Published : 20 Feb 2014 12:00 AM
Last Updated : 20 Feb 2014 12:00 AM

ஆசிரியர் தகுதித் தேர்வு: 10 ஆயிரம் பேர் பார்டரில் பாஸ்

ஆசிரியர் தகுதித் தேர்வில் 10 ஆயிரம் பேர், குறைந்தபட்ச அளவான 82 மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்றுள்ளனர்.

கடந்த ஆண்டு ஆகஸ்டில் நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித்தேர்வில் 26 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்களும், பட்டதாரி ஆசிரியர்களும் தேர்ச்சி பெற்றனர். அப்போது தேர்ச்சி மதிப்பெண் 60 சதவீதம் (150-க்கு 90 மதிப்பெண்) ஆக நிர்ணயிக்கப்பட்டு இருந்தது.

அதன்பின்னர், இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு மட்டும் 5 சதவீதம் சலுகை அளித்து, தேர்ச்சி மதிப்பெண் 60 சதவீதத்தில் இருந்து 55 சதவீதமாக குறைக்கப்பட்டது. அதன்படி, குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண் 150-க்கு 82.5 வரும், ஆனால், தகுதித்தேர்வில் ஒவ்வொரு கேள்விக்கும் 1 மதிப்பெண்தான் வழங்கப்படும். அரை மதிப்பெண் வழங்க வாய்ப்பு இல்லை.

10 ஆயிரம் பேர் தப்பினர்

எனவே, தேர்ச்சி மதிப்பெண் 82.5 என்பதை முழு எண்ணாக மாற்றி 83 ஆக நிர்ணயிக்கப்படும் என்று தேர்வெழுதியவர்கள் எதிர்பார்த்தனர். இந்நிலையில், சி.பி.எஸ்.இ. தகுதித்தேர்வைப் போன்று தமிழக அரசும் தகுதித்தேர்வு தேர்ச்சி மதிப்பெண்ணை 82 என நிர்ணயித்தது. அதற்கான அரசாணையும் உடனடியாக வெளியிடப்பட்டது.

ஐந்து சதவீத மதிப்பெண் குறைப்பால் தற்போது கூடுதலாக 48 ஆயிரம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். இவர்களில் சுமார் 10 ஆயிரம் பேர் 82 மதிப்பெண் எடுத்து மயிரிழையில் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 82 முதல் 89 மதிப்பெண் எடுத்திருப்பவர்களுக்கு தகுதித்தேர்வு மதிப்பெண்ணில் வெயிட்டேஜ் மார்க் 36 கிடைக்கும்.

வேலை கிடைக்குமா?

5 சதவீத மதிப்பெண் சலுகையால் புதிதாக தேர்ச்சி பெற்றிருக்கும் பட்டதாரி ஆசிரியர்கள் பிளஸ்-2, பட்டப் படிப்பு, பி.எட்., தேர்வில் (இடைநிலை ஆசிரியர்கள் எனில் பிளஸ்-2, ஆசிரியர் பயிற்சி பட்டய தேர்வு) அதிக மதிப்பெண் பெற்றிருக்கும் பட்சத்தில் அவர்களுக்கும் வேலை வாய்ப்பு கிடைக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x