Last Updated : 02 May, 2017 10:25 AM

 

Published : 02 May 2017 10:25 AM
Last Updated : 02 May 2017 10:25 AM

கேள்வி மூலை 28: இளம்வெயில் உற்சாகம் தருவது ஏன்?

என்னதான் கோடை வெயில் நம் உடலை வாட்டியெடுத் தாலும், காலை இளம்வெயில் நமக்குப் பிடித்தமானதாகவே இருக்கிறது. அதற்குக் காரணம் என்ன?

நமது மூளையையும் நரம்பு மண்டலத்தையும் சமநிலைப்படுத்தும் காரணிகளே நம்முடைய மனநிலையைத் தீர்மானிக்கின்றன, நல்லபடியாக உணரச் செய்கின்றன அல்லது பருவகாலத் தாக்கக் குறைபாடு (Seasonal Affective Disorder - SAD) ஏற்படவும் காரணமாக இருக்கின்றன.

நமது மூளையில் உள்ள பீனியல் சுரப்பி மெலடோனின் என்ற இயக்குநீரைச் சுரக்கிறது. இந்த இயக்குநீரே தூக்கம், விழிப்புச் சுழற்சியை நம் உடலில் முறைப்படுத்துகிறது.

அதேநேரம் இந்த இயக்குநீர் அதிகமாகச் சுரந்துவிட்டால், மன அழுத்தம் ஏற்படலாம். இளம் வெயில் நம் மனதுக்கு மகிழ்ச்சியளிப்பதற்கு இந்த இயக்குநீர் சுரப்பு குறைக்கப்படுவதே காரணம். வெயிலைக் கண்டால் இந்த இயக்குநீர் சுரப்பு குறைவது ஏன்?

இரவில் தூங்கும்போது மெலடோனின் சுரக்கிறது. இருள் மறைந்து நமது முகத்தில் வெளிச்சம் பட ஆரம்பிக்கும்போது மெலடோனின் சுரப்பு கட்டுப்படுத்தப்படுவதால், நமது மனநிலை உற்சாகமடைகிறது. அதேநேரம் இரவில் நடமாடும் பெரும்பாலான பாலூட்டிகளுக்கு மெலடோனின் அதிகம் சுரந்தாலும், எப்போதுமே அவை மன அழுத்தத்துடன் இருப்பதில்லை.

இருந்தபோதும், நாம் எப்போதுமே இருட்டைவிட வெளிச்சத்தை விரும்பும் வகையிலேயே பரிணாம வளர்ச்சி அடைந்திருக்கிறோம். அதற்குக் காரணம், மனிதர்களான நாம் பகலில் சுறுசுறுப்பாகச் செயல்படுபவர்களாக இருப்பதுதான்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x