Last Updated : 08 Feb, 2017 11:30 AM

 

Published : 08 Feb 2017 11:30 AM
Last Updated : 08 Feb 2017 11:30 AM

தொப்பி வியாபாரியும் மெட்ரோ குரங்கும்

உங்களுக்கு எப்பவுமே யாரு கதை சொல்லுவா? தாத்தா, பாட்டி, அம்மா, அப்பா, பள்ளிக்கூட டீச்சர்தானே கதை சொல்வாங்க. ஆனா, சின்மயா ஹெரிடேஜ் சென்டருக்குப் போனப்ப அங்கே கதை சொன்னது யார் தெரியுமா? ஒரு பெரிய காட்டுல இருந்த ‘பக்பக்’ன்ற 400 வயசான மரமும் அதோட நண்பன் பெரிய கரடியும்தான் கதையைச் சொன்னாங்க.

சரி, யாருக்குக் கதையைச் சொன்னாங்க? அங்க வந்திருந்த குழந்தைகளுக்குத்தான். அதுவும் சின்ன சின்ன குழந்தைங்க புரிஞ்சுக்கிற மாதிரி எளிமையான இங்கிலீஷ்ல சொன்னாங்க. கதையைச் சொல்லசொல்ல அதைச் சில பேரு நடிச்சும் காட்டுனாங்க. அந்தக் கதையைக் கேட்க உங்களுக்கு ஆசையா இருக்கா?

அந்தக் கரடி சொன்ன கதையில நாலு குரங்குங்க வருது. அந்தக் குரங்குங்க ரொம்ப வாலுங்க. எப்போ பார்த்தாலும் மரத்துக்கு மரம் தாவிக் கொண்டும், வாழைப்பழத்தைச் சாப்பிட்டுகிட்டும் ஜாலியா இருக்கும்.

அந்த நாலு குரங்குகள்ல ‘மெட்ரோ’ன்னு ஒரு குரங்கு இருந்துச்சு. அதுக்குத் தலையில் முடியே இல்லை. அதனால, மற்ற குரங்குகள் எல்லாமே ‘மெட்ரோ’வ ரொம்ப கிண்டல் பண்ணாங்க. அதனால அந்தக் குரங்கு ரொம்ப வருத்தப்படுது.

ஒரு நாள் அந்தக் காட்டுக்கு டக்குலுன்னு ஒரு வியாபாரி வந்தாரு. அந்த வியாபாரிக்கும் தலையில முடி இல்லை. அதனால அவர் அழகழகான தொப்பிகளைச் செய்து தலையில் போட்டுக்குவாரு. அவரோட தொப்பிங்க எல்லாம் ஆரஞ்சு, மஞ்சள், சிவப்பு, ஊதா கலர்னு இருந்துச்சு. கால்ல அவருக்கு வலி இருந்ததால ஒரு மரத்துக்குக் கீழே தொப்பிகள் இருந்த பையை இறக்கி வைச்சுட்டு கொஞ்சம் நேரம் தூங்கினாரு.

அப்போ அந்தப் பக்கமா வந்த மெட்ரோ குரங்கு அங்க இருந்த தொப்பிப் பையைப் பார்த்துச்சு. அந்தப் பையில இருந்த ஒரு தொப்பியை எடுத்துத் தலையில போட்டுகிச்சு. ஏதோ சத்தம் கேட்டுக் கண் விழிச்ச டக்குலுவுக்கு குரங்கைப் பார்த்துப் பயம் வந்துடுச்சு. “அய்யோ! அது என் தொப்பினு” டக்குலு சொன்னாரு. உடனே குரங்கும் அதையே மறுபடியும் சொல்லுச்சு. அதைக் கேட்டு அவரு தலையில கை வைச்சாரு. குரங்கும் அதே மாதிரிச் செஞ்சது.

அப்போதான் டக்குலுவுக்கு ஒரு ஐடியா வந்துச்சு. தன்னோட தலையில் இருக்கிற தொப்பிய கழட்டிக் கீழே போட்டாரு. உடனே குரங்கும் தன் தலையில இருக்கிற தொப்பிய கீழே போட்டுச்சு. உடனே டக்குலு வியாபாரி கீழ விழுந்த தொப்பியை எடுத்துக்கிட்டாரு. குரங்கு தனக்குத் தொப்பி கிடைக்கலையேன்னு ரொம்ப வருத்தமா முகத்தை வச்சுகிச்சு. அதைப் பார்த்து டக்குலு அந்த மெட்ரோ குரங்குக்கு ஒரு தொப்பியை எடுத்துக் கொடுத்தாரு. குரங்கு சந்தோஷமா வாங்கிகிச்சு. அப்புறம், காட்டுல இருந்த மத்த குரங்குங்க எல்லாம் டக்குலுவுக்கு ஃபிரெண்டு ஆனாங்க. டக்குலுவும் குரங்குககிட்ட ஃபிரண்டு ஆனாரு.

இந்தக் கதை நமக்கு என்ன சொல்லுது? மனிதனா இருக்கிற நாம எல்லா விலங்குகளிடமும் அன்பாக இருக்கணும், அதோட உணர்வுகளையும் புரிஞ்சுக்கணும் அப்படின்றததானே? இந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த குழந்தைங்க எல்லாரும் குரங்குகள் பண்ணச் சேட்டைகளைப் பார்த்தும், அதுங்க இங்கிலீஷ் பேசுன மாதிரிப் பேசியும், பாட்டுப் பாடியும், ஜாலியா இருந்தாங்க. நம்ம ஊர்ல தமிழ்ல சொல்ற கதைகளை எளிமையான இங்கிலீஸில் சொல்லணும்னுதான் ‘கரடி பாத்’ என்ற அமைப்பு இதற்கு ஏற்பாடு செஞ்சிருந்துச்சு.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x