Last Updated : 11 Apr, 2017 10:41 AM

 

Published : 11 Apr 2017 10:41 AM
Last Updated : 11 Apr 2017 10:41 AM

சேதி தெரியுமா? - கால்பந்து தரவரிசையில் இந்தியா முன்னேற்றம்

எஸ்.பி.ஐ.யுடன் மேலும் ஒரு வங்கி

பாரத ஸ்டேட் வங்கியுடன் பாரதிய மகிளா வங்கியையும் இணைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. பெண்களுக்கான வங்கியாகப் பாரதிய மகிளா வங்கி 2013 நவம்பர் 19-ல், தொடங்கப்பட்டது. செயல்படத் தொடங்கி மூன்று ஆண்டுகளே ஆன நிலையில் இந்த வங்கி இப்போது பாரத ஸ்டேட் வங்கியுடன் இணைக்கப்படவுள்ளது. இந்த இணைப்பு தொடர்பாக நிதி அமைச்சகம் வெள்ளை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் பெண்களுக்கெனத் தனியாக 126 தனிக் கிளைகளைப் பாரத ஸ்டேட் வங்கி இயக்கிவருகிறது. அதே நேரம் பெண்களுக்கான வங்கியாகத் தொடங்கப்பட்ட மகிளா வங்கி 7 கிளைகளுடன் செயல்பட்டு வருகிறது. மேலும் பாரத் ஸ்டேட் வங்கி, பெண்களுக்கு ரூ.46 ஆயிரம் கோடி கடன் அளித்துள்ளது. ஆனால் மகிளா வங்கி தொடங்கப்பட்டதிலிருந்து இதுவரை 192 கோடி ரூபாய் மட்டுமே கடன் அளித்துள்ளது. அதே நேரம் மகிளா வங்கியை நிர்வகிக்க அதிக அளவில் தொகை செலவிட வேண்டியுள்ளது. இந்த இணைப்பின் மூலம் பெண்களுக்கான சலுகைகளை அதிகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது. ஏற்கெனவே பாரத ஸ்டேட் வங்கியுடன் ஸ்டேட் பேங்க் ஆஃப் திருவாங்கூர், ஸ்டேட் பேங்க் ஆஃப் பாட்டியாலா, ஸ்டேட் பேங்க் ஆஃப் மைசூர், ஸ்டேட் பாங்க் ஆஃப் ஹைதராபாத், ஸ்டேட் பேங்க் ஆஃப் ஜெய்பூர் ஆகிய ஐந்து வங்கிகளை இணைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

கால்பந்து தரவரிசையில் இந்தியா முன்னேற்றம்

லகக் கால்பந்து கூட்டமைப்பு கால்பந்து அணிகளின் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் பிரேசில் அணி முதல் இடம் பிடித்துள்ளது. கடந்த ஆறு வருடங்களில் பிரேசில் முதல் இடம்பெறுவது இதே முதல் முறை. அர்ஜென்டீனா, ஜெர்மனி, சிலி, கொலம்பியா ஆகிய அணிகள் முறையே அடுத்த நான்கு இடத்தைப் பிடித்துள்ளன. 132-வது இடத்தில் இருந்த இந்திய அணி 31 இடங்கள் முன்னேறி 101-வது இடத்தைப் பிடித்துள்ளது. சமீபத்தில் மியான்மரில் நடந்த ஆசியக் கோப்பை கால்பந்து தகுதிச் சுற்று ஆட்டத்தில் இந்திய அணி மியான்மர் அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது உள்பட கடந்த இரு ஆண்டுகளில் 13 ஆட்டங்களில் விளையாடி 31 கோல்கள் மூலம் 11 வெற்றிகளை இந்திய அணி பெற்றுள்ளது. இந்த வெற்றிகள் தந்த புள்ளிகள் மூலம் தரவரிசைப் பட்டியலில் இந்தியா முன்னேற்றம் கண்டுள்ளது. 1996 பிப்ரவரியில் இந்தியா 94-ம் இடத்தைப் பிடித்ததுதான் இதற்கு முன்பு இந்தியா பெற்ற சிறந்த தரவரிசை. 1993 நவம்பரில் இந்தியா 99-ம் இடத்தில் இருந்தது.

பி.வி.சிந்து முன்னேற்றம்

லக பேட்மிண்டன் கூட்டமைப்பு (Badminton World Federation) சமீபத்தில் பேட்மிண்டன் வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. இப்பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த வீராங்கணை பி.வி.சிந்து 2-ம் இடம் பெற்றுள்ளார். தொடர்ந்து வெற்றிப் படிகளில் ஏறி வரும் சிந்து 2-ம் இடம் பிடித்துள்ளார். சமீபத்தில் நடந்த இந்திய ஓபன் சூப்பர் சீரியஸ் போட்டில் ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற கரோலினா மரினைத் தோற்கடித்துப் பட்டம் வென்றார். இந்த வெற்றியின் காரணமாக தரவரிசையில் 5-ம் இடத்திலிருந்த சிந்து மூன்று இடங்கள் முன்னேறி 2-ம் இடம் பிடித்துள்ளார். சீன தைபேய் வீரங்கானை டாய் சூ யிங் முதல் இடத்தைப் பிடித்துள்ளார். தரவரிசைப் பட்டியலில் முதல் இடத்தில் இருந்த சாய்னா நேவால் தற்போது 9-ம் இடத்துக்குப் பின்தங்கியுள்ளார். உலக பேட்மின்டன் பேடிட்டன் கூட்டமைப்பு (Badminton World Federation) 1934-ம் ஆண்டு இங்கிலாந்தில் உருவாக்கப்பட்ட அமைப்பு. இங்கிலாந்து, கனடா, பிரான்ஸ், டென்மார்க், நியூசிலாந்து உள்ளிட்ட ஒன்பது உறுப்பினர்களுடன் தொடங்கப்பட்ட இந்த அமைப்பில் இப்போது இந்தியா உள்பட 176 உறுப்பினர் நாடு உள்ளன. இப்போது இந்த அமைப்பு மலேசியத் தலைநகர் கோலாலம்பூரைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.

சிறந்த கல்லூரிகள் தரவரிசை

த்திய மனிதவள மேம்பாட்டுத் துறை, இந்திய அளவில் சிறந்த கல்லூரி, பல்கலைக் கழகங்களுக்கான தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. இவற்றில் கலை, அறிவியல், பொறியியல், நிர்வாகம், மருந்தாளுமைக் கல்லூரிகளும் அடக்கம். மொத்தம் 3,319 கல்வி நிறுவனங்கள் இந்தத் தரவரிசைப் போட்டியில் கலந்துகொண்டன. 232 பல்கலைக்கழகங்களும் இவற்றுள் அடக்கம். இவற்றில் பெங்களூரைச் சேர்ந்த இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ் (Indian Institute of Science, Banglore) பல்கலைக்கழகம் முதலிடம் பெற்றுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்துக்கு 6-ம் இடம். சிறந்த பொறியியல் கல்லூரிகளில் முதலிடத்தைச் சென்னை ஐ.ஐ.டி. (Indian Institute of Technology) பெற்றுள்ளது. சிறந்த மேலாண்மைக் கல்லூரிகளில் அகமதாபாத் ஐ.ஐ.எம். (Indian Institute of Management, Ahmedabad) முதலிடத்தைப் பெற்றுள்ளது. கோழிக்கோடு ஐ.ஐ.எம். (Indian Institute of Management, Kozhikode) 5-ம் இடத்தைப் பெற்றுள்ளது. திருச்சி ஐ.ஐ.எம். (Indian Institute of Management, Trichy) 13-வது இடத்தைப் பெற்றுள்ளது. சிறந்த கலை அறிவியல் கல்லூரிகளில் டெல்லி மிராண்டா கல்லூரி முதல் இடத்தையும் சென்னை லயோலா கல்லூரி 2-ம் இடத்தையும் பெற்றுள்ளன. திருச்சியைச் சேர்ந்த பிஷப் ஹீபர் கல்லூரிக்கு 4-ம் இடம் கிடைத்துள்ளது. சிறந்த மருந்தாளுமைக் கல்லூரிகளில் டெல்லியைச் சேர்ந்த ஜாமியா ஹம்தார்ட் கல்லூரி முதலிடத்தைப் பெற்றுள்ளது.

பிளாஸ்டிக் உண்ணும் பூஞ்சை

சீன அறிவியல் அகாடமியைச் சேர்ந்த விஞ்ஞானிகள் பிளாஸ்டிக் உண்ணும் பூஞ்சையைக் கண்டுபிடித்துள்ளனர். மண்ணில் காணக்கூடிய இந்த வகை பூஞ்சை (Aspergillus tubingensis) பாகிஸ்தானில் இஸ்லாமாபாத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பிளாஸ்டிக்கின் வேதிப் பிணைப்பைத் தகர்க்கும் ஆற்றல் இந்தப் பூஞ்சைக்கு உண்டு. இதன் மூலம் பிளாஸ்டிக் கழிவுகளை எளிதாக அழிக்க முடியும். பிளாஸ்டிக் கழிவுகள் மேலாண்மையில் உள்ள பிரச்சினைகளை எதிர்கொள்ள இந்தப் புதிய பூஞ்சை உதவும் என விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

பிட்காயினுக்கு ஜப்பான் அங்கீகாரம்

புதிய சட்டத் திருத்தத்தின் மூலம் பிட்காயின் பணத்துக்கு ஜப்பான் அங்கீகாரம் அளித்துள்ளது. பிட்காயின் என அழைக்கப்படுவது ஒரு எண்ம நாணயம் (digital currency). அதாவது இது நம்முடைய பணத்தைப் போலக் காகிதத்தால் ஆனதாகவோ, நாணயம்போல் உலோகத்தால் ஆனதாகவோ இருக்காது. இது கணினியில் சேமித்துக்கொள்ளக்கூடிய வகையில் எண்மமாக இருக்கும். ஜப்பானைச் சேர்ந்த சடோஷி நகமோட்டா 2008-ல் இதைக் கண்டுபிடித்தார். பிட்காயின்களை எந்த நாடோ, அமைப்போ கட்டுப்படுத்த முடியாது. அவற்றை அங்கீகரிக்கப்பட்ட பணமாக மாற்றும் உலகின் முதல் பிட்காயின் ஏடிஎம் கனடாவில் வான்கூவர் நகரில் 2013-ம் ஆண்டு திறக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x