர்த்தமாகிறதா?

பிறகு எப்படிக் காற்று வீசும்போது குளிர்கிறது. அதற்கு வேறு காரணம் இருக்கிறது. எப்போதும் நம்மைச் சுற்றியுள்ள காற்று, சூழலுக்கு ஏற்ப வெப்பமடைந்து மெல்லிய படலமாக நம்மைச் சூழ்ந்து நிற்கிறது. இந்தக் காற்றுப் படலம் நம் உடலைக் கதகதப்பாக வைத்திருக்கிறது. சூழல் வெப்பமும், நம் உடல் வெப்பமும் ஒரே அளவில் இருப்பதால் நம் உடலிலிருந்து வெப்பம் வெளியேறாமல் பராமரிக்கப்படுகிறது.

குளிர்காலத்திலும் இதுபோன்று உடலுக்கும் சூழலுக்கும் ஒரே அளவில், இதமான வெப்பநிலை குறைந்து பராமரிக்கப்படும். காற்று வீசும் போது நம் உடலிலிருந்து வெப்பத்தை இந்தக் காற்று எடுத்துச் சென்றுவிடுகிறது. காற்று வேகமாக வீசும்போது அதன் பலத்திற்கேற்ப அடிக்கடி நம் உடலிலிருந்து வெப்பத்தை எடுத்துச் செல்வதுடன், நம் உடலைச் சுற்றியிருக்கும் வெப்பப் படலத்தையும் காலி செய்துவிடுகிறது. எனவே புதிய காற்று படும்போது நாம் குளிரை அதிகம் உணர்கிறோம்.

மேலும் நமது உடலிலிருந்து நீர் எப்போதும் ஆவியாகிக் கொண்டே இருக்கிறது. நீர் ஆவியாவதற்குத் தேவையான வெப்பத்தை நம் உடலிலிருந்தும், உடலைச் சுற்றியிருக்கும் காற்றுப் படலத்திலிருந்தும்தான் நீர் எடுத்துக் கொள்கிறது. காற்று வேகமாக வீசும் போது ஆவியாதல் இன்னும் வேகமாக நடைபெறுகிறது. அப்போது இன்னும் அதிக வெப்பம் நம் உடலிலிருந்து வெளியேறிவிடுகிறது. எனவே, காற்று வீசும்போது குளிரை உணர்கிறோம். அது மட்டுமல்லாமல் காற்றில் நீர்த்திவலைகள் அடித்து வரும்போதும் பணியுடன் கலந்து காற்று வீசும்போதும் குளிரெடுக்கிறது நமக்கு.

இப்போது புரிகிறதா? காற்று குளிரைக் கொண்டு வருவதில்லை. அது நம் வெப்பத்தை எடுத்துக்கொண்டு போய் விடுகிறது.

கட்டுரையாளர்: அரசுப் பள்ளி ஆசிரியர்
தொடர்புக்கு: suriyadsk@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x