Published : 30 Jan 2014 12:00 AM
Last Updated : 30 Jan 2014 12:00 AM

பிளஸ்-2 செய்முறைத்தேர்வு மார்க் முதல்முறையாக ஆன்லைனில் பதிவு- தேர்வு முடிவுகளை வேகப்படுத்த சிறப்பு ஏற்பாடு

பிளஸ்-2 செய்முறைத்தேர்வு மதிப்பெண்கள் முதல்முறையாக இந்த ஆண்டு ஆன்லைனில் உடனுக்குடன் பதிவுசெய்யப்பட உள்ளன. தேர்வுமுடிவுகளின் பணிகளை விரைந்து முடிப்பதற்காக அரசு தேர்வுத்துறை இந்த புதிய நடை முறையை அறிமுகப்படுத்துகிறது.

8.5 லட்சம் மாணவர்கள்

பிளஸ்-2 பொதுத்தேர்வு மார்ச் 3-ம் தேதி தொடங்கி 25-ம் தேதி முடிவடைகிறது. தனித்தேர்வர்கள் உள்பட ஏறத்தாழ 8.5 லட்சம் மாணவ-மாணவிகள் தேர்வு எழுத உள்ளனர். மாணவர்களின் பெயர் பட்டியல் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப் பட்டு தற்போது சரிபார்க்கும் பணி நடைபெற்று வருகிறது. தேர்வு எழுதும் அனைத்து மாணவர் களுக்கும் பதிவு எண், தேர்வு மையம் உள்ளிட்ட அனைத்தும் ஒதுக்கப்பட்டுவிட்டது.

இந்த பிளஸ்-2 தேர்விலும் சரி, எஸ்.எஸ்.எல்.சி. தேர்விலும் சரி பல்வேறு புதிய நடைமுறைகள் அறிமுகப்படுத்தப்படுகின்றன. மாணவர்களின் புகைப்படத்துடன் கூடிய விடைத்தாள் கட்டு, ரகசிய குறியீடு (பார்கோடு) என தேர்வில் முறைகேடுகளை தடுக்கவும், பாதுகாப்பை உறுதி செய்யவும் தேர்வுத்துறை அதிரடி நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

செய்முறைத்தேர்வு

பிளஸ்-2 தேர்வு எழுதும் அறிவியல், கணித பிரிவு மற்றும் தொழில்கல்வி பாடப்பிரிவு படிக்கும் மாணவர்களுக்கு செய்முறைத்தேர்வு உண்டு. தேர்ச்சி பெறு வதற்கு தியரியில் 150-க்கு குறைந்த பட்சம் 30 மதிப்பெண்ணும், செய்முறைத்தேர்வில் 50-க்கு 40 மதிப்பெண்ணும் எடுக்க வேண்டும். பிளஸ்-2 செய்முறைத்தேர்வு மாவட்ட அளவில் நடத்தப்படும். செய்முறைத்தேர்வை பிப்ரவரி 10-ம் தேதி முதல் 28-க்குள் முடிக்குமாறு அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் தேர்வுத் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதிக எண்ணிக்கையிலான மாணவர்களை கருத்தில்கொண்டு சென்னை மாவட்டத்தில் 3 கட்டங்களாகவும், மற்ற மாவட்டங்க ளில் 2 கட்டங்களாகவும் செய்முறைத் தேர்வு நடத்தப்பட இருக்கிறது. இதுநாள் வரை செய்முறைத்தேர்வு மதிப்பெண்களை தேர்வுக்கு வருகை தரும் வெளி ஆசிரியர்கள்தான் பதிவுசெய்து தேர்வுத் துறைக்கு அனுப்பி வந்தனர்.

இந்த நிலையில், இந்த ஆண்டு முதல்முறையாக செய்முறைத் தேர்வு மதிப்பெண் தினசரி தேர்வு முடிய முடிய அன்றைய தினமே ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட உள்ளது. மதிப்பெண் விவரங்கள் மாணவர்களின் தகவல் தொகுப்பில் உடனடியாக பதிவுசெய்யப்பட்டுவிடும்.

எனவே, முன்பு போல தேர்வு முடிவுகளுக்கான பணிகளின்போது செய்முறைத்தேர்வு மதிப்பெண் விவரங்களை தியரி மதிப்பெண்ணுடன் தனியாக குறிப்பிடத் தேவை யில்லை. இதனால். மதிப்பீட்டு பணியில் ஈடுபடும் ஆசிரியர்களின் வேலைப்பளு வெகுவாக குறையும். தேர்வுமுடிவுகளின் பணிகளை விரைந்து முடிப்பதற்காக ஆன்லைன் பதிவு முறையை தேர்வுத்துறை நடை முறைப்படுத்துகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x