Published : 14 Aug 2016 04:07 PM
Last Updated : 14 Aug 2016 04:07 PM

வாசகர் வாசல்: பெண்களைச் சிதைத்தொழிக்கும் வெறியாட்டம்

பாலியல் வன்கொடுமை என்பது ஏதோ ஒரு பெண்ணின் விருப்பத்துக்கு மாறாக ஒரு ஆண் உறவுகொள்ளும் செயல் என்றே புரிந்துகொள்ளவும் விவரிக்கவும்படுகிறது. ஆனால் அப்படி வரையறுத்துவிடுகிற அளவுக்கு அது சாதாரண செயல் அல்ல. ஒரு பெண்ணின் உடலை, உள்ளத்தை, தன்னம்பிக்கையை சுக்குநூறாக நொறுக்கி அவளை முடக்கிப்போட்டுவிடும் கொடூரச் செயல். தனி மனிதனால் நிகழ்த்தப்படுகிற வன்முறையே இந்த அளவுக்கு வலியைத் தரும் என்றால் கூட்டு பாலியல் வன்முறைகளைப் பற்றி சொல்லத் தேவையில்லை. ஒவ்வொரு கூட்டு பாலியல் வன்முறைக்கு முன்னும் பின்னும் பெண்ணை மனிதத் தன்மையற்ற முறையில் நடத்துவது, தாக்குவது, துன்புறுத்துவது, சிதைப்பது என்று விவரிக்க முடியாத கொடுமைகள் நிகழ்த்தப்படுகின்றன. இவை ஏதோ மிதமிஞ்சிய பாலுணர்வு வேட்கையில் நடந்துவிடுபவை என்று சொல்லிவிட முடியாது. ஒரு ஆண் தன்னை ஆண் என்று நிலைநாட்ட, ஒரு பெண்ணை, அவள் சார்ந்த சாதியை ஒடுக்க எனப் பல்வேறு காரணங்களுக்காக இது திட்டமிட்டுச் செயல்படுத்தப்படுகிறது.

குழு வன்முறையாளர்கள் பெரும்பாலும் குற்றப் பின்னணி உடையவர்களாக இருப்பார்கள். இல்லையென்றால் மது, போதை பழக்கங்களுக்கு ஆட்பட்டிருப்பார்கள். வறுமை, வேலையின்மை, சிறு வயதில் வன்முறைக்கு ஆளாதல் போன்றவையும் இதுபோன்ற குற்றச் செயல்களுக்குக் காரணமாக அமையலாம். பெண்ணை நுகர்வது ஆணின் உரிமை என்ற சமூகக் கருத்தும் முக்கியமான காரணம்.

ஒரு பெண்ணைச் சிதைத்து அழிக்கும் வேலையில் ஈடுபடுகிறவர்கள், அந்த நிகழ்வைத் தங்கள் செல்போனில் படமாக்குகிற வக்கிரமும் நடக்கிறது. தாங்கள் செய்த சாகசச் செயல்போல அதைப் பதிவு செய்வது ஒரு வகை என்றால், அந்தப் படத்தைக் காட்டி பயமுறுத்தி மீண்டும் மீண்டும் அந்தப் பெண்ணை தங்கள் இச்சைக்கு அடிபணிய வைக்க நினைப்பது இன்னொரு வகை. சிலர் இதுபோன்ற படங்களை இணையதளத்தில் பதிவேற்றுவதும் நடக்கிறது. பாலுறவு காட்சிகளுக்கென்றே பிரத்யேகமாக இருக்கும் இணையதளங்களைவிட, இதுபோன்ற லைவ் வீடியோக்கள் பலராலும் விரும்பிப் பார்க்கப்படுகின்றன என்பது அதிர்ச்சி தருகிறது. இதுபோன்ற வீடியோக்கள் விற்பனைக்கும் கிடைக்கின்றன என்பது புரையோடிப்போன சமூக நோய்க்குக் கண்ணாடி.

இப்படியொரு சூழலில்தான் ஒரு பெண், சாதிக்கவும் தன்னை அடையாளப்படுத்திக்கொள்ளவும் வேண்டியிருக்கிறது. பாலியல் வன்முறையால் பாதிக்கப்படும் பெண்களுக்கும் அவர்களுடைய குடும்பங்களுக்கும் சரியான நேரத்தில் வழங்கப்படுகிற நீதி மட்டுமே, பெண்களுக்குத் தன்னம்பிக்கையையும் துணிவையும் தரும். அரசாங்கமும் சட்டமும் விழிப்புடன் செயல்பட்டு, பெண்களைக் காக்க வேண்டிய தருணம் இது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x