Last Updated : 13 Oct, 2014 06:11 PM

 

Published : 13 Oct 2014 06:11 PM
Last Updated : 13 Oct 2014 06:11 PM

சைக்கோமெட்ரிக் தேர்வுகள்: நீங்கள் விசுவாசமானவரா?

நீங்கள் உங்கள் நிறுவனத்துக்கு நாணயமாக நடந்து கொள்வீர்களா? இப்படி ஒரு கேள்விக்கு நிச்சயம், ஓரளவு, மாட்டேன் என்று மூன்றுவிதப் பதில்களைக் கொடுத்தால், எல்லோருமே ‘நிச்சயமாக’ என்ற பதிலைத்தான் தேர்ந்தெடுப்பார்கள் (நடைமுறையில் ‘ஓரளவு’ என்று நடந்துகொள்ளக் கூடியவர்கள் உட்பட).

எனவே இதுபோன்ற (போலியான பதில் வர வாய்ப்புள்ள) கேள்விகளைக் கேட்டு நபர்களைத் தேர்வு செய்வதை நிறுவனங்கள் விரும்பாது. ஆனால் கேள்வியைக் கொஞ்சம் சுற்றி வளைத்துக் கேட்டால் மாட்டிக் கொள்ள வாய்ப்பு உண்டு.

சுற்றி வளைக்கும் கேள்வி

“உங்களுக்கு வேறொரு நிறுவனத்திலிருந்து வேலையில் சேர அழைப்பு வருகிறது. நீங்கள் எங்கள் நிறுவனத்தை விட்டுச் சென்று விடுவீர்களா?’’.

இந்தக் கேள்விக்கு உங்கள் பதில் என்னவாக இருக்கும்? ‘உண்மையில் அப்படி ஒரு நிலை வந்தால் பார்த்துக் கொள்ளலாம். மற்றபடி இந்த நிறுவனம் தன்னிடம் லாயல்டி கொண்டவர்களைத்தான் எதிர்பார்க்கும்’ என்று நினைத்து ‘நிறுவனத்தைவிட்டுச் செல்ல மாட்டேன்’ என்று நீங்கள் பதிலளிக்கக் கூடும்.

இப்போது வேறொரு விவரம் இதே கேள்வியுடன் சேர்க்கப்படுகிறது. ‘வேறொரு நிறுவனத்தில் உங்களுக்குக் கொஞ்சம் அதிகம் ஊதியத்துடன் வேலைவாய்ப்பு கிடைக்கிறது. நீங்கள் இந்த வேலையை விட்டுச் செல்வதில் எங்களுக்கு மறுப்பு இல்லை என்று தெரிவிக்கிறோம். அப்போது இந்த வேலையை விட்டுச் செல்வீர்களா?’’.

இந்தக் கேள்விக்கு விடையளிக்கக் கொஞ்சம் தயக்கமாக இருக்கிறதல்லவா? ‘சரி இவர்களே மறுப்பு தெரிவிக்காதபோது வேலையை விடுவதை இவர்கள் தப்பாகவா நினைத்துக் கொள்ளப் போகிறார்கள்?’ என்று எண்ணி அதற்கேற்றவாறு பதிலை டிக் செய்வீர்களா?

பாதிப் ப்ராஜெக்டில்

இதோ வந்து விழுகிறது அடுத்த கேள்வி. ‘அதே சூழல். அதே வேறொரு வேலைவாய்ப்பு. அதேபோல் எங்களுக்கு மறுப்பு இல்லை. ஆனால் அந்த வேறொரு வேலைவாய்ப்பு வரும்போது எங்கள் நிறுவனத்தின் ப்ராஜெக்டில் பாதியைத்தான் முடித்திருக்கிறீர்கள். மீதியை இன்னொருவருக்குச் சரியான விதத்தில் புரிய வைப்பது சிரமம். என்ன முடிவெடுப்பீர்கள்?’.

இப்போது பிடி இறுகுகிறது அல்லவா?

தவிர உணர்வுகளை உசுப்பினால் உங்கள் உண்மையான குணம் எப்படியும் சீறிக்கொண்டு வெளியே வந்துவிடும்.

கேள்வி இப்படி வடிவமைக்கப்படலாம். ‘பாதிப் ப்ராஜெக்டில் இருக்கிறீர்கள். தொடர்ந்து வேலை செய்தால்தான் முடிக்க முடியும். அப்போது உங்கள் நெருங்கிய நண்பரிடமிருந்து அழைப்பு வருகிறது. ‘படுத்த படுக்கையாக இருக்கும் என் அப்பாவை ஐந்து நாள் விடுப்பு எடுத்துக் கொண்டு பார்த்துக் கொள்ள முடியுமா? நான் அவசரமாக வேறு ஊருக்குச் செல்ல வேண்டிய கட்டாயம்’.

இதற்கு என்ன பதில் அளிப்பீர்கள்? இப்போதும் நிறுவனத்தின் சார்பில் நடந்து கொள்வதாகப் பதிலளித்தால்தான் நீங்கள் வேலைக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள் என்று உள்ளுக்குள்ளிருந்து ஒரு குரல் கேட்கலாம்.

உணர்ச்சிகரமான கேள்விகள்

இப்போது அடுத்த வலை அடுத்த கேள்வியில் வீசப்படும். ‘அந்த நண்பர் இதே போன்ற சூழலில் உங்களுக்கு உதவியவர்’ என்கிறது கூடுதல் தகவல். இப்போது உங்கள் முடிவு (அதாவது நீங்கள் தேர்ந்தெடுக்கும் பதில்) என்னவாக இருக்கும்?

உங்களை உணர்ச்சிக்குழியில் தள்ளி உங்களின் உண்மையான குணநலனை வெளிக் கொண்டுவர ‘நட்பு’ எனும் ஆயுதத்தைச் சைகோ மெட்ரிக் தேர்வுகளில் பயன்படுத்தக் கூடும். இதோ அப்படிப்பட்ட சில கேள்விகளும், அவற்றுக்கான விதவிதமான பதில்களும்.

# உங்கள் அறியாமைகளை உங்கள் தோழர்களிடம் வெளிக்காட்டுவதுண்டா?

அ. சமாளித்து மறைத்துவிடுவேன். அறியாமையைப் பறைசாற்றுவது

வெட்கக்கேடான விஷயமாயிற்றே.

ஆ. சிலவற்றை மட்டும் வெளிக்காட்டுவேன்

இ. இதில் மறைக்க என்ன இருக்கிறது? சிநேகிதன்தானே!

# தோழர்களுடனான (நேரிலோ, தொலைபேசியிலோ) சந்திப்புகள் எந்த மட்டில்?

அ. அடிக்கடி. சொல்லப்போனால் சந்திக்கவில்லை என்ற உணர்வே

தோன்றாத அளவுக்கு.

ஆ. அலுவலக வேலை காரணமாக நேரமின்மையால் நினைப்பதைவிட குறைவாகத்தான் சந்திக்க முடிகிறது.

இ. நண்பன் அடிக்கடி குறைப்பட்டுக் கொள்கிறான், நான் அவனைச் சந்திக்க முயற்சியே எடுப்பதில்லை என்று, என்ன செய்ய?

# வழக்கத்துக்கு மாறாக உங்கள் நண்பர் வருத்தத்ததுடன் தோற்றமளிக்கிறார். என்ன செய்வீர்கள்?

அ. உடனடியாக வருத்தத்தின் காரணம் என்னவென்று கேட்டுவிடுவேன்.

ஆ. மவுனமாக இருப்பேன். அவனே தனக்குத் தோன்றும் போது தன் அந்தரங்கத்தை வெளியிடட்டும்.

இ. அவனாக எதையாவது கூறத் தொடங்கினால்கூட, ‘யோசித்துச் சொல்லு, அப்புறம் இந்த விஷயத்தை ஏன்தான் பகிர்ந்து கிட்டோமோ?ன்னு வருத்தப்படக் கூடாது’என்று எச்சரிப்பேன்.

சிக்காத மீனாக

இந்தக் கேள்விகளுக்கு எந்தப் பதிலை நீங்கள் தேர்ந்தெடுக்கிறீர்கள் என்பது உங்கள் குண நலன்களை வெளிப்படுத்தும். வெளிப்படைத் தன்மை, வேலை மற்றும் தனி வாழ்வு ஆகியவற்றில் நீங்கள் காட்டும் ஈடுபாடு, பிரச்னையைக் கையாளும் முறை போன்றவற்றில் உங்கள் கோணம் என்ன என்பது உங்கள் பதிலில் வெளிப்பட்டுவிடும். அது எப்படி என்பதை உங்களாலேயே (பதில்களை ஒருமுறைக்கு இருமுறை படித்துப் பார்த்தால்) விளங்கிக் கொள்ள முடியும். அதன்பின் சைக்கோமெட்ரிக் தேர்வு எனும் வலையில் சிக்கிக் கொள்ளாத மீனாக நீங்கள் அதைத் தாண்டி வெற்றியின் அடுத்த கட்டத்துக்குச் செல்லலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x