Last Updated : 06 Feb, 2017 11:25 AM

 

Published : 06 Feb 2017 11:25 AM
Last Updated : 06 Feb 2017 11:25 AM

டாமோ சாதிக்குமா?

கடந்த சில வருடங்களாகவே டாடா மோட்டர்ஸ் குறித்த நல்ல செய்திகள் எதுவும் வரவில்லை. சில வருடங்களுக்கு முன்பு அப்போதைய நிர்வாக இயக்குநர் கார்ல் ஸ்லிம் தற்கொலை செய்துகொண்டார். இந்த நிறுவனத்தின் இமேஜை மாற்றும் என்ற அடிப்படையில் அறிமுகப்படுத்தப்பட்ட டாடா நானோ, சந்தையில் வெற்றி பெறவில்லை. தவிர `குறைந்த விலை கார் என்னும் விளம்பர வாசகம்’ மிகப்பெரிய தவறு என ரத்தன் டாடா ஒப்புக்கொண்டதும் நடந்தது.

இதற்கிடையே டாடா சன்ஸ் தலைவர் சைரஸ் மிஸ்திரி நீக்கப்பட்டார். அந்த சமயத்தில் நடந்த பல கருத்து மோதல்களுக்கு நானோவும் ஒரு காரணம். ரத்தன் டாடா என்னும் தனிப்பட்ட நபரின் விருப்பம் காரணமாகவே நானோ செயல்பட்டு வருகிறது என மிஸ்திரி குறிப்பிட்டார். மேலும் 2004-ம் ஆண்டு டாடா மோட்டார்ஸின் சந்தை மதிப்பு 13 சதவீதம் என்னும் நிலையில் இருந்து இப்போது 4 முதல் 5 சதவீதமாக குறைந் திருக்கிறது. தவிர 2009 முதல் 2014-ம் ஆண்டு வரை புதிய மாடல் கார்களை இந்த நிறுவனம் அறிமுகம் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டும் இருக்கிறது.

இத்தனை சர்ச்சைகளுக்கும் இடையில் தற்போது ஒரு சில வெளிச்சகீற்றுகள் டாடா மோட்டார்ஸ் மீது பட தொடங்கி இருக்கின்றன. கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஹெக்ஸா என்னும் புதிய பிராண்டை டாடா மோட்டார்ஸ் அறிமுகம் செய்தது. கடந்த வாரம் டாமோ (டாடா மோட்டார்ஸின் சுருக்கம்) புதிய துணை பிராண்டினை உருவாக்கி இருக்கிறது. இந்த பிராண்ட் மூலம் சொகுசு மற்றும் ஸ்போர்ட்ஸ் கார்களை அறிமுகம் செய்ய இருப்பதாக அந்த நிறுவனம் கடந்த வாரத்தில் தெரிவித்தது.

புதிய தொழில்நுட்பம் மற்றும் புதுமை களை உருவாக்குவதற்காக இந்த பிராண்ட் உருவாக்கப்பட்டிருக்கிறது. டெக்னாலஜி நிறுவனங்களான உபெர், கூகுள் உள்ளிட்ட நிறுவனங்களுடன் போட்டியிட வேண்டி இருப்பதால் புதிய பிராண்ட் உருவாக்கம் செய்யப் பட்டுள்ளது. இதற்காக சர்வதேச அளவில் இருக்கும் முக்கியமான தொழில்நுட்ப நிறுவனங்களுடன் டாமோ ஒப்பந்தம் போட்டிருக்கிறது.

இந்த பிராண்டுக்கு கலிபோர்னி யாவில் அலுவலகம் உள்ளது, இந்தியா, இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகளில் உள்ள ஸ்டார்ட் அப் நிறுவனங்களுடன் இணைந்து எதிர்கால தேவைக்கான கார்களை தயாரிக்கும் என நிர்வாக இயக்குநர் குந்தர் புட்செக் தெரிவித்தார்.

டாமோ எங்களுக்கு ஆய்வுக்கூடம். தொழில்நுட்பம் மேம்பட்டு வரும் சூழ்நிலையில் புதுப்புது ஐடியாக்களை உருவாக்கி வருகிறோம். இந்த தொழில் நுட்பத்தை எங்களுடைய முக்கியமான பிஸினஸுக்கு கொண்டு செல்வோம். வருங்காலத்தில் கார் என்பது உலோ கத்தால் ஆனதாக மட்டும் இருக்காது. அது டிஜிட்டல் வீடு போல இருக்கும் என்று டாடா மோட்டார்ஸ் பயணிகள் வாகன பிரிவு தலைவர் மயங்க் பரீக் கூறினார்.

பியுச்சுரோ

அடுத்த மார்ச் மாதம் 7-ம் தேதி ஜெனிவாவில் நடக்கும் ஆட்டோ மொபைல் கண்காட்சியில் இந்த பிராண்டின் கீழ் தயாரிக்கப்படும் முதல் கார் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. இது என்ன வகையான கார் என்பது குறித்து முறையாக அறிவிக்கவில்லை என்றாலும் இது ஒரு ஸ்போர்ட்ஸ் கார் என்றும் அந்த காரின் பெயர் பியுச்சுரோ என்னும் வைக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த மாடல் குறைந்த அளவில் மட்டுமே தயாரிக்கப்படும் என தெரிகிறது. இந்த காரின் விலை சுமார் 25 லட்ச ரூபாய் இருக்கும் என்றும் இந்திய சந்தைகளில் வரும் 2018-ம் ஆண்டு மத்தியில் விற்பனைக்கு வரும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.இரண்டு இருக்கைகள் இருக்கும் இந்த கார், 250 என்னும் அளவில் உற்பத்தி செய்யப்படும்.

தவிர மாருதி நிறுவனம் தங்களுடைய சொகுசு கார்களுக்கு நெக்ஸா என்னும் பெயரில் புதிய ஷோரூம் ஒன்றினை உருவாக்கியது. அதேபோல டாமோ கார்களுக்கு என பிரத்யேக ஷோரூம் அமைக்கவும் நிறுவனம் திட்டமிட் டிருப்பதாக தெரிகிறது.

புதிய பிளாட்பார்ம்

டாடா மோட்டார்ஸ் நிறுவன ஆலை யில் தற்போது 6 பிளாட்பார்ம்கள் உள்ளன. இந்த நிலையில் புதிதாக இரண்டு மாடுலர் பிளாட்பார்ம்களை உருவாக்க நிறுவனம் முடிவு செய்திருக் கிறது. ஏற்கெனவே இருக்கும் பிளாட் பார்ம்களில் ஒரே வகையான மாடல் கார்களை மட்டும்தான் தயாரிக்க முடியும். ஆனால் புதிய மாடுலர் பிளாட் பார்ம் மூலமாக ஹாட்ச்பேக், செடேன் என டாடா நிறுவனத்தின் அனைத்து வகையாக கார்களையும் இந்த இரண்டு புதிய பிளாட்பார்ம்கள் மூலம் தயாரிக்க முடியும். போக்ஸ்வேகன் நிறுவனம் இதுபோல பிளாட்பார்ம்களை வைத் துள்ளது. இதன் மூலம் நிறுவனத்தின் செலவுகள் குறையும்.

இந்த பிளாட்பார்ம் அடுத்த ஆண்டு முதல் செயல்படத் தொடங்கும். அதே போல ஏற்கெனவே இருக்கும் 6 பிளாட் பார்ம்களை 2022-ம் ஆண்டுக்கு நீட்டிப்பதற்கு டாடா மோட்டார்ஸ் திட்டமிட் டிருக்கிறது.

நானோவின் எதிர்காலம்?

நானோ கார்களின் விற்பனை பெரிய அளவில் இல்லை. இந்த நிலையில் புதிய பிளாட்பார்ம் அமைக்க திட்டமிட்ட பிறகு நானோ கார்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி இருக்கிறது. டாமோ அறிமுக நிகழ்ச்சியில் நானோ குறித்த கேள்விக்கு குந்தர் புட்செக் பதில் அளிக்க மறுத்துவிட்டார். இது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை என்று கூறியிருக்கிறார். ஆனால் புதிய பிளாட்பாரத்தில் நானோவை கொண்டு வருவது நடைமுறை சாத்தியம் இல் லாதது என்ற கருத்தும் நிலவுகிறது.

வரும் 2019-ம் ஆண்டு விற்பனை அடிப்படையில் முதல் மூன்று இடங் களுக்குள் வர டாடா மோட்டர்ஸ் திட்ட மிட்டிருக்கிறது. அதற்காக புதிய பிராண்டை உருவாக்குதல், மாடுலர் பிளாட்பார்ம் அமைத்தல் என பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பல சரிவுகளுக்கு பிறகு இந்த முடிவை டாடா மோட்டார்ஸ் எடுத்திருக்கிறது.

கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரமா என்பது 2019-ம் ஆண்டில் தெரியவரும்.

- வாசு கார்த்தி
karthikeyan.v@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x