Published : 02 May 2017 10:36 AM
Last Updated : 02 May 2017 10:36 AM

சேதி தெரியுமா? - விவசாயிகளுக்காகக் கடையடைப்பு

டெல்லி ஜந்தர்மந்தர் பகுதியில் கடந்த நாற்பது நாட்களுக்கும் மேலாக நடைபெற்றுவந்த தமிழக விவசாயிகளின் போராட்டம் ஏப்ரல் 25-ம் தேதியன்று முடிவுக்கு வந்தது. வறட்சி, கடன் தொல்லை உள்ளிட்ட காரணங்களால் தற்கொலை முடிவுக்குப்போகும் விவசாயிகளைப் பாதுகாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் போராட்டம் நடத்தி வந்தனர். தங்களுடைய மாளாத் துயரங்களை வெளிப்படுத்த இறந்த விவசாயிகளின் மண்டை ஓடுகளை வைத்தும், எலி மற்றும் பாம்பு கறியை உண்டும் போராட்ட உத்திகளை முன்னெடுத்தார்கள். மத்திய அரசின் கவனத்தை ஈர்க்க அவர்கள் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு அரசு தரப்பிலிருந்து இதுவரை எந்த எதிர்வினையும் இல்லை. இதனை அடுத்துத் தமிழகம் திரும்பிய விவசாயிகளுக்கு ஆதரவாக எதிர் கட்சிகள் முழு கடையடைப்பு போராட்டத்துக்கு அறைகூவல் விடுத்தனர். தமிழகம் முழுவதும் விவசாயிகளுக்கு ஆதரவாகப் பல்வேறு இடங்களில் கடையடைப்பு போராட்டம் கடந்த வாரம் நடைபெற்றது.

முதலிடத்துக்கு வந்த மன்ப்ரீத்

ஆசிய கிராண்ட் பிரிக்ஸ் முதல் சுற்றில், குண்டு எறியும் போட்டியில் மன்ப்ரீத் கவுர் தங்கப்பதக்கம் வென்று உலகத் தரப்பட்டியலிலும் முதலிடத்தைப் பிடித்தார். ஏப்ரல் 24-ம் தேதி சீனாவில் உள்ள ஜின்ஹூவா நகரில் நடந்த போட்டியில் 18.86 மீட்டர் தூரம் இரும்புக்குண்டை எறிந்து முந்தைய சாதனைகளையும் முறியடித்தார். மன்ப்ரீத் இதற்கு முன்பு 17.96 மீட்டர் தூரம் வரை எறிந்திருக்கிறார்.

நொடிக்கு ஐந்து லட்சம் கோடி புகைப்படம்

ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த லுண்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் அதிநவீனக் கேமரா ஒன்றை உருவாக்கியுள்ளனர். இந்தக் கேமராவின் மூலம் ஒரு நொடிக்கு ஐந்து லட்சம் கோடி புகைப்படங்களை எடுக்க முடியும் என அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த வகை கேமராவில் இருந்து ஒரு புகைப்படத்தை எடுக்கும்போது அதில் உள்ள பல்வேறு குறியீட்டு செயல்களைப் படமாக எடுக்கின்றன. உதாரணத்துக்கு ஒரு கண்ணாடி பாட்டில் உடைக்கப்படும்போது உடைந்து சிதறும் ஒவ்வொரு பாகத்தையும் இந்தக் கேமராவால் படம் எடுக்க முடியும். இந்தப் படங்கள் பின்னர் வீடியோவாகப் பார்க்கும்போது அந்தப் பொருளில் இருந்து வெளிப்பட்டுள்ள பல வடிவங்களைப் பார்க்க முடிகிறது.

இந்த வகை கேமராவில் பதிவுசெய்யப்படும் காட்சிகளை வேதியியல், இயற்பியல், உயிரியல், மருத்துவம் போன்ற துறைகளில் பயன்படுத்த உதவும். பல வேதியியல் மாற்றங்களின் நுண்ணிய விஷயங்களைக் குறிப்பாக உயிரினங்கள் மூளை செயல்படும் விதம், வெடி குண்டுகள் வெடிக்கும் விதம், பிளாஸ்மா ஃப்ளாஷ், மற்றும் ரசாயன விளைவுகள் ஆகியவற்றை இந்தக் கேமராவைக் கொண்டு கண்டுபிடிக்க முடியும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

இந்தக் கேமராவை வடிவமைத்துள்ள இலியாஸ் கிரிஸ்டன்சன் (Elias Kristensson), ஆண்ட்ரியாஸ் என் (Andreas Ehn) ஆகியோர் கூறுகையில்,“இந்த தொழில்நுட்பத்தின் மூலம் ஒரு பொருளின் பல்வேறு செயல்களைப் படம் பிடிக்க வேண்டும் என்றால், அதற்காக இனி தனியாகக் கேமராவில் புதிய வேகப் பதிவு (set new speed record) செய்யத் தேவையில்லை. இந்தக் கேமராவின் மூலம் ஒரு குறிப்பிட்ட செயலில் ஒரேமாதிரியான மாற்றங்கள் எப்படி நிகழ்கின்றன என்பதை ஒரே கிளிக்கில் கண்டுபிடிக்க முடியும்” என்கிறார்கள். இந்தக் கேமராவுக்கு அவர்கள் வைத்துள்ள பெயர் ‘FRAME’ (Frequency Recognition Algorithm for Multiple Exposures) என்பதாகும்.

ஒரு கோடி ஆண்டுக்கு முன் வாழ்ந்த குரங்கின் பல்

கடந்த வாரம் ஒரு கோடி ஆண்டுக்கு முன் வாழ்ந்த குரங்கின் பல் இமாச்சல பிரதேசத்தில் சுமார் ஒரு கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த குரங்கின் பல் புதை படிவம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சுமார் 38 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட கிருஷ்ணபித்கஸ் என்ற விலங்கினம் குறித்து மேலும் அறிந்து கொள்ளும் வகையில் இந்தப் பல் படிவம் உதவும் என அறிவியலாளர்கள் கூறியுள்ளனர்.

இந்தப் பல் படிவம் இமாசலப் பிரதேசத்தில் உள்ள ஹரிதலிங்கர் என்ற இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தற்போது வாழ்ந்து வரும் கிப்பன் (gibbons) என்ற குரங்கின் முந்தைய கால வளர்ச்சி குறித்து அறிந்து கொள்ள உதவும் என ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

இது குறித்துப் பேலியோ ஆய்வு மையத்தின் (Paleo Research Society) தலைவரான அனேக் அங்கியான், "பியோபித்செக்கின் என்ற குரங்கின் வழித்தோன்றலாகக் கிருஷ்ணபித்கஸ் இருக்க வாய்ப்புள்ளது. இந்த உயிரி னத்தைப் பற்றி விஞ்ஞானிகள் முன்பு அறிந்திருக்கவில்லை. இந்தக் கண்டுபிடிப்பு கிருஷ்ணபித்கஸ் என்ற உயிரினத்தின் பழக்க வழக்கம் மற்றும் அதனுடைய பரிணாம வளர்ச்சி குறித்து அறிந்து கொள்ள உதவும்” என்கிறார்.

இடதுகை பழக்கம் உடையவர்கள்...

மெல்லிய முகத் தாடைகள் உடைய 25 சதவீதம் மக்கள் பெரும்பாலும் இடதுகை பழக்கம் உள்ளவர்கள் எனப் புதிய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வை வாஷிங்டன் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஃபிலிப் ஹியூஜல் (Philippe Hujoel) நடத்தினார். இந்த ஆய்வின் மூலம் இடது கை பழக்கம் உருவானதற்காகக் காரணத்தைக் கண்டுபிடிக்க முடியும் எனத் தெரிவித்த அவர். அதேசமயம் மெல்லிய தாடை உடையவர்கள் பலர் காசநோயால் பாதிக்கப் பட்டுள்ளனர் என்கிறார்.

மெல்லிய தாடை உள்ளவர்களுக்குக் கீழ் பற்கள் சற்று வாயின் உள்ள பகுதியில் இருப்பது போலவும், மேல் பகுதியில் சற்று வெளியே இருப்பது போலவும் இருக்கும். அமெரிக்கா இளைஞர்களில் ஐந்து பேரில் ஒருவர் மெல்லிய தாடைகள் உள்ளவராக இருப்பதாக அந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

“சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கிரேக்க மருத்துவர் ஒருவர் மெல்லிய தாடை உள்ளவர்களுக்குக் காசநோய் பாதிப்பு உள்ளது எனக் கண்டுபிடித்து உள்ளார். தற்போது அவர் தெரிவித்த கருத்து இந்த ஆய்வின் மூலம் உறுதிசெய்யப்பட்டுள்ளது” எனப் ஃபிலிப் ஹியூஜல் கூறினார்.

இந்த ஆய்வுக்கு வலு சேர்க்கும் விதமாக மேற்கு ஐரோப்பாவில் உள்ள இங்கிலாந்து நாட்டில் அதிக மாக மக்கள் காசநோய் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதேபோல் அந்நாட்டில் உள்ள பலர் இடதுகை பழக்கம் உள்ளவர்களாகவும், முகத்தில் மெல்லிய தாடைகள் கொண்டவர்களாகவும் உள்ளனர் என்கிறார் அவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x