Last Updated : 15 Feb, 2017 11:12 AM

 

Published : 15 Feb 2017 11:12 AM
Last Updated : 15 Feb 2017 11:12 AM

வகுப்பறைக்கு வெளியே: தாய்மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்!

மொழியின்றி நாமில்லை. நாம் நினைக்கும் எல்லா விஷயங்களையும் பேச்சு, எழுத்து, சைகை, பாடல், கதை என்று பல்வேறு வடிவங்களில் வெளிப்படுத்துகிறோம். ஒருவர் மற்றொருவருடன் கலந்துரையாடுகிறோம், விஷயங்களைப் புரிந்துகொள்கிறோம். இவை அனைத்துக்கும் அடிப்படை மொழி. மொழி இருப்பதால்தான் நம்முடைய எண்ணங்களை வெளிப்படுத்த முடிகிறது. மொழியில்லாமல் எந்த வேலையும் நடக்காது.

ஒவ்வொரு நாடு, மாநிலம், பகுதிக்கும் பல்வேறு மொழிகள் இருக்கின்றன. இப்படி மொழிகள் வேறுபட்டிருப்பதற்கு இரண்டு முக்கியக் காரணங்கள் இருக்கின்றன. ஒன்று, ஒவ்வொரு பகுதிக்கும் உள்ள பிரத்யேகமான நிலப்பகுதி, தட்பவெப்பம், சுற்றுச்சூழல் போன்றவை. மற்றொன்று அங்கு வாழும் மக்களின் பண்பாடு. இவை இரண்டும்தான் ஒவ்வொரு மொழிக்கும் அடித்தளம்.

தாய்மொழியின் தனித்தன்மை

ஃபிப்ரவரி 21-ம் தேதியை உலகத் தாய்மொழி நாளாக யுனெஸ்கோ கொண்டாடிவருகிறது. நம் நாட்டிலிருந்து நோபல் பரிசு பெற்ற ஒரே இலக்கியப் படைப்பு ‘கீதாஞ்சலி’. இந்தக் கவிதைத் தொகுப்பை ரவீந்திரநாத் தாகூர் முதலில் தன்னுடைய தாய்மொழியான வங்க மொழியில்தான் எழுதினார். அவரே பின்னர் அதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். அதற்கே 1913-ல் நோபல் பரிசு வழங்கப்பட்டது.

இந்தியா என்பது ஏராளமான மொழிகள் நிறைந்த நாடு. முதன்மை மொழிகளை அடிப்படையாகக் கொண்டு பல்வேறு துணை மொழிகள், வட்டார வழக்குகள் நம் நாட்டில் உள்ளன.

மாநிலங்களின் பெயரை வைத்தே நம் நாட்டு மாநிலங்களில் பரவலாகப் பேசப்படும் மொழியைப் பெருமளவுக்குக் கண்டறிந்துவிடலாம். காஷ்மீரில் காஷ்மீரி, வங்கத்தில் வங்காளம், குஜராத்தில் குஜராத்தி, மகாராஷ்டிரத்தில் மராத்தி, அஸாமில் அஸாமியா, ஒடிசாவில் ஒடியா, பஞ்சாபில் பஞ்சாபி போன்ற மொழிகள் அதிகம் பேசப்படுகின்றன.

இந்திய மொழிகள்

நம் நாட்டில் நான்கு மிகப் பெரிய மொழிக் குடும்பங்கள் இருக்கின்றன:

இந்தோ-ஆரிய மொழிக் குடும்பம்

திராவிட மொழிக் குடும்பம்

ஆஸ்த்ரோ – ஆசிய மொழிக் குடும்பம்

திபெத்தோ – பர்மன் மொழிக் குடும்பம்

இந்தோ-ஆரிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தது சமஸ்கிருதம் (வடமொழி). காஷ்மீரி, டோக்ரி, பஞ்சாபி, இந்தி, ராஜஸ்தானி, குஜராத்தி, மராத்தி, மைதிலி (பிகார்), வங்கம், ஒடியா, அஸாமிய மொழி உள்ளிட்டவை இந்த மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தவை.

திராவிட மொழிகள் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு உள்ளிட்டவை. தென்னிந்திய மொழிகளில் பெருமளவு தமிழ், வடமொழி ஆதாரச் சொற்கள் பயன்படுத்தப்படுகின்றன.

திபெத்தோ-பர்மன் மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த மொழிகள் வடகிழக்கு மாநிலங்களில் பேசப்படுகின்றன. இவற்றில் மக்கள்தொகை அளவில் மணிப்பூரி முக்கியமானது.

மத்திய இந்தியாவில் பேசப்படும் காரியா, முண்டாரி போன்ற முண்டா மொழிகள் ஆஸ்த்ரோ-ஆசிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தவை. ஆனால், இவை பரவலாகப் பேசப்படவில்லை.

நூற்றுக்கணக்கான மொழிகள்

நமது அரசமைப்புச் சட்டத்தின் பட்டியலில் 22 முதன்மை மொழிகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இந்த மொழிகளுடன் ஆங்கிலம், ராஜஸ்தானி மொழிகளையும் சாகித்ய அகாடமி கூடுதலாக அங்கீகரித்துள்ளது. இந்த 24 மொழிகளில் எழுதப்படும் சிறந்த படைப்புகளுக்கு சாகித்ய அகாடமி ஆண்டுதோறும் விருதுகளை வழங்கி கவுரவித்துவருகிறது.

சிந்தி மொழி பேசும் மக்கள் சிந்த் என்ற பண்டைய சிந்து பகுதியைச் சேர்ந்தவர்கள். இந்தப் பகுதி தற்போது பாகிஸ்தானில் இருக்கிறது. ஆனாலும் இந்த மொழியைப் பேசுபவர்கள் இப்போதும் இந்தியாவில் இருப்பதால், அரசியல் சாசனம் இம்மொழியை அங்கீகரித்துள்ளது.

உருது பேசும் மக்களும் நம் நாட்டில் உண்டு. இவர்கள் குறிப்பிட்ட ஒரு மாநிலத்தில் மட்டுமல்லாமல் பரவலாக இருக்கிறார்கள். உத்தரபிரதேசத்தில் இம்மொழியைப் பேசுபவர்கள் அதிகம். அதேபோல ஆங்கில மொழி குறிப்பிட்ட எந்த மாநிலத்தையும் சேர்ந்ததில்லை என்றாலும், அரசின் தொடர்பு மொழியாக இருக்கிறது. நகர்ப்புறங்களில் வெளி மாநிலத்தவர் தொடர்புகொள்வதற்குப் பயன்படுத்தக்கூடிய மொழியாகவும் உள்ளது.

இந்தியாவில் நூற்றுக்கணக்கான மொழிகள், துணை மொழிகள் பேசப்படுகின்றன. உலகில் நிலநடுக்கோட்டுக்குக் கீழே உள்ள பகுதிகளில்தான் மொழிகள் செழிப்பாக உள்ளன. இதற்குக் காரணம் இப்பகுதிகளில் வாழும் பல்வேறுபட்ட மக்களும் பல்வேறுபட்ட சுற்றுச்சூழலும்தான்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x