Published : 03 May 2017 11:22 AM
Last Updated : 03 May 2017 11:22 AM

குழந்தைப் பாடல்: சோளக்கொல்லை பொம்மை!

சோளக்கொல்லை பொம்மையே

சோளக் கொல்லை பொம்மையே

ஒத்தையிலே நிக்கிறியே

காரணமென்ன?

காடு வெளஞ்சு கெடக்குது

கதிரு முத்தி நிக்குது

காக்கை குருவி கொத்தாமல்

காவல் காக்கிறேன்!

வைக்கோல் போரு உடம்புல

மண்ணு சட்டி தலையிலே

கண்ணு,மூக்கு மீசை உனக்கு

போட்டது யாரு?

நெட்டையான உருவம்தான்

கிடா மீசைக்காரர்தான்

காட்டை உழுது பாடுபடும்

பாசக்கார அய்யாதான்!

வெயிலடிச்சா காயறே

மழை பெஞ்சா நனையறே

வேதனையும் சோதனையும்

உனக்கு இல்லையா?

மனுஷன் போல ஆசையில்ல

மனக் கவலை ஏதுமில்ல

என்னைப் போல வாழ்ந்து பாரு

இன்பம் வந்து சேரும் பாரு!

- ஜி.சுந்தரராஜன், திருத்தங்கல்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x