கேள்வி மூலை 21: வாசித்தல் ஏன் தூக்கத்தை வரவழைக்கிறது?

கேள்வி மூலை 21: வாசித்தல் ஏன் தூக்கத்தை வரவழைக்கிறது?
Updated on
1 min read

பலரும் அவ்வளவு நேரம் சுறுசுறுப்பாக இயங்கிக் இருப்பார்கள். புத்தகத்தை கையில் எடுத்த கொஞ்ச நேரத்தில் தூக்கம் கண்களைச் சுழற்றிக்கொண்டு வந்துவிடும். ஏன் இப்படி நடக்கிறது? வாசித்தல், ஏன் நமக்குத் தூக்கத்தை வரவழைக்கிறது?

தளர்ந்த உடல்

முதலாவதாக, மிகவும் சௌகரியமான நிலையில் உடலை வைத்துக்கொண்டுதான் பொதுவாக நாம் வாசிக்க ஆரம்பிக்கிறோம். அதாவது உடலை நன்றாகத் தளர்த்தும் வகையில் உட்கார்ந்துகொண்டோ, படுத்துக்கொண்டோ. அது மட்டுமல்லாமல் சத்தம் ஏதுமில்லாத ஓர் இடத்தில், ஒரு நாளின் கடைசி வேலையாக அல்லது உடல் ஆற்றலை பெரிதாகச் செலவழித்த பின்னர்தான் பெரும்பாலும் வாசிக்க உட்காருகிறோம். இதன் காரணமாக வாசிக்க ஆரம்பித்த கொஞ்ச நேரத்தில் உடல் ஓய்வு நிலைக்குச் சென்றுவிடுகிறது அல்லது தூக்கத்தை நோக்கி இழுக்கப்படுகிறது.

கவனம் திசைதிரும்புதல்

மற்றொருபுறம் நம்மைக் கவர்ந்து இழுக்கும் ஒரு புத்தகமோ அல்லது கதையோ நடப்பு உலகத்திலிருந்து, நடப்புக் கவலைகளிலிருந்து வேறொரு உலகத்துக்கு நம்முடைய கவனத்தை இட்டுச் செல்கிறது. நாளைக்கு உங்களை மிரட்டப்போகும் பரீட்சை அல்லது வேலைக்கான காலக்கெடு அல்லது நீண்ட தூரப் பயணத்துக்கான திட்டத்தை வாசிப்பு மறக்க வைத்திருக்கும்.

நம்முடைய மனம் பெரும்பாலான நேரம் நடப்புக் கவலைகளை எப்படித் தீர்ப்பது என்பது குறித்தே யோசித்துக் கொண்டிருக்கிறது. வாசிக்கும்போது அதிலிருந்து விலகி, நம்முடைய மனமும் தளர் வான நிலைக்குச் சென்றிருக்கும்.

பிடிக்காமல் போனால்

நேர்மாறாக, நீங்கள் வாசிப்பது கவனத்தைக் கவராமல் சலிப்படையச் செய்யும் வகையில் இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். அப்போது என்ன நடக்கும்? தொடர்ந்து வாசிப்பதற்கு எடுக்கும் முயற்சி, மூளையை சோர்வுறச் செய்யும். (எடுத்துக்காட்டாக, ஆர்வமற்று பாடப் புத்தகத்தை வாசிப்பது). இந்த நிலையில் உங்கள் மனதின் கவனம் சிதறி அரைத்தூக்க நிலைக்குச் சென்றிருக்கும். இதுவும்கூட விரைவிலேயே தூக்கத்தை வரவழைத்து விடுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in