Last Updated : 22 Feb, 2014 12:00 AM

 

Published : 22 Feb 2014 12:00 AM
Last Updated : 22 Feb 2014 12:00 AM

தாய் தந்த பரிசு

அந்தச் சிறுவன் பள்ளியில் தனக்கு ஒருவர்கூட நண்பர் இல்லை என்று குறைபட்டுக்கொண்டான். அதனால் அவனுக்குத் தனது பிறந்த நாளைக் கொண்டாடக்கூட ஆர்வம் இல்லை. இன்று அவனுக்கு உலகம் முழுவதும் நண்பர்கள் இருக்கிறார்கள். கிட்டத்தட்ட 20 லட்சம் பேர் அவனது பிறந்த நாளைக் கொண்டாட ஆர்வத்துடன் உள்ளனர். எல்லாம் அவன் தாயின் பேரன்பாலும் அறிவியல் வளர்ச்சியாலும் நிகழ்ந்த அற்புதம்.

அமெரிக்காவின் மிக்ஷிகன் நகரில் வசித்துவருகிறான் சிறுவன் காலின்ஸ். பத்து வயதாகிறது. அடுத்த மாதம் 11ஆவது பிறந்த நாள். காலின்ஸின் அம்மா ஜெனிபர் கன்னிங்ஹாம் சில வாரங்களுக்கு முன் பிறந்த நாள் கொண்டாட்டம் பற்றி மகனுடன் பேசியிருக்கிறார். அப்போது காலின்ஸ் தனக்குப் பிறந்த நாள் கொண்டாட்டம் வேண்டாம் எனக் கூறியிருக்கிறான். அதற்கு காலின்ஸ் கூறிய காரணம் அம்மா ஜெனிபரை உலுக்கிவிட்டது.

சிறுவன் காலின்ஸ் ஆட்டிசம் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளான். இதனால் அவனால் மற்ற பிள்ளைகள் போல சகஜகமாகப் பழக முடியாது. இதன் காரணமாக காலின்ஸுடன் மற்ற பிள்ளைகள் ஒட்டாமலேயே இருக்கின்றன. தினமும் பள்ளியில் காலின்ஸ் மதிய உணவைக்கூடத் தனியாகத்தான் சாப்பிடுவான். எனவே வீட்டில் பிறந்த நாள் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தாலும், நண்பர் என ஒருவர்கூட வர வாய்ப்பில்லை என நினைத்த காலின்ஸ் தனக்குப் பிறந்த நாள் கொண்டாட்டமே வேண்டாம் எனக் கூறிவிட்டான்.

காலின்ஸின் தாய் ஜெனிபர் இதைக் கேட்டு நிச்சயம் உள்ளுக்குள் மருகியிருக்க வேண்டும். மகனைச் சமாதானப்படுத்தி மகிழ்ச்சியில் ஆழ்த்த அவரது தாயுள்ளம் துடித்திருக்க வேண்டும். வார்த்தைகளாலோ பரிசுகளாலோ இது சாத்தியம் அல்ல என அவர் நினைத்திருக்கலாம்.

ஹாப்பி பர்த் டே காலின்ஸ்

எது எப்படியோ அவர் தன் மகன் காலின்ஸின் 11ஆவது பிறந்த நாளை விஷேசமானதாக்க சமூக வலைத்தளமான பேஸ்புக் உதவியை நாடத் தீர்மானித்தார். எல்லோரும் நணபர்களைத் தேடிக்கொள்ளவும் நட்புணர்வைப் பரிமாறிக்கொள்ளவும் பயன்படுத்தும் பேஸ்புக்கில் அவர் காலின்ஸுக்காக, ஹாப்பி பர்த் டே காலின்ஸ் எனும் பெயரில் ஒரு பக்கத்தைத் தொடங்கினார். “மகனின் 11ஆவது பிறந்த நாளை மகிழ்ச்சியாகக் கொண்டாட ஒரு தாய்க்கு உதவுதற்காக அமைக்கப்பட்ட பக்கம்” எனும் அறிமுகத்துடன் காலின்ஸின் நிலை பற்றியும் இந்தப் பக்கத்திற்கான நோக்கம் பற்றியும் சுருக்கமாகக் குறிப்பிட்டிருந்தார்.

எப்போதும் தனிமையில் இருக்கும் காலின்ஸுக்கு இந்த பேஸ்புக் பக்கம் மூலம் பலரும் தங்களது வாழ்த்துகளை அனுப்பி வைத்து அவனது பிறந்த நாளை மகிழ்ச்சியானதாக மாற்றுவார்கள் என எதிர்பார்ப்பதாகவும் முதல் பதிவில் அவர் குறிப்பிட்டிருந்தார். என்னோடு சேர்ந்து காலின்ஸின் பிறந்த நாளை விஷேசமாக ஆக்குங்கள் என்றும் வேண்டுகோள் வைத்திருந்தார்.

முகம் தெரியாத சிலரெனும் தன் மகனுக்கு வாழ்த்துகளைத் தெரிவிப்பார்கள் என்று அவர் எதிர்பார்த்திருந்தார். ஆனால் அவரே எதிர்பார்க்காத விதமாக இந்த பேஸ்புக் பக்கத்திறகு லைக்குளும் வாழ்த்துகளும் குவியத் தொடங்கிவிட்டன. பிப்ரவரி 2ஆம் தேதி இந்த பக்கம் உருவாக்கப்பட்டது. முதல் ஒரு மணிநேரத்தில் 13 லைக்குகள் கிடத்திருந்தன. ஜெனிபர் இதற்கே மகிழ்ந்து போனார். மறுநாள் லைக்குகளின் எண்ணிக்கை 100 ஐ தொட்டது. 101 லைக்குகள் , காலின்ஸ் நேசிக்கப்படுவதை நினைததால் நெகிழ்ச்சியாக இருக்கிறது என ஜெனிபர் மகிழ்ச்சியோடு தெரிவித்திருந்தார். 100 லைக்களை நினைத்தே மகிழ்ந்தவர் இந்த எண்ணிக்கை லட்சத்தைத் தாண்டும் என எதிர்பார்த்திருக்க மாட்டார். ஆனால் அது நடந்தது. சிறுவனின் கதை பலரது உள்ளத்தைத் தொட்டதால் உலகம் முழுவதிலும் இருந்து முன் பின் தெரியாதவர்கள் தொடர்ந்து வாழ்த்துகளை தெரிவித்தனர்.

லட்சங்களைத் தொட்ட லைக்குகள்

ஒரு சிறுவனின் பிறந்த நாளை மகிழ்ச்சியானதாக்க இப்படிப் பத்தாயிரம் பேருக்கு மேல் பேஸ்புக்கில் ஆதரவு தெரிவித்த நெகிழ்ச்சியான செய்தியைப் பிரபலமான டெய்லி மெயில் நாளிதழ் செய்தியாக வெளியிட்டிருந்தது. காலின்ஸின் பேஸ்புக் பக்கத்தில் 13,000 லைக்குகள் இருப்பதாக டெய்லி மெயில் குறிப்பிட்டிருந்தது. ஆனால் அது19 லட்சத்தைத் தாண்டியிருக்கிறது. தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் அந்தப் பக்கத்திற்கு வருகை தந்து காலின்சுக்கு வாழ்த்து தெரிவிக்கின்றனர்.

இந்த ஆதரவால் காலின்சின் அம்மா ஜெனிபர் திக்குமுக்காடி போயிருக்கிறார். தனிமையில் இருப்பதால் பிறந்த நாள் கொண்டாட்டம் வேண்டாம் என நினைத்த சிறுவன் காலின்ஸீக்கு இன்று உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 20 லட்சம் நண்பர்கள் கிடைத்திருக்கின்றனர். பெரும் பாலானோர் லைக் தெரிவிப்பதோடு நிற்கவில்லை. சிறுவனுக்கு வாழ்த்துச் செய்தியையும் பதிவுசெய்துள்ளனர். காலின்ஸ் போன்ற விஷேசமான குழந்தைகள் கொண்ட அம்மாக்கள் தங்கள் மன உணர்வுகளைப் பகிர்ந்துகொண்டுள்ளனர். சிறு வயதில் பல்வேறு காரணங்களுக்காகக் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளானவர்களும் தங்கள் அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டுள்ளனர். இது மட்டுமல்லாமல் வாழ்த்து அட்டைகளும் பரிசுப்பொருட்களும் அஞ்சல் வழியாகவும் வந்துகுவிந்தது.

இந்த உலகில் அன்புக்கும் ஆதரவுக்கும் குறைவில்லை என்பதை உணர்த்தும் இந்த பேஸ்புக் பக்கம் பற்றி இன்னமும் காலின்ஸுக்குத் தெரியாது. பிறந்த நாள் பரிசாக இந்தப் பக்கத்தைக் காண்பித்து அவனை ஆச்சர்யத்தில் ஆழ்த்த வேண்டும் என்று தாய் ஜெனிபர் விரும்புகிறார்.

மார்சி 9இல் காலின்ஸுக்குப் பிறந்த நாள். சிறப்புமிக்க அந்தச் சிறுவனுக்கு பிரம்மாண்டமான ஆச்சர்யம் காத்திருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x