Published : 20 Sep 2013 05:01 PM
Last Updated : 20 Sep 2013 05:01 PM

டூவீலரில் ஆபீஸ்.. சாதிக்கும் தம்பதி

நாகர்கோவிலில் கலெக்டர் அலுவலகத்தை கடக்கும் ஒவ்வொருவரும் மினிமோள் - சீனிவாசன் தம்பதியின் சாலையோரத்து மினி அலுவலகத்தை பார்க்காமல் நகரமுடியாது. அலுவலகம் என்றதும் சூட்டை தணிக்கும் குளுகுளு ஏ.சி. வரை சகல வசதிகளும் இருக்குமோ என கற்பனை பண்ண வேண்டாம். ஒரு டூவீலரில்தான் இவர்களது அலுவலகமே இயங்குகிறது. இரண்டு ஸ்டாப்லர், இரண்டு பேனா, இரண்டு ரைட்டிங் பேடு, கொஞ்சமாய் எழுதும் தாள்கள்.. இவைதான் இந்த அலுவலகத்தின் சொத்து.

பரந்து விரிந்த திறந்தவெளி கூடாரத்தில் இயற்கையின் மடியில் மழையை ரசித்து வெயிலை பொறுத்து தன்னம்பிக்கையோடு தொழில் செய்கிறார்கள் இந்த தம்பதி. பகட்டு விளம்பரங்கள் ஏதுமில்லாமல் பாஸ்போர்ட், பான்கார்டு எடுத்துக் கொடுக்கும் ஏஜென்ட் தொழிலைத்தான் இப்படி வித்தியாசமாய் செய்துகொண்டிருக்கிறார்கள்.

’தி இந்து’ தமிழ் பத்திரிக்கையில் இருந்து வந்திருக்கிறோம் என்று அறிமுகப்படுத்திக் கொண்டதுமே,’’உட்காருங்கண்ணே...” என்று படபடத்த மினிமோள், சுதாரித்துவிட்டு, ”உக்கார நாற்காலிகூட இல்ல.. உக்கார சொல்லுதேன் பாருங்க.. இப்புடித்தான் சில நேரங்கள்ல நம்மையும் அறியாம நம் தமிழ் பண்பாடு வெளிப்பட்டுருதுண்ணே” என்றவாறே பேச்சை ஆரம்பித்தார்.

''எங்களுக்கு கல்யாணமாகி 13 வருஷம் ஆகுது. கண்ணுக்கு அழகா ரெண்டு குழந்தைகள பெத்துக்கிட்டோம். இவங்க (சீனிவாசன்) தங்க நகை வேலை பாத்துட்டு இருந்தாங்க. ஆரம்பத்துல தொழில் நல்லாத்தான் இருந்துச்சு. அப்புறமா சந்துக்கு சந்து நகைக்கடைகளை தெறக்க ஆரம்பிச்சதும் எங்க தொழில் படுத்துக்கிச்சு. தொழிலையே விட்டுட்டாங்க. அங்க இங்க சேமிப்புல இருந்த காசு கஞ்சி குடிக்க பத்துச்சு. ஆனா, புள்ளைங்களுக்கு ஃபீஸ் கட்டுறதுலருந்து எல்லாத்துக்கும் மத்தவங்க கைய எதிர்பார்க்க வேண்டியதாப் போச்சு. பண கஷ்டத்தை சமாளிக்கிறதுக்காக, கொஞ்சநாள் இன்னொரு நகைக்கடையில வேலை பாத்தாங்க. அதுவும் சரிப்பட்டு வரல. அப்புறமா இன்னும் என்னென்னமோ தொழில் பண்ணிப் பாத்தோம். எதுவுமே சரியா வராம, கடைசியிலதான் இந்த வேலைக்கு வந்தோம். இப்ப கஷ்டமில்லாம வண்டி ஓடுது’’ மினிமோள் முகத்தில் ஆயிரம் வாட்ஸ் பிரகாசம்.

அவருக்கு வேலை கொடுத்துவிட்டு தொடர்கிறார் சீனிவாசன். ''மொதலாளியா இருந்துட்டு தொழிலாளியா இன்னொரு இடத்துல போயி வேலைக்கு இருக்கதுல நிறைய சிக்கல் இருக்கு. இது அனுபவத்துல தெரிஞ்சுக்கிட்ட உண்மை. யாருக்கிட்டயும் கைகட்டி நின்னு வேலை பாக்காம சொந்தமா தொழில் பண்றதுதான் சரின்னு முடிவெடுத்தேன். புரோட்டா கடையில ஆரம்பிச்சு ஒவ்வொரு தொழிலா யோசிச்சோம். கடைசியிலதான் இந்த வேலைய கையில எடுத்தோம். இதுக்கு கடை பிடிக்க ஊரு பூரா சுத்துனேன். எங்க பொருளாதாரத்துக்கு ஏத்த மாதிரி எங்கயுமே கடை சிக்கல. அப்பத்தான், ‘நம்ம டூவீலர்லயே ஆபீஸ் போட்டா என்ன’ன்னு மினிமோள் ஐடியா குடுத்தாங்க. மொதல்ல கொஞ்சம் யோசனையா இருந்துச்சு. அப்புறமா துணிஞ்சு இறங்கிட்டோம். மழைக்கும் வெயிலுக்கும் குடையை புடிச்சிக்கிட்டு தொழில் பாத்துட்டு இருக்கோம்.

எனக்கு பெருசா படிப்பு இல்லைங்க. மினிமோள் பி.எஸ்.சி கம்ப்யூட்டர் சயின்ஸ் படிச்சுருக்காங்க. அவுங்கதான் இங்க விண்ணப்பங்களை எழுதுறாங்க. நான் எடுத்துக் குடுத்து காசு வாங்குறதோட சரி. இந்த சின்னஞ் சிறிய வண்டியில பாஸ்போர்ட் வேலை, பான்கார்டு, வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு, புதுப்பித்தல்னு சகல வேலையும் பண்ணிக் குடுக்குறோம். திக்குத் தெரியாம நின்ன கட்டத்துல நமக்கு கைகுடுத்த தொழில்ங்கிறதால இதை சேவையாவே செஞ்சுட்டு இருக்கோம். குறைவான கட்டணம்தான் வாங்குறோம். கிராமத்து சனங்க வந்தா குடுக்குறத வாங்கிட்டு வேலைய முடிச்சுக் குடுத்திருவோம். வேலைக்கு இருந்த இடங்கள்ல நான் நாலு பேரைப் பாத்து ‘வாங்க சார், வாங்க சார்’னு கூப்பிட்ட காலம் போயி, இப்ப என்னைய பாத்து நாலு பேரு ‘வாங்க சார்’னு கூப்பிடுறாங்க. சந்தோசமா இருக்கு.

இதுல வர்ற வருமானத்தை வைச்சு டவுனுக்குள்ள ஒரு கடையை பிடிச்சுப் போட்டுட்டோம். ஆனாலும், பழசை மறக்க முடியாம அந்தக் கடையை பூட்டிப் போட்டுட்டு இங்கேயே இருந்துட்டோம் ” அழகாய் சிரிக்கிறார் சீனிவாசன்.

வாழ்க்கையில் வெற்றிப்படிகளை எட்டிப்பிடிக்க மூலதனம் ஒரு தடையில்லை என்பதற்கு இந்தத் தம்பதி நல்ல உதாரணம்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x