Last Updated : 18 Jun, 2016 12:08 PM

 

Published : 18 Jun 2016 12:08 PM
Last Updated : 18 Jun 2016 12:08 PM

தயக்கம் இதற்கு சிகிச்சை அல்ல!

திருமணமாகிக் குழந்தைக்காக மருத்துவரை அணுகும் பல ஆண்கள் “டாக்டர் ஒரு நிமிஷம், நான் சின்ன வயதில் தவறு செய்துவிட்டேன்” என்று மிகுந்த தயக்கத்துடன் பேச ஆரம்பிப்பார்கள்.

அவர்கள் பேசத் தயங்கும் அந்த விஷயம்: சுயஇன்பம். ஆனால், அது குற்றமே அல்ல என்பதைப் பலரும் உணர்வதில்லை. செக்ஸ் உணர்ச்சியின் ஒரு வெளிப்பாடுதான் அது. தனிமையில் இனிமை காணும் செயல். ஆதிகாலம் முதல் இன்றுவரை தொடர்ந்து வரும் ஒரு செல்ஃபி செயல்பாடு. பருவ வயதை எட்டிய பிறகு, 12 14-க்கு இடைப்பட்ட வயதில் உடலில் ஏற்படும் பருவ மாற்றங்களால் பூரிப்படைந்து, மனக்கிளர்ச்சியால் உந்தப்பட்டுச் செய்யப்படும் ஓர் இயற்கை நிகழ்வு.

ஆண், பெண் இரு பாலரும் இதில் ஈடுபட்டாலும், ஆண்களே கூடுதல் ஆர்வம் காட்டுகிறார்கள் என்பது பொதுவான கணிப்பு. கிட்டத்தட்ட 75 சதவீத ஆண்களுக்கு இப்பழக்கம் இருக்கக்கூடிய சாத்தியம் இருந்தாலும், சமுதாயச் சாடலுக்குப் பயந்து ஒப்புக்கொள்ள அவர்கள் தயக்கம் காட்டுகிறார்கள்.

வரலாறு

கி.மு. 4 - 6-ம் நூற்றாண்டு முதல் இப்பழக்கம் இருந்தது என்பதற்கு நைல் நதிக் கரையில் ஒரு வரலாற்றுச் சான்று உள்ளது. கஜுராஹோ சிற்பங்களில்கூட ஆண், பெண் சுயஇன்பம் செய்யும் சிற்பங்கள் உண்டு. ரோமானிய வரலாற்றில் இப்பழக்கம் மதக்குற்றமாகக் கருதப்பட்டுத் தடை விதிக்கப்பட்டதற்கான சான்றுகள் உள்ளன. 19-ம் நூற்றாண்டில் கால்சட்டை பாக்கெட்டில் கைவிட்டு ஆண் உறுப்பைத் தொடாத வண்ணம் தடுப்பு அமைக்கப்பட்ட கால்சட்டை பிரபலமாக இருந்தது. பின்னர் காலங்கள் மாற இப்பழக்கம் மிதமாக இருப்பது மனத்துக்கு இன்பத்தையும் உடலுக்கு ஊக்கத்தையும் அளிக்கும் என்ற பொதுக்கருத்தை மருத்துவ உலகம் நிறுவியது.

கேன்சர் கவுன்சில் ஆஸ்திரேலியா அமைப்பு சார்பில் டாக்டர் கிரஹாம் ஜைல்ஸ் தலைமையில் 2009-ல் நடைபெற்ற ஆய்வு, சுயஇன்பம் செய்யும் ஆண்களுக்குப் புரஸ்தகோள புற்றுநோய் (Prostate Cancer) வருவதற்கான சாத்தியம் குறைகிறது என்று தெரிவிக்கிறது.

சில தொந்தரவுகள்

அதேநேரம் இது சார்ந்து பிரச்சினைகள் இல்லாமல் இல்லை:

l சுயஇன்பத்தில் அதிகம் ஈடுபடும்போது ஆணுறுப்பின் முன்தோல் கிழியும் வாய்ப்பு உண்டு.

l Phimosis உள்ளவர்களுக்கு வலி மற்றும் முன்தோல் கிழிவதற்கான வாய்ப்பு அதிகம்.

l ஆணுறுப்பு வளைதல் (Curvature Penis) ஏற்படும் வாய்ப்புள்ளது.

l POIS (Post Orgasmic illness syndrome) என்ற குறைபாடு ஏற்பட்டால் விந்து வெளிப்படும் நேரத்தில் அடிவயிற்றில் தசை உள்ளிழுப்பது போன்ற ஒரு பிசைதல் உணர்வு, உடல் சோர்வு, அடிவயிற்று வலி ஏற்படும்.

l முன்பின் இழுத்துச் செய்யும்போது, Penile Fracture எனப்படும் ஆணுறுப்பு முறிவு அரிதாக ஏற்பட்டிருக்கிறது.

சில மூடநம்பிக்கைகள்

சுயஇன்பம் செய்பவர்களுக்குக் கீழ்க்கண்ட பிரச்சினைகள் வரலாம் என்பது மூடநம்பிக்கையே:

l கன்னம் ஒட்டிப் போகும்

l கருவளையம் படரும்

l ஆணுறுப்பு சுருங்கிவிடும்

l விந்துத் திறன் குறைவு ஏற்படும்

l விதைப்பை தொங்கிக் காணப்படும்

l உடலுறவில் ஆர்வம் ஏற்படாது

l திருமணமான பின் உடலுறவு சிறக்காது

எச்சரிக்கை

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதற்கு ஏற்ப, இந்தப் பழக்கம் ஒரு வழக்கமாக Nervous habit ஆக மாறி, Compulsive masturbation என்ற தவிர்க்கவியலாத நிலையில் நோயாக வெளிப்படலாம்.

இந்த நிலைக்கான அறிகுறிகள்

l தனிமையை விரும்புதல்

l கல்வியில் கவனச் சிதறல்

l செயல்பாடுகள் தாமதம்

l கூட்ட நிகழ்ச்சிகளைத் தவிர்ப்பது

l தாழ்வு மனப்பான்மை

l விரக்தியும் பயமும் கலந்த பார்வை, பேச்சு, உடலசைவு

இந்தச் சூழலில் மனநலம் + மருத்துவ ஆலோசனை அவசியம் தேவை. இப்படித் தனித்திருப்பவர்களை இயல்பானவர்களாக மாற்றும் திறன் பெற்றோருக்கும் மருத்துவருக்கும் உண்டு. தாயும் தந்தையும் சற்றே தலை கோதி, கைப்பிடித்து, தோளில் கைபோட்டு நண்பனாக இருப்பதே பாதி மருத்துவம். மீதி மருத்துவர் கடமை.

விடுபட ஆலோசனைகள்

l தனிமையைத் தவிருங்கள்

l ஆர்வத்தைத் தூண்டும் செக்ஸ் புத்தகங்கள், படங்கள், போர்னோகிராபி பக்கம் அதிகம் தலைவைக்காதீர்கள்.

l புகை, மதுவைத் தொட்டுப் பார்க்காதீர்கள்.

l தூக்கத்தைத் தள்ளிப் போட வேண்டாம்.

l இறைச்சி உணவைக் குறைக்கவும்.

l பெற்றோர் அல்லது நல்ல தோழர்களுடன் இது பற்றி மனம் விட்டுப் பேசுங்கள்.

l மன அமைதி பெற முறையான யோகா, தியானம் மற்றும் மூச்சு பயிற்சிகளை மேற்கொள்ளுங்கள்.

l திருமூலர் அருளிய மூச்சுப் பயிற்சியின் மூலம் மன அழுத்தத்தை உருவாக்கும் Stress Hormones குறைகிறது என்கிறது நவீன ஆய்வு.

l உடலுக்கும் மனத்துக்கும் உழைப்புக்கும் ஏற்ற உணவு

l உரிய மருத்துவரின் ஆலோசனையும் மருத்துவமும் தேவை

மருத்துவ சிகிச்சை

அங்காதி பாதம் என்ற எண்ணெய்க் குளியலை முதலில் மேற்கொள்ளச் சித்த மருத்துவம் அறிவுறுத்துகிறது. உடலுக்கு ஏற்றாற்போல் நல்லெண்ணெய் அல்லது குளிர் தாமரை தைலமும் பயன்படுத்தலாம். தலையில் தொடங்கி மேலிருந்து கீழாகப் பாதம்வரை எண்ணெயைத் தடவி ஊற வைத்து வெந்நீரில் குளிக்கவும். அப்போது மனதுக்கும் உடலுக்கும் புத்துணர்வு கிடைக்கும்.

உணவே மருந்து:

இதற்கு மருந்தாகும் உணவு வகைகள்:

l உளுந்தங்களி, உளுந்தஞ்சோறு, உளுந்தோதணம், உளுந்துவடை எனப் பல உளுந்து உணவு வகைகள் இருந்தாலும் தென்னகத்தின் பாரம்பரிய உணவாகத் தோல்உளுந்து, புழுங்கல் அரிசி, சின்ன வெங்காயம் சேர்த்துச் செய்த உளுந்தங்கஞ்சி திகழ்கிறது.

l நம் பாட்டிகள் அறிவுறுத்திய முளைகட்டிய சிறுதானியப் பயறுக் கஞ்சி

l தென் தமிழகத்தின் மரபு உணவான மறைந்துவரும் பருத்திப் பால்

(செய்முறை: பருத்திக் கொட்டையை 12 மணி நேரம் நீரில் ஊறவைத்து மிக்சியில் அரைத்துப் பிழிந்தால், இள மஞ்சள் நிறப் பால் வரும். இதை லேசாகச் சூடாக்கி ஏலம், சுக்கு, கருப்பட்டி (அ) வெல்லம் சேர்த்துக் குடிப்பது மிகவும் சத்தான டானிக்.)

l ‘இன்பம் தரும் கீரைகள்’ என்று சித்தர் நூல்கள் விவரித்த, முருங்கை, தூதுவளை, வல்லாரை, பசலை. இவற்றைப் பாசிப்பயறு, நெய் சேர்த்துப் பொரியல் அல்லது கூட்டாகச் சாப்பிடலாம்.

l துவையல்: வாழைப்பூ துவையல், பிரண்டை துவையல் ஆகிய இரண்டுமே உடல் சூடு மற்றும் பித்தத்தைக் குறைக்கக்கூடியவை. புளிச்சகீரை துவையல், உடல் ஆற்றலைப் பெருக்கும். எள் துவையல், மன அமைதியைத் தரும்.

l சமீபத்தில் தொகுக்கப்பட்ட சித்த மருத்துவ நூல்களில் உருளைக்கிழங்கு பரிந்துரைக்கப்படுகிறது. இது மாமிசத்துக்கு ஒப்பான கலோரியை அள்ளித் தரும் சைவ உணவு. வேகவைத்த உருளையுடன் மிளகு, சீரகம், நெய் சேர்த்துச் சாப்பிடவும்.

l உட்சூட்டைக் குறைக்க வெண்பூசணிக் கூட்டு, வாழைத்தண்டு பச்சடி, வெள்ளரி, வெங்காயம் சேர்ந்த சாலட் சாப்பிடலாம்.

l வாரம் இரண்டு முறை நாட்டுக் கோழி, சிவப்பு இறைச்சி, மீன் ஏதேனும் ஒன்று.

l பாலிபீனால் நிறைந்த கலர் பழங்கள்: மாதுளை, சிவப்பு கொய்யா, கொட்டையுடன் கூடிய கறுப்புப் பன்னீர் திராட்சை மற்றும் வாழையடி வாழையான வாழைப்பழம்.

மருந்துகள்

l தேறாத உடலையும் தேற வைக்கும் தேற்றான் லேகியம், உடல் வன்மைக்கு அசுவகந்தி லேகியம், வெண்பூசணி லேகியம்.

l தொட்டாற்சிணுங்கி குடிநீர்: ஒரு கைப்பிடி அளவு இலையை 200 மி.லி. தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைத்து 50 மி.லி.யாக வற்ற வைத்து வடிகட்டி குடிக்கவும். இதனால் நரம்புத் தளர்ச்சி விரைவில் நீங்கும்.

l ரத்தின புருஷ் என்று அழைக்கப்படும் ஓரிதழ் தாமரை - நிலத்தை ஒட்டிப் பயிராகும் சிறு செடி. சுவைத்தால் வாயில் குழகுழப்பு தட்டும். பத்து இலையைச் சுத்தம் செய்து பச்சையாக மென்று சுவைப்பது உடலுக்கு வன்மையைக் கொடுக்கும். கிடைக்கும் காலத்தில் சேகரித்து, உலர வைத்துப் பொடி செய்துகொண்டு, ஒரு குவளை பாலில் ஒரு ஸ்பூன் கலந்து காலை, மாலை குடிக்கலாம்.

l இரவில் ஒரு டம்ளர் பாலில் அமுக்கரா பொடி ஒரு ஸ்பூன் கலந்து குடித்துவர, மன அமைதியுடன் கூடிய நல்ல தூக்கம் கிடைக்கும்.

l தகுந்த சித்த மருத்துவரை அணுகி அவருடைய பரிந்துரையின் பேரில் மட்டும் இவற்றில் தேவைப்படும் மருந்துகளை, குறிப்பிட்ட நாள்வரை எடுத்துக்கொள்ளவும்.

சில நன்மைகளும் உண்டு

l மகப்பேறு வேண்டி மருத்துவரை அணுகும்போது கணவருக்கு முதலில் பரிந்துரைக்கப்படும் விந்து பரிசோதனை (Semen Analysis) சுயஇன்பம் மூலமே பெறப்படுகிறது.

l சில செயற்கை முறை கருத்தரிப்புக்கு (IUI Intra Uterine Insemination) சுயஇன்பம் மூலமே விந்து பெறப்படுகிறது.

l ஒருவருக்கு ஆரம்பக் காலத்திலேயே புற்றுநோய் கண்டறியப்பட்டுவிட்டால், இப்பழக்கம் மூலமே விந்து சேகரிக்கப்பட்டு விந்து வங்கியில் (Sperm Bank) தேக்கப்படுகிறது. அவர்களுக்குத் தேவைப்படும்போது, பின்னர் அளிக்கப்படுகிறது.

l தவறான உடலுறவால் பால்வினை நோய்களுக்கு (STD) ஆளாவதைவிட, இந்தப் பழக்கம் பிரச்சினை இல்லாத வடிகால்.

l சுயஇன்பம் செய்வதால் எண்டார்பின் (Feel Good Harmones) நிறைய சுரப்பதால் மனத் தெளிவும் உடலுக்குப் புத்துணர்ச்சியும் கிடைக்கிறது என்கிறார்கள் வெளிநாட்டு ஆராய்ச்சியாளர்கள்.

என்றாலும் சுயஇன்பப் பழக்கம் பற்றிய சர்ச்சைகள் இன்றளவும் தொடர்ந்தே வருகின்றன. நோயாளியின் அச்ச உணர்வைப் பயன்படுத்தி வணிகம் செய்யும் விளம்பரங்கள், மருத்துவ (?) நிகழ்ச்சிகளும் நிறைய பணம் பார்த்துவருகின்றன. தீதும் நன்றும் பிறர் தர வருவதில்லை. எனவே, சிந்தித்துச் செயல்பட வேண்டும்.

-கட்டுரையாளர், சித்த மருத்துவர்

தொடர்புக்கு: ezhilsiddha@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x