Published : 04 Jan 2014 12:00 AM
Last Updated : 04 Jan 2014 12:00 AM

சுவாரசியமாக ஒரு கட்டிடம்

கட்டிடக் கலை ஏராளமான உட்பிரிவுகளைக் கொண்டிருக்கிறது. கட்டிடக் கலை பற்றிப் படிப்பதும் தெரிந்து கொள்வதுமே ஒரு வகை சுவாரசியம் என்றால், புதுமைக் கட்டிடக் கலை (Novelty architecture) என்றொரு வகையே இருந்தால் எப்படி இருக்கும்?

வழக்கமான பாணியில் அல்லாத கட்டிடக் கலை புதுமைக் கட்டிடக் கலை வடிவத்தில் அடங்குகிறது. வழக்கமாக நாம் பயன்படுத்தும் ஏதேனும் ஒரு பொருள் அல்லது விலங்கு, பிடித்தமான வடிவம் போன்றவற்றை மாதிரியாகக் கொண்டு கட்டப்படும் கட்டிடங்கள் இவ்வகையில் வருகின்றன.

இதனால் என்ன உபயோகம்? வாழ்க்கையை இந்தக் கோணத்திலும் ரசிக்கலாம் என்பதைத் தவிர வேறொன்றுமில்லை என்பதுதான் உண்மை. வீடு சதுரமாகவோ, செவ்வகமாகவோதான் இருக்க வேண்டுமா? அரை வட்ட வடிவிலோ, கூடை வடிவிலோ, யானை வடிவிலோ இருக்கக் கூடாதா என சிந்தித்ததன் விளைவே புதுமைக் கட்டிடக் கலையின் அடிப்படையாக இருந்திருக்கக் கூடும்.

19ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் ‘பாஸ்டில் யானை’ என்ற கட்டிடம் யானை வடிவில் கட்டப்பட்டிருந்தது. இதுவே, நவீன உலகில் முதல் நாவல்டி வகை கட்டிடக் கலையாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

இவ்வகையான கட்டிடங்கள் பெரும்பாலும் அடுத்தவர்களை ஈர்ப்பதற்காகக் கட்டப்படுகின்றன. வழக்கமான பயன்பாட்டுக்கு இவை கட்டப்படாத போதும், கட்டிடக் கலை மரபில் புதிய இலக்கணத்தை இவை படைத்தன. குறிப்பிட்ட பகுதியின் அடையாளமாக இவ்வகைக் கட்டிடங்கள் மாறிய வரலாறும் உண்டு.

இந்தியாவில் இதுபோன்ற கட்டிடங்கள் மிகக்குறைந்த அளவிலேயே இருக்கின்றன. அவைகூட வாழிடங்களாக இல்லாமல் வர்த்தக ரீதியிலேயே இருக்கின்றன. வெளிநாடுகளில் அப்படி இல்லை. அலுவலகங்கள்கூட இவ்வகையில் வித்தியாசமாக அமைக்கப்படுகின்றன.

தேநீர்க் கோப்பை, கூடை, இசைக்கருவிகள் எனப் பல்வேறு வடிவங்களில் கட்டப்படும் இக்கட்டிடங்கள் புதுமை விரும்பிகளுக்கானவை. சாலையோர உணவு விடுதிகள், சுற்றுலாத்தலங்களில் தங்கும் விடுதிகள் இதுபோன்று புதுமையான வடிவங்களில் கட்டப்படும் போது அவை வாடிக்கையாளர்களை வெகுவாக ஈர்ப்பதற்கான யுக்தியாகவும் பயன்படுத்தப்படுகிறது.

வர்த்தகப் பயன்பாட்டுக்கு மட்டுமின்றி, சில புதுமை விரும்பிகள் வசிப்பிடங்களையும் இவ்வகையில் கட்டுகின்றனர். பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் கட்டுமானத்தில் மரம் அதிகமாகப் பயன்படுத்தப்படுவதால், இக்கட்டிடங்களின் வடிவமைப்பை சில ஆண்டுகளுக்கு ஒரு முறை மாற்றியும் கட்டிக் கொள்கின்றனர். இதனால், கட்டுமானப் பொருள் அதிகம் வீணாவதில்லை. மாறுதலான இடத்தில் வசித்த திருப்தியும் அவர்களுக்குக் கிடைக்கிறது. தற்போதுள்ள நாவல்டி வகை கட்டுமானக் கலை 1930ஆம் ஆண்டுகளுக்குப் பிறகே பிரபலமடைய ஆரம்பித்தன.

சொந்தமாக வீடு கட்டுவதே சிரமம் என்ற நிலையில் இதுபோன்ற வீடுகளைக் கட்டுவது மேலும் சிரமம் என நினைக்கலாம். ஆனால், மனமிருந்தால், நிச்சயம் நமக்குப் பிடித்தமானதொரு கட்டிடத்தைக் கட்டி அதில் வசிக்கத் தடையேதுமில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x