Published : 24 Feb 2014 08:00 PM
Last Updated : 24 Feb 2014 08:00 PM

சுற்றுச்சூழலுக்கும், குழந்தைகளுக்குமான தொடர்பை பாதுகாக்க வேண்டும்: நம்மாழ்வார் கருத்தரங்கில் நாஞ்சில் நாடன் பேச்சு

“சுற்றுச்சூழலுக்கும், குழந்தைகளுக்கும் உள்ள தொடர்பை அறுந்து விடாமல் பாதுகாப்பது நாம் நம்மாழ்வாருக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலியாகும்” என எழுத்தாளர் நாஞ்சில் நாடன் பேசினார். இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாருக்கு புகழஞ்சலி கருத்தரங்கம் ஈரோட்டில் ஞாயிற்றுக்கிழமை நடந்தது. நிகழ்ச்சிக்கு தலைமையேற்று முன்னாள் மத்திய அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசன் பேசியதாவது:

ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லி ஆகியவற்றால் பாழ்பட்டுக் கிடந்த மண்ணைக் காப்பாற்றி, வேளாண் விவசாயிகளைத் தலைநிமிர வைத்தவர் நம்மாழ்வார். மக்களுக்கு உணவு கொடுக்கும் மண்ணைக் காப்பாற்ற தன் வாழ்நாள் முழுவதும் போராடிய அவர், மாவட்டந்தோறும் அமைப்புகளை உருவாக்கிச் சென்றிருக்கிறார். அவற்றின் மூலம் மாற்றம் உருவாக வாய்ப்புள்ளது. மண்ணைக் காப்பாற்ற விதைகளை தூவியுள்ளார். அந்த விதைகள் செடியாகி, மரமாகி நிழல்தரும் காலம் வெகுதூரத்தில் இல்லை.

இவ்வாறு அவர் பேசினார். நம்மாழ்வாரின் படத்தை திறந்து வைத்து எழுத்தாளர் நாஞ்சில்நாடன் பேசியதாவது:

நவீன விஞ்ஞான கல்வியைக் கற்று தொழில் மூலமாக விஞ்ஞானி பணியை செய்து, நாம் தவறான வேலையைச் செய்கிறோம் என புரிந்து, அதனை விட்டு இயற்கை விவசாயத்திற்கு மாறியவர் நம்மாழ்வார். நம் நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களையே அதிகம் பயன்படுத்த வேண்டுமென்று கூறிவந்த நம்மாழ்வார், வெளிநாட்டு பொருட்களை புறக்கணிக்க வேண்டுமென போராடியவர்.

வெளிநாட்டினர் தங்களது வியாபார உத்திக்காகவே தவறான காரணங்களைக் கூறி பொருட்களை விற்பனை செய்கிறார்கள். குறிப்பாக, தேங்காய் கொழுப்பு என்று கூறி அதனை பயன்படுத்துவதை தவிர்க்குமாறு கூறினர். ஆனால், கேரளாவில் சமீபத்தில் நடந்த ஆய்வில், தேங்காய் மூலம் வியாதிகள் ஏற்படும் என்பது தவறானது என தெரியவந்துள்ளது. சுற்றுச்சூழல் குறித்து தற்போது விழிப்புணர்வு பெருகியுள்ளது. நான் கட்டுரை மற்றும் கதைகளில் சுற்றுச்சூழல் குறித்து எழுதி வருவதற்கான ஆதார அறிவை நம்மாழ்வார்தான் வழங்கினார்.

நம்மாழ்வாருக்கு மரியாதை செலுத்த வேண்டுமென்றால் பாடத்திட்டத்தில் இல்லாத சுற்றுச்சூழல் குறித்த கல்வியை குழந்தைகளை சென்று சேரும் வகையில் இணைக்க வேண்டும். சுற்றுச்சூழலுக்கும், குழந்தைகளுக்கும் உள்ள தொடர்பை அறுந்து விடாமல் பாதுகாப்பது நாம் நம்மாழ்வாருக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலியாகும்.

இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து, நம்மாழ்வாரின் வேளாண் கல்வி என்ற தலைப்பில் குமாரவேல், நம்மாழ்வாரின் பணியில் பசுமை அங்காடிகள் என்ற தலைப்பில் ஜெகதீசன் உள்ளிட்டவர்கள் பேசினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x