Published : 20 Sep 2016 11:28 AM
Last Updated : 20 Sep 2016 11:28 AM

வேலை வேண்டுமா? - வங்கி அதிகாரி ஆகலாம், கிராம வங்கிகளில் 16,615 காலிப் பணியிடங்கள்

தற்போது அரசு வங்கிகள், எழுத்தர், அதிகாரி பணியிடங்களுக்குத் தேவைப்படும் பணியாளர்களைப் போட்டிபோட்டுக்கொண்டு தேர்வுசெய்து வருகின்றன. நாட்டின் மிகப் பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி நீங்கலாக மற்ற அனைத்துப் பொதுத்துறை வங்கிகளுக்கும் தேவைப்படும் பணியாளர்களும் அலுவலர்களும் வங்கிப் பணியாளர் தேர்வு நிறுவனம் (Institute of Banking Personnel Selection-IBPS) என்ற தேர்வாணையம் நடத்துகின்ற போட்டித் தேர்வு மூலமாகவே தேர்வு செய்யப்படுகிறார்கள்.

அதேபோல், நாடு முழுவதும் இயங்கி வரும் மண்டலக் கிராம வங்கிகளுக்கான (Regional Rural Banks) பணியாளர்களும் ஐ.பி.பி.எஸ். தேர்வு மூலமாகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். தமிழகத்தில் பாண்டியன் கிராம வங்கி, பல்லவன் கிராம வங்கி, புதுச்சேரியில் புதுவை பாரதியார் கிராம வங்கி ஆகியவை கிராம வங்கிகளாகச் செயல்படுகின்றன. கிராமப்புற மக்களின் மேம்பாட்டுக்காக தொடங்கப்பட்டவை இவை. இந்த நிலையில், தற்போது நாடு முழுவதும் உள்ள கிராம வங்கிகளில் அலுவலக உதவியாளர், அதிகாரி, சிறப்பு அதிகாரி நிலைகளில் 16,615 காலிப்பணியிடங்கள் போட்டித்தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளன.

தேவையான தகுதி

இதற்காக நடத்தப்படும் போட்டித்தேர்வில் முதல்நிலைத்தேர்வு, மெயின் தேர்வு (அதிகாரி பணிக்கு மட்டும் கூடுதலாக நேர்முகத்தேர்வு) என இரு தேர்வுகள் இடம்பெற்றிருக்கும். அலுவலக உதவியாளர் பணிக்கு ஏதேனும் ஒரு பாடத்தில் பட்டம் பெற்றிருந்தால் போதும். அடிப்படைக் கணினி அறிவு இருப்பது விரும்பத்தக்க தகுதி ஆகும். வயது 18 முதல் 28-க்குள் இருக்க வேண்டும். அதிகாரி நிலையிலான பணிகளில் பொதுவான பதவிகளைப் பொருத்தவரையில், பட்டப் படிப்புதான் கல்வித் தகுதி என்ற போதிலும் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண் அவசியம்.

தொழில்நுட்பப் பதவிகளான சிறப்பு அதிகாரி பணிகளுக்குப் பணியின் தன்மைக்கேற்பக் கல்வித் தகுதி மாறுபடும். வயது 21 முதல் 40-க்குள் இருக்க வேண்டும். ஒரு சில பணிகளுக்கு வயது வரம்பு 30 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இடஒதுக்கீட்டு விதிமுறைகளின்படி, வயது வரம்பில் எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினருக்கு 5 ஆண்டுகளும், ஓ.பி.சி. பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத் திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் தளர்வு அளிக்கப்படும்.

என்ன செய்யலாம்?

உரிய கல்வித்தகுதியும் வயது வரம்புத் தகுதியும் கொண்ட பட்டதாரிகள் ஐ.பி.பி.எஸ். இணையதளத்தைப் (www.ibps.in) பயன்படுத்தி செப்டம்பர் 30-க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைன் வழியிலான முதல்நிலைத் தேர்வு நவம்பர் மாதத்தில் நடைபெறவுள்ளது. இதற்கான ஹால் டிக்கெட்டை அதிகாரி நிலையிலான தேர்வுக்கு அக்டோபர் மாதத்திலும், அலுவலக உதவியாளர் தேர்வுக்கு நவம்பர் மாதத்திலும் ஐ.பி.பி.எஸ். இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். தேர்வு முறை, பாடத்திட்டம், எந்தெந்த கிராம வங்கிகளில் எவ்வளவு காலியிடங்கள் என்ற விவரம் போன்றவற்றை ஐ.பி.பி.எஸ். இணையதளத்தில் விளக்கமாகத் தெரிந்துகொள்ளலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x