Published : 25 Jan 2014 12:00 AM
Last Updated : 25 Jan 2014 12:00 AM

இடைநிலை ஆசிரியர் நியமனத்துக்கு கட் ஆப் மதிப்பெண் கணக்கீடு- பிளஸ் 2 மதிப்பெண்ணால் பழைய மாணவர்களுக்கு பாதிப்பு

இடைநிலை ஆசிரியர் நியமனத்துக்கான கட் ஆப் மதிப்பெண் கணக்கீட்டின்போது பிளஸ்-2 மார்க் பார்க்கப்படுவதால் பழைய மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த ஆகஸ்ட் மாதம் நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித்தேர்வில் கலந்து கொண்டவர்கள் 12,596 பேர் இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதியையும், ஏறத்தாழ 17 ஆயிரம் பேர் பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதியையும் பெற்றனர்.

தகுதித்தேர்வு, பிளஸ்-2 தேர்வு, இடைநிலை ஆசிரியர் பயிற்சி தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் (வெயிட்டேஜ் மார்க் முறை) இடைநிலை ஆசிரியர்களும், தகுதித்தேர்வு, பிளஸ்-2, டிகிரி, பி.எட். மதிப்பெண் அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர்களும் பணி நியமனத்துக்காக தேர்ந்தெடுக்கப்பட இருக்கிறார்கள்.

2005-ம் ஆண்டுக்குப் பின்னர் பிளஸ்-2 தேர்வில் ஓரளவு நன்றாகப் படிக்கக்கூடிய மாணவர்களே எளிதாக 1200-க்கு 950 மார்க், 1,000 மார்க்குக்கு மேல் எடுத்து வருகிறார்கள். மாநில அளவில் ரேங்க் எடுக்கும் மாணவர்கள் 1,200-ஐ நெருங்கி விடுவதுண்டு. எனவே, இப்போதெல்லாம் எஸ்.எஸ்.எல்.சி, பிளஸ்-2 தேர்வில் ஆசிரியர்கள் தாராளமாக மதிப்பெண் வழங்குகிறார்கள் என்று சொல்லப்படுவதை ஒரேயடியாக நிராகரித்துவிட முடியாது.

அண்மையில் நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித்தேர்வில் 2005-க்கு முன்னர் பிளஸ்-2 முடித்தவர்களும் கணிசமான அளவு தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். இவர்களுக்கு பிளஸ்-2 தேர்வுக்கான கட் ஆப் மதிப்பெண் 15-க்கு 9 அல்லது 6 என்ற அளவில் கிடைக்கும். அதேநேரத்தில் 2005-க்கு பின்னர் பிளஸ்-2 முடித்தவர்கள் 90 சதவீதம் அல்லது 80 சதவீத மதிப்பெண் பெற்று எளிதாக 15-க்கு 15 அல்லது 12 வாங்கிவிடலாம். இந்த மதிப்பெண் முரண்பாடு காரணமாக பழைய மாணவர்களுக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற இடைநிலை ஆசிரியர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு சென்னை உள்பட தமிழகம் முழுவதும் திங்கள்கிழமை தொடங்கியது. சான்றிதழ் சரிபார்ப்புக்கு வந்த ஆசிரியர்களில் 2005-க்கு முன்னர் பிளஸ்-2 முடித்த பலரும் மேற்கண்ட குற்றச்சாட்டை முன்வைத்தனர். மாநிலம் முழுவதும் இதே குற்றச்சாட்டு எழுந்தது.

பழைய பிளஸ்-2 மாணவர்களுக்கு பாதிப்பு ஒருபுறம் என்றால் 2008-க்கு பிறகு இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்தவர்களுக்கு இதற்கு நேர் எதிரான மற்றொரு பாதிப்பு. காரணம், 2008-2009-ம் கல்வி ஆண்டில் இடைநிலை ஆசிரியர் படிப்புக்கு புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. பாடத்திட்டம் கடுமையாக இருந்ததால் 2008-க்கு பிறகு தேர்ச்சி விகிதம் மளமளவென குறைந்தது.

நன்றாக படிக்கும் மாணவர்களே போராடித் தான் 60 சதவீத மதிப்பெண் எடுத்து வருகின்றனர். தேர்ச்சி பெற்றாலே போதும் என்ற மனோபாவம்தான் இடைநிலை ஆசிரியர் பயிற்சி மாணவர்கள் மத்தியில் நிலவுகிறது. ஆனால், 2008-க்கு முன்னர் பழைய பாடத்திட்டத்தில் சுமாராக படிப்பவர்களே 70 சதவீத மதிப்பெண் வாங்கிவிடுவார்கள்.

நேற்று தொடங்கிய சான்றிதழ் சரிபார்ப்பில், கால முரண்பாடு காரணமாக, 70% மதிப்பெண் பெற்றிருந்த பெரும்பாலான பழைய மாணவர்கள் இடைநிலை ஆசிரியர்களுக்கான 25-க்கு 25 மார்க் எளிதாக வாங்கினர். ஆனால், கடந்த சில ஆண்டுகளில் படித்தவர்களில் பெரும்பாலானோருக்கு 25-க்கு 20 மதிப்பெண்தான் கிடைத்தது. அவர்கள் ஆசிரியர் தகுதித்தேர்வில் ஒரே மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்றிருந்தாலும், பிளஸ்-2, இடைநிலை ஆசிரியர் பயிற்சி மதிப்பெண்ணின் ஏற்றத்தாழ்வு மெரிட் பட்டியலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்த பிரச்சினையை அரசின் கவனத்துக்கு கொண்டுசெல்ல உள்ளதாக பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x