Published : 14 Feb 2017 12:32 PM
Last Updated : 14 Feb 2017 12:32 PM

தொழில் தொடங்கலாம் வாங்க! - 02: வெற்றிக்கு என்ன தேவை?

எடிசன் முதல் எல்லா விஞ்ஞானிகளும் கேட்ட கேள்வியைத்தான் முதலில் கேட்கணும். “தொழில் தொடங்க நினைப்பது ஏன்?” நோக்கம் தெரிந்தால் உங்களின் உந்துசக்தி புரியும். அதனால்தான் சொந்தத்தொழில் என்று ஆலோசனை கேட்டு வந்தால் இதை அவசியம் கேட்பேன்.

அதிகம் சொல்லப்படும் காரணங்களைப் பார்க்கலாம். அப்படியே என் ஆலோசனைகளையும் தருகிறேன். என்ன சார் இவ்வளவு வேகம் என்கிறீர்களா? நேரத்தை வீணடிக்க வேண்டாம். நேரடியாக வேலையை ஆரம்பிக்கலாம்!

தொழில் தெரிந்தால் போதுமா?

“எனக்கு இந்தத் தொழில் தெரியும் சார். பத்து வருஷம் வேலை பாத்திருக்கேன். அத்தனையும் அத்துப்படி. அதனால நாமே இதை செஞ்சா நல்ல லாபம்னு பாக்கறேன்!”

ஆதாரத் தொழில் அறிவு அவசியம். ஆனால் அது மட்டுமே வியாபாரத்துக்குப் போதாது. நல்ல சமையல் தெரியும் என்று ஓட்டல் ஆரம்பிப்பது போலத்தான் இதுவும். சமையல், ஓட்டல் தொழிலின் ஒரு பகுதி. முக்கியப் பகுதி. அவ்வளவுதான். சமையல் தெரியும் என்பதைவிட ஓட்டல் நிர்வாகம் தெரியணும். அதிலும் தொழிலாளியாய் இருப்பது வேறு. முதலாளியாய் இருப்பது வேறு. இந்த வேறுபாட்டைப் புரிந்து கொள்வது நல்லது.

ஒரு தொழிலில் அடிநாதமாய் உள்ள ஒரு செயல்திறன் உங்களுக்கு இருப்பதாலேயே நீங்கள் அந்தத் தொழிலில் வெற்றி பெறுவீர்கள் எனச் சொல்ல முடியாது. எத்தனையோ பிரம்மாண்ட படங்கள் கொடுத்த டைரக்டர்கள் சொந்தத் தயாரிப்பு நிறுவனத்தை அந்த அளவு வெற்றிகரமாக நடத்த முடியாமல் போனதைக் கண்கூடாகப் பார்த்திருக்கிறோம். காரணம் என்ன? வெற்றிகரமான சினிமா இயக்குநரால் ஒரு படக் கம்பெனியை வெற்றிகரமாய் நிர்வாகம் செய்ய முடியும் என்று சொல்ல முடியாது.

இது ஏன் என்று போக போகச் சொல்கிறேன். இப்போதைக்குத் தெரிய வேண்டியது இதுதான்: ஆதாரத் தொழில் அறிவு இருப்பது நல்லது. அது மட்டும் போதாது!

நிஜமான முதலாளி

“யார் கிட்டேயும் கை கட்டி நிக்கக் கூடாது. நாமே ராஜா. நாமே மந்திரி. ஒரு பய கேள்வி கேக்கக் கூடாது. அதுக்குத்தான் சார் சொந்தமா பண்லாம்னு நினைக்கிறேன்.”

வேலையில் இருந்தால் ஒரு முதலாளிதான் கேள்வி கேட்பார். சொந்தத் தொழில் என்றால் ஒவ்வொரு வாடிக்கையாளரும் கேள்வி கேட்பார். ஏனென்றால் வாடிக்கையாளர்தான் தொழிலின் நிஜமான முதலாளி. தவிர பங்குதாரர், பணியாளர், அரசு என எல்லோரையும் அணைத்துச் செல்ல வேண்டிய கூடுதல் பொறுப்பும் இங்கு உண்டு. அதனால் தொழில் தொடங்கணும் என்றால் எல்லார் பேச்சையும் கேட்கத் தயாராக இருங்கள். பழைய காலத்துப் பண்ணையார் போல செயல்பட நினைத்தால், இந்தக் காலத்துத் தொழில் சூழல் இடம் அளிக்காது.

லாபம் அவசியம்

“இந்தத் தொழில் மேலுள்ள ஆசைதான் தூண்டுதல் எனக்கு. பணம் முக்கியமில்லை சார். நாம ஏதாவது பண்ணி பேர் வாங்கணும். அதுக்குதான் இந்த தொழிலை முயற்சி பண்றேன்.” இப்படி ஆசையின் தூண்டல் உங்களைத் தொழில் தொடங்க வைக்கும். ஆனால் தொழிலில் நீடிக்க பணத்தின் மேல் ஆசை கட்டாயம் வேண்டும். பல படைப்பாளிகள் தொழிலில் தோற்க காரணம் என்ன தெரியுமா? உணர்வு ரீதியான ஈடுபாடு சிறப்பான பணியைச் செய்ய வைக்கும். தொழிலைத் தக்க வைக்கவும் வளர்க்கவும் லாபத்தை நோக்கிச் செல்லும் எண்ணங்கள் தேவை. பணம் வராத செயலை செய்யக் கூடாது. அப்படிச் செய்தால் அது சேவை. அந்தத் தொழிலை நீண்ட நாட்கள் தக்கவைப்பதும் வளர்ப்பதும் பெருங்கடினம்.

சில சமயங்களில் வேலை கிடைக்காமல் சொந்தத் தொழில் ஆரம்பிப்பவர்கள் உண்டு. ஒரு விசிட்டிங்க் கார்ட்போலச் சொந்த கம்பெனியைப் பயன்படுத்தி வேலையைப் பெறுவர். முதல் புத்தகம் போடும் எழுத்தாளர்களைப் போல. ஆனால் உங்கள் தொழிலை லாபகரமாக நடத்தும் நீண்ட நாள் திட்டம் உண்டு என்றால் லாப நோக்கம் அவசியம். பணத்தை நேசிக்காமல் பணம் பண்ண முடியாது!

பணம் மட்டும் போதாது!

“என் நண்பர்தான் பார்ட்னர். அவருக்கு இந்தத் தொழில் தெரியும். அவர் ஃபுல்லா பாத்துப்பார், நான் பணம் மட்டும் போட்டா போதும். அதனாலதான் இதை சூஸ் பண்ணேன்!”

பணமுள்ள பங்குதாரர் கிடைப்பது நல்லதுதான். ஆனால் பிறரின் அனுபவத்தையும் அனுமானத்தையும் மட்டும் வைத்துத் தொழில் தொடங்குவது ஆபத்தானது. அனுபவஸ்தர் முதலீடு செய்தால் தேவலாம். அதே போல முன் பின் தெரியாதவர் பிஸினஸ் ஐடியா என்று பணம் கேட்டால் என்னென்ன கேள்விகள் கேட்பீர்களோ அவை அனைத்தையும் நண்பரிடம் கேட்பது அவசியம். பணத்தை மட்டும் போட்டுவிட்டால் போதும், அது தொழிலோடு வளர்ந்து மீண்டும் பெருகி திரும்ப வரும் என்று எண்ணுவது மடமை. தொழிலில் உங்கள் பங்கு என்ன என்று தெரிய வேண்டும்.

பணம் இல்லை என்பதால் தொழில் ஆரம்பிக்க முடியவில்லை என்று யார் சொன்னாலும் நம்பாதீர்கள். சரியான தொழில் எண்ணத்திற்குக் கடனும் முதலீடும் நிச்சயம் கிட்டும். அதையெல்லாம் நாடினாரா உங்கள் நண்பர்? விசாரியுங்கள். முயற்சித்தும் பலன் இல்லை என்றால் செயல் திட்டம் தெளிவில்லை என்று பொருள்.

முயற்சி செய்யாமல் உங்களிடம் வந்திருந்தால், வேறு என்ன சொல்ல? “நீங்க ரொம்ப நல்லவரு!” இப்படி ஒரு புன்னகை மன்னன் கிடைக்க உங்கள் நண்பர் கொடுத்து வைத்திருக்க வேண்டும்!

“சரி, எந்தக் காரணம் சொன்னாலும் இப்படித் தட்டி விட்டால் எப்படித்தான் தொழில் தொடங்குவது?” என்று உங்கள் மைண்ட் வாய்ஸ் சொல்வது கேட்கிறது.

பொறுமை முக்கியம். அடுத்த வாரத்துக்குக் காத்திருங்கள்.

தொடர்புக்கு: gemba.karthikeyan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x