Published : 29 Jan 2014 12:00 AM
Last Updated : 29 Jan 2014 12:00 AM

பொறியியல் படித்தவர்களுக்கு பொன்னான வாய்ப்பு தரும் தேர்வு

பொறியியல் படித்தவர்களுக்கு பொன்னான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும் தேர்வாக GATE (கிராஜுவேட் ஆப்டிடியூட் டெஸ்ட் இன் இன்ஜினீயரிங்) அமைந்துள்ளது. இத்தேர்வு குறித்து மாணவர்களிடையே எதார்த்தமான போக்கு உள்ளதே தவிர, இதன் முக்கியத்துவத்தை அறியாமல் உள்ளனர். இத்தேர்வு எம்.இ., எம்.டெக். சேருவதற்கான தேர்வு மட்டுமே என்ற கருத்து மாணவர்களிடம் பரவலாக காணப்படுகிறது. இது முற்றிலும் தவறானது. பி.ஃபார்ம், எம்.எஸ்சி., எம்.சி.ஏ., எம்.டெக்., டூயல் டிகிரி படித்தவர்களும் இத்தேர்வை எழுதலாம்.

இத்தேர்வில் தகுதி பெற்றவர்களுக்கு அரசு பொதுத் துறை நிறுவனங்களில் பணி வாய்ப்பு அளிக்கப்படுகிறது என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். பொதுத் துறை நிறுவனங்களின் வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், GATE தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் தேவையும் மிகுதியாக உள்ளது. பொறியியலில் இரண்டாம் ஆண்டு படிக்கும் போதே, இத்தேர்வுக்கு தயார்படுத்திக் கொள்ள வேண்டும். இறுதி ஆண்டில் தேர்வுக்கு தயாராகலாம் என்ற முடிவு சரியானதல்ல. செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் இத்தேர்வுக்கான விண்ணப்பங்கள் அளிக்கப்பட்டு, பிப்ரவரி மாதத்தில் தேர்வு நடத்தப்படுகிறது. ஆன்-லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.

GATE தேர்வு முழுக்க முழுக்க ஆன்-லைன் மூலமாக நடத்தப்படுகிறது. மொத்தம் 22 பாடப் பிரிவுகள் உள்ளன. கடந்த ஆண்டு வரை 21 பாடப் பிரிவுகள் இருந்த நிலையில், இந்தாண்டு கூடுதலாக எக்காலஜி அண்டு எவல்யூஷன் என்ற புதிய பாடத் திட்டத்தை சேர்த்து, 22 பாடப் பிரிவுகளில் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. பட்டப் படிப்பில் படித்த ஏதாவது ஒரு பாடப் பிரிவை தேர்ந்தெடுத்து தேர்வு எழுத வேண்டும்.

GATE தேர்வில் மல்டிபில் சாய்ஸ் கேள்வியும், நியூமரிக்கல் விடைத்தாள் முறையிலும் தேர்வு நடத்தப்படு கிறது. மல்டிபில் சாய்ஸ் கேள்வி என்பது 4 விடைகளில் ஒன்றை தேர்வு செய்து எழுதுவது. நியூமரிக்கல் ஆன்சர் முறையில், கேள்விக்கான விடை எண்களில் மட்டுமே இருக்க வேண்டும்.

GATE தேர்வு 65 கேள்விகளையும், 100 மதிப்பெண் களையும் கொண்டது. இதை 3 மணி நேரத்தில் எழுதி முடிக்க வேண்டும். நெகட்டிவ் மதிப்பெண்களும் உண்டு. தேர்வில் தகுதி பெற்றவர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் எம்.இ., எம்.டெக். சேர்ந்தவுடன், அவர்களுக்கு பகுதி நேர ஆசிரியர் பணி வழங்கி, மாதம் ரூ.8,000 ஊதியம் 24 மாதங்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு முதல் இத்தொகையை உயர்த்த அரசு பரிசீலித்து வருகிறது.

வாரத்தில் 8 மணி நேரம் பகுதி நேர ஆசிரியர் பணி மேற்கொள்ள வேண்டியிருக்கும். மேலும் லேபாரட்டரி டெமான்ஸ்ட்ரேஷன், டூடேரியல், பட்டப் படிப்பு மாணவர்களுக்கான பயிற்சி ஏடுகளை சரி செய்தல், தேர்வுத் தாள் திருத்தும் பணி, கருத்தரங்கம் நடத்துதல், ஆராய்ச்சிப் பணிகளில் ஈடுபட வேண்டும்.

நாளை, இத்தேர்வு மூலம் என்னென்ன பணி வாய்ப்பு உள்ளது என்பதை தெரிந்துகொள்வோம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x