

வேலூர் விஐடி பல்கலை.யில் 4 நாட்கள் நடைபெறும் ‘ரிவேரா-2014’ கலை திருவிழா வியாழக்கிழமை தொடங்கியது.
வேலூர் விஐடி பல்கலையில் ரிவேரா-2014 கலை திருவிழா வியாழக்கிழமை தொடங்கி, வரும் ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெற உள்ளது. 4 நாட்கள் நடைபெறும் கலை திருவிழாவில் வங்கதேசம், பிலிப்பைன்ஸ், மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டு மாணவர்கள் உள்பட 24 ஆயிரம் மாணவ, மாணவிகள் கலந்துகொள்கின்றனர்.
ரிவேரா கலை விழா தொடக்க நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக 9.9 கி.மீ தூரம் மினி மாரத்தான் போட்டி வியாழக்கிழமை காலை நடைபெற்றது. பெண் சிசுக் கொலைக்கு எதிராக நடத்தப்பட்ட இந்த போட்டியை தடகள வீராங்கனை ஷைனிவில்சன் கொடியசைத்து தொடங்கிவைத்தார்.
அதனைத் தொடர்ந்து ரிவேரா-
2014 தொடக்க விழா நிகழ்ச்சி நடந்தது. விழாவை வேந்தர் ஜி.விசுவநாதன் தொடங்கிவைத்து பேசியதாவது: இந்தியா மனித வளம் மிக்க நாடு. இளைஞர்கள் அதிகம் உள்ளனர். 4 ஆண்டு களுக்கு ஒரு முறை நடக்கும் ஒலிம்பிக் போட்டியில் இந்தியா வின் பதக்கம் பெறும் நிலை மோசமாக இருக்கிறது. போதிய பயிற்சி அளித்து நல்ல விளையாட்டு வீரர்களை உருவாக்காமல் இருப்பதே இதற்கு காரணம்” என்றார்.
சிறப்பு விருந்தினர் ஷைனி வில்சன், கவுரவ விருந்தினராக கலந்துகொண்ட ஸ்குவாஷ் விளையாட்டு வீரர் சைரஸ் புஞ்சா ஆகியோர் ரிவேரா கலைவிழாவையொட்டி நடந்த கிரிக்கெட், துரோபால், மினி மாரத்தான் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்கப்பரிசு, சான்றிதழ் வழங்கினர்.
கிரிக்கெட் போட்டியில் சென்னை லயோலா, விஐடி, காஞ்சி சங்கரா பல்கலைக் கழகம் முதல் மூன்று இடங்களை பிடித்தன.
மினி மாரத்தான் போட்டியில் ஓசூர் அதியமான் பொறியியல் கல்லூரி மாணவர் வி.கோவிந்தராஜ், தருண்குமார் ஆகியோர் முதல் இரண்டு இடங்களை பிடித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் விஐடி துணை தலைவர்கள் சங்கர் விசுவநாதன், சேகர் விசுவநாதன், ஜி.வி.செல்வம், துணைவேந்தர் ராஜூ, இணை துணை வேந்தர் நாராயணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.