Last Updated : 08 Nov, 2013 12:00 AM

 

Published : 08 Nov 2013 12:00 AM
Last Updated : 08 Nov 2013 12:00 AM

‘காதல்ல விழக்கூடாதுன்னு தெளிவா இருந்தேன்’ - ரம்யா பேட்டி

காதலர்களுக்கு பிடித்த மாதமான பிப்ரவரியில் மணமகளாகப் போகிறார் ‘விஜய் டிவி’ ரம்யா. பெற்றோர் பார்த்து நிச்சயித்த பையனை திருமணம் செய்துகொள்ளவிருக்கிறார். கல்யாணக் களையோடு, வீட்டில் சுற்றித் திரிந்த ரம்யாவிடம் பேசினோம்.

உங்கள் வருங்கால ஹீரோ பற்றி?

அஜித். லண்டன்ல எம்.எஸ் சட்டம் மற்றும் பொருளாதாரத்துறையில் பட்ட மேற்படிப்பு முடித்திருக்கார். எங்கள் வீட்டில் ஒரு வருஷத்துக்குக்கும் மேல மாப்பிள்ளை பார்க்கும் படலத்தில் இறங்கிட்டாங்க. அப்போ, நான் வீட்டில் வைத்த ஒரே கோரிக்கை, ‘எந்த சூழலிலும் சென்னையை விட்டு போகமாட்டேன்’ என்பது மட்டும்தான். “வேறு வழியில்லாமல்தான் நானும் லண்டன்ல படிச்சிக்கிட்டிருந்தேன். எப்போதுமே சென்னைதான் பிடிக்கும்!” என்று, பார்த்த முதல் சந்திப்பிலேயே அஜித்தும் சொன்னார். இது ஒண்ணு போதாதா?!

அஜித், உங்களோட நிகழ்ச்சிகளை எல்லாம் பார்த்திருக்காரா?

அவருக்கு இப்போ பிடித்த விஷயமே என்னோட நிகழ்ச்சிகள்தான். எதையுமே தவற விடறதில்லை. நிகழ்ச்சிகளைப் பார்த்துட்டு பாராட்டவும் செய்வார். “இவ்ளோ கூட்டத்துக்கு நடுவில் எப்படித்தான் பேசுறியோ?” என்று ஆச்சர்யப்படுவார். திருமணத்துக்கு பிறகும், மீடியாவில் இருக்கணும் என்று சொல்லியிருக்கார். நான்தான் இன்னும் முடிவு எடுக்கலை. பார்க்கலாம்.

எவ்வளவு சிபாரிசு வந்தாலும் நடிக்க மாட்டேன் என்பதில் உறுதியா இருக்கீங்களே?

திரைப்பட இயக்குநர் ஆகணும் என்கிற ஆசையில்தான் விஷுவல் கம்யூனிகேஷன் படிப்பையே தேர்ந்தெடுத்தேன். ஆனா அந்த வேலை சாதாரணமானது இல்லை. அதுக்கு நிறைய பொறுமையும், கடினமான உழைப்பும் தேவைன்னு பிறகுதான் தெரிஞ்சுது. எப்பவுமே வீடு, நண்பர்கள், வேலை இப்படி வெரைட்டியா இருக்கணும்னு ஆசைப்படும் பொண்ணு, நான். தொகுப்பாளினி ஆனபோதே சின்னத்திரை, வெள்ளித்திரையில் நடிப்பு, நடனம் எதுவுமே கூடாது என்பதை தீர்க்கமான முடிவா எடுத்துக்கிட்டேன். அதைத்தான் பின்பற்றி வருகிறேன்.

காதல்னா பிடிக்காதா?

அப்படியில்லை. குடும்பத்தில் முதன்முதலா நான் தான் மீடியாவாசியாக வாழ்க்கையை ஆரம்பித்தவள். வீட்டில் ஆரம்பத்தில் சொன்ன ஒரே விஷயம், “நாங்க பார்த்து வைக்கிற மாப்பிள்ளையைத்தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும்!” என்பது மட்டும்தான். ‘ரம்யாவுக்கு இருக்குற நட்பு வட்டத்தை பார்த்தால், கண்டிப்பா இவ காதல் திருமணம்தான் செய்துப்பா!’ என்று உறவுக்காரங்க, நண்பர்கள் பலரும் சொல்வாங்க. அவங்க வார்த்தையை பொய்யாக்கணும், யாரிடமும் விழுந்திடக்கூடாதுன்னு தெளிவா இருந்தேன். இப்போ, பெற்றோர், உறவினர் என்று எல்லோருக்கும் சந்தோஷத்தை ஏற்படுத்தியாச்சே.

பரிசு பரிமாற்றம்?

நான் அவருக்கு இன்னும் எதுவும் கொடுக்கவில்லை. நிச்சயதார்த்தம் அன்று காலை எழுந்து என் அறைக் கதவைத் திறந்தேன். வாசலில் ஒரு அழகான பாக்ஸ் இருந்தது. அதைத் திறந்தால் உள்ளே கியூட்டான ஒரு வாழ்த்து அட்டை, பூச்செண்டு, ஹேண்ட்பேக் எல்லாமும் இருந்தது. அவரோட வேலையாகத்தான் இருக்கும் என்று நினைத்து என் அம்மாவிடம் கேட்டேன். ‘சர்ப்ரைஸா இருக்கட்டும்!’ என்று அவர் சொன்னதா சொன்னாங்க. நான் எதிர்பார்க்கவே இல்லை. ரொம்பவே சந்தோஷமா இருந்தது. அதுதான் அவர் கொடுத்த முதல் பரிசு.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x