Last Updated : 06 Jan, 2014 12:00 AM

 

Published : 06 Jan 2014 12:00 AM
Last Updated : 06 Jan 2014 12:00 AM

சைகோமெட்ரிக் தேர்வுகள் ​மனிதாபிமானமா, நிர்வாக நலனா?

பலவிதச் சாய்ஸ்களை அளிப்பது, அவற்றில் எதை நீங்கள் தேர்ந்தெடுக்கிறீர்கள் என்பதைக் கொண்டு உங்களைக் கணிப்பது ஆகியவை சைகோமெட்ரிக் தேர்வுகளின் முக்கிய நோக்கமாகும்.

இதில் முக்கியமாகக் கவனிக்க வேண்டியது என்னவென்றால், குணங்கள் மற்றும் நடத்தையைத் தீர்மானிக்கும் கேள்விகளுக்கு இதுதான் சரியான விடை என்று பொத்தாம் பொதுவாக ஒன்றைக் கூறிவிட முடியாது. ஒரு விடை மனிதாபிமானம் என்கிற கோணத்தில் சிறப்பானதாக இருக்கலாம். மற்றொரு விடை நேர நிர்வாகம் எனும் கோணத்தில் சிறந்ததாக இருக்கலாம். நிறுவனத்துக்கு இதுதான் லாபகரமானது என்கிற கோணத்தில் மூன்றாவது விடை பொருத்தமானதாக இருக்கலாம்.

ஆக, எந்தக் கோணத்தை அறிந்துகொள்ள நாம் அந்தக் கேள்வியைக் கேட்கிறோம் என்பதைப் பொருத்துதான் அது சரியான விடையா, இல்லையா என்பதைத் ​தீர்மானிக்க முடியும். இதோ ஓர் உதாரணக் கேள்வியும் அதற்கான பலவித விடைகளும்.

"உங்கள் குழுவில் உள்ள ஒருவருக்கு இன்றே செய்து முடிக்கவேண்டுமென்று சில வேலைகளைக் கொடுத்திருக்கிறீர்கள். அன்று மாலை அவர் தன் வேலைகளை முடித்ததாகக் கூறிவிட்டுக் கிளம்பிக்கொண்டிருக்கிறார். ​அப்போது அவரது வேலைகளில் ஒன்று விடுபட்டுப் போனதை நீங்கள் அறிகிறீர்கள். என்ன செய்வீர்கள்?

அ) “இதையும் கொஞ்சம் செய்து முடித்துவிட்டுச் செல்லுங்கள்’’ என்று கறாராகச் சொல்வீர்கள்.

ஆ) அடுத்த நாள் செய்யட்டும் என்று விட்டுவிடுவீர்கள்.

இ) அந்த வேலையை அவர் வீட்டுக்குக் கிளம்பிய பிறகு, நானே செய்து முடிப்பேன்.

இந்த மூன்றில் இதுதான் சரியான விடை என்று எதையும் கூறிவிட முடியாது. அதே சமயம் எது போன்ற வேலைக்கு ஆளை நியமிக்கப் போகிறார்கள் - குழுத் தலைவரா அல்லது மனிதவளத் துறைப் பிரிவா அல்லது திட்டமிடும் துறையா என்பதைப் பொருத்து ஒவ்வொருவிதமான பதில் சிறந்ததாகக் கருதப்படும்.

நீங்கள் முதல் விடையைத் தேர்ந்தெடுத்திருந்தால் - அதாவது வேலையை முடித்துவிட்டுச் செல்லுங்கள் என்று கறாராகச் சொன்னால், நீங்கள் மனித உணர்வுகளை​விட கண்டிப்பு காட்டுவதிலும், நிறுவனம் வளர்வதிலும் அதிக ஈடுபாடு கொண்டவர் என்று அர்த்தம்.

இப்படிச் சொல்வதால் அடுத்த நாள் தனக்கான வேலையை முடித்துவிட்டுத்தான் அவர் கிளம்புவார். ஏனென்றால், அன்று செய்ய வேண்டிய ஒரு வேலை விடுபட்டிருந்தால் கிளம்பும்போது நீங்கள் அதை முடித்துவிட்டுச் செல்லும்படி ‘தொல்லை’ கொடுப்பீர்கள் என்பது அவருக்கு​த் தெரியும்.

அடுத்த நாள் செய்யட்டும் என்று சலுகை காட்டினால், நிறுவனத்தைவிட அதில் பணிபுரியும் தனிநபர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள் என்று பொருள். தாமதமாகச்​ சென்றால் அவருக்கு வீட்டில் நேரக்கூடிய பிரச்சினைகளை உணர்கிறீர்கள். நீங்கள் மனிதவளப் பிரிவுக்கு விண்ணப்பித்திருந்தால், இத்தகைய விட்டுக்கொடுத்தல், அந்தப் பதவிக்கு ஒரு சிறப்பு. ஏனென்றால்,

ஊழியர்களை மனிதாபிமான நோக்கிலும் தன் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். அவரை வீட்டுக்கு அனுப்பிவிட்டு, நீங்கள் அந்த வேலையைச் செய்கிறீர்கள் என்றால் அது ஒருவிதத்தில் தவறான முன் உதாரணம். ஏனென்றால், நாளைக்கு​ வே​றொருவர் இதே போன்ற சலுகையைக் கேட்டால், அதையும் மறுக்க முடியாமல் போகலாம். ஆக, நிறுவனத்தின் நலம் பின்னுக்குத் தள்ளப்படுகிறது. தவிர ​மற்றவருக்கான பணியைச் செய்யும்போது உங்களது பணி பாதிக்கப்பட வாய்ப்பு உண்டு. மேலும், வருங்காலத்திலும் அவரது பணியில் ஒரு பங்கை நீங்கள் செய்யலாமே என அவர் எதிர்பார்க்கலாம்.

இப்போது நீங்களே யோசித்து ஒரு முடிவுக்கு வரும்படியான ஒரு கேள்வியும் அதற்கான பதில்களும்:

நினைத்துப் பார்க்கையில்

நீங்கள் விரும்பும் எந்த வகையான பள்ளி ஆசிரியரை இன்னமும்

உங்களுக்குப் பிடித்திருக்கிறது?

(அ) பளிச்சென்று தோற்றம் அளித்தவர்.

(ஆ) நன்றாகப் பாடம் சொல்லிக் கொடுத்தவர்.

(இ) உங்களுக்குச் சில சலுகைகள் காட்டியவர்

(ஈ) எந்தப் பள்ளி ஆசிரியரும் எனக்கு விருப்பமானவர் இல்லை.

(உ) ஆசிரியர்களிடையே எதற்காக வேறுபாடு காட்ட வேண்டும்? எல்லா ஆசிரியர்களையுமே பிடிக்கும்.

இப்போது ஒவ்வொரு பதிலையும் கூறுபவர் குறித்துச் சிந்தித்துப் பாருங்கள். உங்களாலேயே

அவரைப் பற்றி ஒரு முடிவுக்கு வர முடியும். இந்த முடிவு சரிதானா என்பதை வேறு சில

கேள்விகளுக்கான பதில்களையும் வைத்து உறுதி செய்துகொண்டால் அந்த முடிவு சரியானதாகவே இருக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x