Last Updated : 05 Nov, 2013 10:42 PM

 

Published : 05 Nov 2013 10:42 PM
Last Updated : 05 Nov 2013 10:42 PM

நாமக்கல்: கட்டிடத்திற்குள் கானகம் திட்டத்தால் சோலையாக மாறிய பொட்டல் காடு

நாமக்கல் மாவட்டம், கடந்த 1997-ம் ஆண்டு சேலத்திலிருந்து பிரிக்கப்பட்டு தனி மாவட்டமாக உதயமானது. கடந்த 2001-ம் ஆண்டு நாமக்கல் - திருச்செங்கோடு சாலையில், தும்மங்குறிச்சியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்டப்பட்டது.

அலுவலகத்தின் பின்புறம் எதிர்கால பயன்பாட்டிற்காக காலி இடம் உள்ளது. பல ஏக்கர் பரப்பளவில் உள்ள அந்த இடம் முழுக்க எவ்விதப் பயன்பாடும் இன்றி, பொட்டல் காடுபோல் காட்சியளித்து வந்தது.

குறிப்பாக, ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் துவங்கி, ஆயுதப்படை காவல் குடியிருப்பு வரை உள்ள இடம் அனைத்தும், நிழலுக்கு கூட ஒதுங்க முடியாத அளவிற்கு பொட்டல் காடாக காட்சியளித்தது. விஷச் செடிகள், முட்செடிகள் அதிகம் இருந்ததால் மேய்ச்சல் நிலமாக கூட பயன்படுத்த முடியாத நிலை இருந்தது.

இந்நிலையில் நாமக்கல் மாவட்ட ஆட்சியராக சகாயம் இருந்தபோது, பொட்டல்காடு சோலைவனமாக மாறியது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் மக்கள் கூறியது: மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பின்புறம் பல ஏக்கர் நிலம் முழுவதும் விவசாய முள் செடிகள் அதிக அளவில் இருந்தன. இந்த முட்செடிகள் மனிதர்கள், கால்நடை என, அனைத்து தரப்பினருக்கும் சுவாசக் கோளாறை ஏற்படுத்தும். இதுதவிர, அந்த மரங்கள் இருக்கும் இடத்தில் நிலத்தடி நீரும் வெகுவாக பாதிக்கும்.

கடந்த 2009-ம் ஆண்டு, நாமக்கல் மாவட்ட ஆட்சியராகப் பொறுப்பு வகித்த சகாயம், 'கட்டிடத்திற்குள் கானகம்' எனும் திட்டத்தை அறிமுகப்படுத்தி, பத்தாயிரத்திற்கும் அதிகமான பள்ளி மாணவ, மாணவியரை வரவழைத்து, இப்பகுதி முழுவதும் பல்வேறு மரக்கன்றுகளை நட்டார்.

மேலும், அம்மரங்களை நீர் ஊற்றி பராமரிப்பு செய்வதற்கான ஏற்பாடுகளையும் செய்தார். அடுத்தடுத்து வந்த மாவட்ட ஆட்சியர்களும் இத்திட்டத்தை கைவிடாமல், தொடர்ந்து கடைப்பிடித்து வந்தனர். அதன் பலனாக நான்காண்டுகளில் இம்மரக்கன்றுகள் நன்கு வளர்ந்து, கானகம் போல் காட்சியளிக்கிறது. இனி, இம்மரங்கள் தானகவே வளர்ந்து விடும்.

மரங்கள் நிழல் தரும் அளவிற்கு வளர்ந்திருப்பதுடன், கிராம மக்களும் இப்பகுதியை மேய்ச்சல் இடமாக பயன்படுத்த துவங்கியுள்ளனர் என்றனர். இதுபோன்ற முயற்சியைப் பிற மாவட்டங்களிலும் பின்பற்றினால், மரங்கள் செழிப்பதுடன் அதன் அவசியம் குறித்தும் பள்ளி மாணவர்களும் அறிய வாய்ப்பாக அமையும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x