Published : 12 Feb 2014 12:00 AM
Last Updated : 12 Feb 2014 12:00 AM

நெருங்கிவரும் நுழைவுத் தேர்வுகள்

எம்.பி.ஏ. பட்டமேற்படிப்புக்கான நுழைவுத் தேர்வுகள் பற்றி பார்த்து வருகிறோம். எம்.பி.ஏ., எம்.இ., எம்.டெக். உள்ளிட்ட பட்ட மேற்படிப்புகளுக்கான இதர நுழைவுத் தேர்வுகள் பற்றி இப்போது பார்க்கலாம். MAT (மேனேஜ்மென்ட் ஆப்டிடியூட் டெஸ்ட்) நுழைவுத் தேர்வு பிப்ரவரி, மே, செப்டம்பர், டிசம்பர் என ஆண்டுக்கு 4 முறை நடத்தப்படுகிறது.

பெரும்பாலும் பிப்ரவரி, டிசம்பர் தேர்வுகளில் பெறும் மதிப்பெண்ணை வைத்தே கல்லூரிகளில் சேர்க்கை நடக்கிறது. இத்தேர்வில் 800-க்கு 600 மதிப்பெண்ணுக்கு மேல் பெறுபவர்களுக்கு சிறந்த கல்லூரிகளில் இடம் கிடைக்கும்.

சேவியர் லேபர் ரிலேஷன் இன்ஸ்டிடியூட் சார்பில் ஆண்டுக்கு ஒரு முறை XAT (சேவியர் அட்மிஷன் டெஸ்ட்) நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இதில் பெறும் மதிப்பெண்ணை வைத்து சென்னை லயோலா கல்லூரியில் எம்.பி.ஏ. பட்ட மேற்படிப்புக்கு சேர்க்கை நடக்கிறது. ஜனவரியில் நடக்கும் இத்தேர்வுக்கு அக்டோபரில் விண்ணப்பிக்க வேண்டும். இத்தேர்வில் ஆங்கிலம், கணிதம் பாடங்கள் தவிர, டெசிஷன் மேக்கிங் அண்ட் லாஜிக்கல் எபிலிட்டி பாடப் பிரிவில் இருந்தும் கேள்விகள் கேட்கப்படும். இதில் 90 பர்சன்டைல் (percentile) மதிப்பெண்ணுக்கு மேல் எடுப்பவர்களுக்கு சிறந்த கல்லூரிகளில் இடம் கிடைக்கும்.

SNAT (சிம்பயாஸிஸ் நேஷனல் ஆப்டிடியூட் டெஸ்ட்) நுழைவுத் தேர்வு புனேயில் உள்ள சிம்பயாஸிஸ் கல்வி நிறுவனம் மூலம் நடத்தப்படுகிறது. ஆண்டுக்கு ஒருமுறை (டிசம்பர் அல்லது ஜனவரி) இத்தேர்வு நடக்கும். இதற்கு செப்டம்பர் அல்லது அக்டோபரில் விண்ணப்பம் வழங்கப்படுகிறது. இக்கல்வி நிறுவனத்தில் படிப்பவர்களுக்கு 100% பணி வாய்ப்பு உறுதி.

தமிழகத்தில் உள்ள சிறந்த கல்வி நிறுவனங்களில் எம்.பி.ஏ., எம்.சி.ஏ., எம்.இ., எம்.டெக் உள்ளிட்ட பட்ட மேற்படிப்பில் சேர விரும்புவோர் TANCET (தமிழ்நாடு காமன் என்ட்ரன்ஸ் டெஸ்ட்) நுழைவுத் தேர்வை எழுத வேண்டும். மேற்கண்ட பட்ட மேற்படிப்புகளுக்கு தனித்தனியாக நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. ஒவ்வொரு தேர்வுக்கும் தனியாக விண்ணப்பிக்க வேண்டும். கூடுதல் தாள் எழுத விரும்புபவர்கள் ஒரே விண்ணப்பத்தில் அதற்கான கட்டணத்தை சேர்த்துக் கட்டி விண்ணப்பிக்கலாம்.

எம்.சி.ஏ.வுக்கான நுழைவுத் தேர்வு வரும் மார்ச் 22ம் தேதி காலை 10 மணி முதல் 12 மணி வரையும்

எம்.பி.ஏ.வுக்கான நுழைவுத் தேர்வு மார்ச் 22ம் தேதி மதியம் 2.30 மணி முதல் 4.30 மணி வரையும் எம்.இ., எம்.டெக். நுழைவுத் தேர்வு மார்ச் 23ம் தேதி காலை 10 மணி முதல் 12 மணி வரையும் நடத்தப்படுகிறது. இத்தேர்வுக்கு ஆன்லைனிலும் அரசு பொறியியல் கல்லூரிகளிலும் கடந்த பிப்ரவரி 1-ம் தேதி முதல் விண்ணப்பங்கள் அளிக்கப்பட்டு வருகிறது. எழுத விரும்புவோர் இப்போதே அணுகவும். இதற்கு வரும் 20-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். அந்தந்த மாவட்ட தலைநகரங்களில் இத்தேர்வு நடக்கும்.

பி.எஸ்சி., பி.காம். படிக்கும் மாணவர்கள் எம்.பி.ஏ., எம்.சி.ஏ. நுழைவுத் தேர்வையும், பொறியியல் மாணவர்கள் எம்.பி.ஏ., எம்.இ. நுழைவுத் தேர்வையும் எழுதுவது சிறந்தது. நுழைவுத் தேர்வு எழுதுவதுடன் கவுன்சலிங்குக்கும் தனியாக விண்ணப்பிக்க வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x