Last Updated : 31 Mar, 2017 10:46 AM

 

Published : 31 Mar 2017 10:46 AM
Last Updated : 31 Mar 2017 10:46 AM

ஜப்பான் ‘எந்திரன்!’

“சார், எங்களுடைய அடுத்த படத்திற்கான கதை இதுதான். ஆனால், அதை நாங்கள் உங்களிடம் கதையாகச் சொல்வதைவிட, இதோ இந்த அனிமேஷன் படத்தைப் பாருங்கள். இந்தத் தத்துவார்த்த அடிப்படையில்தான் எங்களது படமும் இருக்கும்”.

பிரபல ஹாலிவுட் திரைப்படத் தயாரிப்பாளர் ஜோயல் சில்வரைப் பார்க்க வாச்சஸ்வ்க்கி சகோதரிகள் வந்திருந்தார்கள். அவர்களது இயக்கத்தில் வந்த முதல் படம் அப்போதுதான் வெளியாகிப் பல விருதுகளையும் பாராட்டுக்களையும் குவித்துக்கொண்டிருந்தது. தங்களது அடுத்த படத்தைப் பற்றி விவாதிக்க, ஜோயல் சில்வரிடம் நேரம் கேட்டிருந்தார்கள். கதை சொல்லும்போது, அவர்கள் சொன்னவைதான் மேற்கண்ட வரிகள். அவர்கள் ஜோயல் சில்வரைப் பார்க்கச் சொன்னது, ஒரு அனிமேஷன் படத்தை!

“என்னடா இது? ஒரு முழுநீள ஃபீச்சர் படம் எடுக்கக் கதை சொல்லிவிட்டு, இப்படி ஒரு அனிமேஷன் படத்தைப் போட்டுக் காண்பிக்கிறார்களே?” என்று யோசித்தபடியே ஜோயல் சில்வரும் அந்த அனிமேஷன் படத்தைப் பார்த்தார். ஒரு தயாரிப்பாள ரென்ற முறையில், அந்த அனிமேஷன் படத்தைப் படமெடுப்பதில் அவருக்குச் சில சந்தேகங்கள் ஏற்பட, வாச்சஸ்வ்க்கி சகோதரர்கள் அவருக்கு ஒரு உறுதி அளித்தனர். “சார், இதைத்தான் நாம் காட்சிகளாகப் படமெடுக்க உள்ளோம்” என்று சொன்னார்கள். அது என்ன படம், ஜோயல் சில்வர் என்ன சொன்னார்?

செக்ஷன் 9

2029. தகவல் தொழில்நுட்பத்தால், உலகம் ஒரு சிறிய கிராமத்திலிருந்து, ஒரு தெருவாகக் குறுகிய காலகட்டம். நாடுகளின் எல்லைகள் தாறுமாறாக மாறியிருக்கிறன்றன. உதாரணமாக, அமெரிக்கா, பல குறு நாடுகளாக (ஒவ்வொரு மாகாணமும் ஒரு நாடாக) உடைந்திருந்தது. நான்காம் உலகப் போரின் முடிவில், தனது அசாத்தியத் தொழில்நுட்ப வலிமையால், ஜப்பான் உலகின் வல்லரசாகி இருந்தது. இந்த இக்கட்டான தருணத்தில், சட்டம் ஒழுங்கைப் பராமரிக்க, ‘செக் ஷன் 9’ என்று ஒரு ஸ்பெஷல் டீம் இயங்குகிறது.

முன்னாள் இராணுவத்தினரையும் காவல் துறையினரையும் கொண்ட இந்த சிறப்புக் குழுவில் முக்கியமானவர் மேஜர் என்றழைக்கப்படும் மோடோகோ குஸநாகி. சிறப்புப் படையின் தலைவரான அரமாகியையே, ‘குரங்கு’ என்று அழைக்கும் அடாவடியான ஆள் இவர். குஸநாகியாக ஹாலிவுட் நடிகை ஸ்கார்லெட் ஜோஹன்ஸன் நடிக்க, அமராகியாக நடிக்கிறார், மிஷ்கினின் ஒரிஜினலான ஜப்பானிய சூப்பர் ஸ்டார் டகேஷி கிட்டானோ.

1989-ம் ஆண்டு முதல் காமிக்ஸ் ஆக வெளியாகிவரும் இத்தொடரைத்தான் இப்போது திரைப்படமாக எடுத்திருக்கிறார்கள். ஏற்கெனவே 1995 மற்றும் 2015-ல் அனிமேஷன் படமாக வந்துள்ள இந்தக் கதையை, இதுவரையில் தொலைக்காட்சித் தொடராக, வீடியோ கேம்களாக என்று பலவகையில் பார்த்திருந்தாலும், கதையம்சம் கதை சார்ந்த கருத்தியல் கொள்கை காரணமாக அலுக்காது என்பதை குறிப்பிட்டே ஆகவேண்டும். அதுவும் ‘பப்பெட் மாஸ்டர்’, ‘சிரிக்கும் மனிதன்’ என்ற இரண்டு வில்லன்கள், அவர்களது மனிதம் பற்றிய தத்துவ குறுக்கு விசாரணைகள், காமிக்ஸைக் கடந்து, நம்மை ஆழமாக, தீவிரமாகச் சிந்திக்க வைப்பவை.

செக் ஷன் 9-ன் மிகத் தீவிரமான எதிரிதான் இந்த பப்பெட் மாஸ்டர். ஒருவருடைய மூளையை, அவரது நினைவுகளை, சிந்தனைகளைத் திருடி, அதன் மூலமாக அவரைத் தனது கட்டுப்பாட்டில் வைக்கவல்ல இந்த பப்பெட் மாஸ்டர்தான் 1995-ம் ஆண்டு வந்த படத்தின் முக்கிய வில்லன். காமிக்ஸ் கதைகளிலும் தொடர்ந்து வரும் இந்த வில்லனது பின்புலக் கதையும், மேஜரின் பின்னணியுமே மிகவும் சுவாரசியமானவை. திரைப்படத்தில் அதைக் கண்டு மகிழவும்.

கோஸ்ட் இன் த ஷெல்

நம்முடைய மனித உடல் ஒரு கூடு (ஷெல்) மட்டுமே. அதில் இருக்கும் நமது உயிர் (அறிநிலை), ஒரு ஆவி - கோஸ்ட். தகவல் தொழில்நுட்பமும் அறிவியலும் பல மடங்கு முன்னேற்றம் காணக்கூடிய எதிர்காலத்தில், ஒரு ரோபோவையும் மனிதனையும் வேறுபடுத்திக் காட்டுவது, உடல் சார்ந்த, இயந்திர பாகங்கள் சார்ந்தவை இல்லை. இந்த அறிநிலைதான். இந்த உணர்வுதான் ஒரு ரோபோவையும் மனிதனையும் வித்தியாசப்படுத்துகிறது என்றால், இப்படிப்பட்ட உணர்வு கொண்ட ஒரு எந்திரம் இருந்தால், அது மனிதனாகுமா? இதுபோன்ற பல தீவிரமான கேள்விகளை முன்வைக்கும் படம்தான் இது.

ஆரம்பத்தில் வாச்சஸ்வ்க்கி சகோதரிகள் தயாரிப்பாளர் ஜோயல் சில்வரிடம் திரையிட்டுக் காண்பித்தது இந்த ‘கோஸ்ட் இன் த ஷெல்’ அனிமேஷன் படத்தைத்தான். மேட்ரிக்ஸ் படத்தின் அடிப்படைக் கொள்கையும் இந்த மாங்கா காமிக்ஸ்சின் அடிப்படைக் கொள்கையும் ஒன்றுதான். வழக்கம்போல ஆசிய / ஜப்பானியக் கதாபாத்திரத்தில் ஒரு ஹாலிவுட் நடிகையை நடிக்கவைத்த வணிகக் காரணங்களைக் கண்டித்தும், மாங்கா காமிக்ஸில் இருப்பதைப் போலச் சித்தரிக்காமல், கதாபாத்திரத்தின் போக்கை மாற்றியிருக்கிறார்கள் என்றெல்லாம் பல விமர்சனங்கள் எழுந்தாலும் ‘கோஸ்ட் இன் த ஷெல்’ படம் ஹாலிவுட் மற்றும் ஜப்பானியத் திரையுலகிற்கு மிக முக்கியமான ஒரு படம்தான் என்பதில் இருவேறு கருத்திருக்க இயலாது.

மாங்கா காமிக்ஸ்

ஒவ்வொரு நாட்டுக்கும் ஒரு தனித்துவ மான சித்திரக் கதைப் பாணி உண்டு. அதில் கருப்பு வெள்ளையில், இடமிருந்து வலமாக வரையப்பட்டு, உணர்ச்சிகளுக்கும் க்ளோஸ்-அப் காட்சிகளுக்கும் முக்கியத் துவத்தைக் கொடுக்கும் ஜப்பானிய காமிக்ஸ் களுக்கு ‘மாங்கா’ என்று பெயர். மாங்கா காமிக்ஸ்களில் பல உட்பிரிவுகள் உண்டு. அதில் ஒன்றுதான் ‘செய்னன் மாங்கா’.

இது பெரும்பாலும் ஆண்களுக்கான மாங்கா காமிக்ஸ் ஆக அறியப்படுகிறது. 15 வயதிற்கு மேற்பட்டவர்கள் படிக்கும் வகையில் அமைக்கப்பட்டிருந்தாலும், இவ்வகை யான மாங்கா காமிக்ஸ்கள் மன முதிர்ச்சி பெற்றவர்களுக்காகவே படைப்படுகின்றன. சண்டை, சாகசம், நகைச்சுவை, விளையாட்டு கள், உறவுகள் சார்ந்த கதைகள் கொண்ட இவ்வகையான கதைகளில் இலேசான பாலியல் உள்ளடக்கம் இருக்கும்.

ஆனால், முழுக்க முழுக்கப் பாலியலை மையமாக வைத்து வெளியாகும் ‘செய்ஜின் மூக் மாங்கா’ அளவிற்கு இதில் வெளிப்படையாகச் சித்தரிக்கப்பட்டு இருக்காது. செய்னன் வகை மாங்கா கதைகளில் மிகவும் புகழ்பெற்றவை அகிரா, பெர்ஸெர்க், பேட்டில் ராயல், கோஸ்ட் இன் தெ ஷெல் போன்றவை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x