Published : 09 Jan 2014 12:00 AM
Last Updated : 09 Jan 2014 12:00 AM

3 பாடப் பிரிவுகளைப் படிக்கும் ஆசையை நிறைவேற்றும் அசத்தலான பட்டப்படிப்பு

மருத்துவம், பொறியியல், சமூக அறிவியல் என இவை மூன்றையும் அளிக்கக்கூடிய பட்டப்படிப்பு இரண்டு ஆண்டுக்கு முன்பு அறிமுகம் செய்யப்பட்டது. மாணவ, மாணவியரின் அறிவுத் திறனுக்கு சவால் விடக்கூடிய இந்த பட்டப்படிப்பை பெங்களூருவில் உள்ள இன்டியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் சைன்ஸ் கல்லூரியில் பயிலலாம். நான்கு ஆண்டு படிக்க கூடிய அன்டர் கிராஜுவேட் புரோகிராம் இன் பேச்சுலர் ஆஃப் சைன்ஸ் படிப்பு மூலம் இந்த 3 பாடப்பரிவை ஒரே நேரத்தில் படிக்கக்கூடிய வாய்ப்பை பெறலாம்.

பொறியியல், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய 3 பாடங்களிலும் வல்லமை படைத்த மாணவர்களுக்கு இந்த பட்டப்படிப்பு நல்ல தேர்வாக அமையும். இந்த 3 பாடங்களில் புதுமையை புகுத்தியுள்ளதுடன் ஆழமான முறையில் பாடத் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.

முதல் மூன்று செமஸ்டரில் வேதியியல், இயற்பியல், உயிரியல், கணிதம், யுமானிட்டீஸ் பாடத்திட்டங்கள் பயில வேண்டும். அடுத்ததாக 4,5 மற்றும் 6 ஆகிய செமஸ்டர்களில் ஏதாவது ஒரு விருப்பப் பாடத்தை எடுத்து இதனுடன் பயில வேண்டும். 7, 8 ஆகிய செமஸ்டர்களில் ஆராய்ச்சிக்காக எடுத்த பாடத்தைக் கொண்டு ஆராய்ச்சி மேற்கொள்ள வேண்டும். திறன் மிக்க மாணவ, மாணவியர் கூடுதலாக மேலும் ஒரு பாடத்தைக் கொண்டு ஆராய்ச்சியை மேற்கொள்ளலாம். ஆராய்ச்சியில் ஓராண்டு ஈடுபட வேண்டியிருக்கும்.

இறுதியாண்டு முடித்து சான்றிதழ் பெறும்போது, கூடுதலாக ஆராய்ச்சி செய்தவை அனைத்தும் சான்றிதழில் பதிவு செய்யப்பட்டிருக்கும். மொத்தம் 120 இடங்கள் மட்டுமே கல்லூரியில் உள்ளதால் போட்டி கடுமையானதாக இருக்கும். இந்த பட்டப் படிப்பில் சேர தனியாக நுழைவுத் தேர்வு நடத்தப்படுவதில்லை.

கே.வி.பி.ஒய். நுழைவுத் தேர்வு, ஜே.இ.இ. மற்றும் ஆல் இந்தியா ப்ரீ-மெடிக்கல் அண்டு டெண்டல் எக்ஸாம் ஆகியவற்றின் தர வரிசைப் பட்டியலில் இடம் பிடித்தவர்களில் 120 பேர் தேர்வு செய்யப்படுவர்.

இப் பாடப்பிரிவி்ல சேர விரும்புபவர்கள் தனியாக விண்ணப்பிக்க வேண்டும். பிப்ரவரி முதல் வாரம் விண்ணப்பம் அளிக்கப்பட்டு ஏப்ரல் முதல் வாரத்துக்குள் விண்ணப்பித்திருக்க வேண்டும். குறைந்த கட்டணத்தில் நிறைவான பட்டப்படிப்பாக இதனை கூறலாம்.

ஏனெனில், ஆண்டுக்கு கல்விக் கட்டணமாக 10,000 ரூபாய் மட்டுமே கட்ட வேண்டியிருக்கும். மாற்றுத்திறனாளிகள், எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி. என இடஒதுக்கீடு கடைபிடிக்கப்படுவதால் தகுதி உடையவர்கள் விண்ணப்பித்து கல்லூரியில் சேரலாம்.

இந்திய அரசின் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிக் கழகம் மூலம் இயங்கும் பல்வேறு துறைகளில் உள்ள காலி பணியிடங்களில் சேர வாய்ப்பு உள்ளது. தனியார் நிறுவனங்கள், ஆராய்ச்சி மையங்கள், பெரிய கல்வி நிறுவனங்கள் என பணி வாய்ப்பு மிகுந்துள்ளது. வெற்றிகரமாக இப்படிப்பை முடித்தவர்களை அமெரிக்கப் பல்கலைக்கழகங்கள் கல்வி உதவித் தொகை அளித்து பட்டமேற்படிப்புக்கு சேர்த்துக் கொள்ள தயாராக உள்ளன. எனவே, 3 பாடப்பிரிவுகளில் ஒரே நேரத்தில் சாதிக்க கூடியவர்கள் நிச்சயம் இப்படிப்பு மூலம் திறமையை வெளிக்காட்ட முடியும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x