Published : 11 Jul 2016 10:22 AM
Last Updated : 11 Jul 2016 10:22 AM

வாகனங்களை பதிவு செய்ய புதிய வசதி!

வாகனங்கள் வாங்குவது எளிமையாக இருந்தாலும், பதிவு செய்வது இன்னமும் சிரமமான விஷயமாக உள்ளது. இதற்குக் காரணமே அதிகரித்துவரும் வாகன எண்ணிக்கையை சமாளிக்கும் அளவுக்கு மாநிலங்களில் வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் இல்லாததுதான். இதைப் போக்கும் வகையில் வாகனங்களை விற்பனை செய்யும் விநியோகஸ்தர்களிடமே வாகனங்கள் பதிவு செய்யும் வசதியை ஒப்படைக்கலாம் என அரசு பரிசீலித்து வருகிறது.

மத்திய தரைவழிப் போக்குவரத்து அமைச்சகம் ஏற்படுத்திய அமைச்சர்கள் அடங்கிய குழு இத்தகைய பரிந்துரையை அளித்துள்ளது.

வாகனங்கள் பற்றிய அனைத்து விவரம் மற்றும் வாங்குவோரின் விவரம் அனைத்தும் டீலர்களிடம் இருக்கும். அத்தகைய சூழலில் வாகன பதிவு செய்வதற்கான அங்கீகாரத்தை அவர்களிடம் அளிக்கலாம். இதற்காக அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தை அவர்கள் வசூலித்து கருவூலத்தில் செலுத்திவிடலாம். இதன் மூலம் வட்டார போக்குவரத்து அலுவலகங்களின் பணிச் சுமை குறையும் என்று இக்குழு குறிப்பிட்டுள்ளது. பெரும்பாலான மாநிலங்களில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் போதிய எண்ணிக்கையில் அலுவலர்கள் இல்லாமல் சிரமப்படுகின்றன. இதைப் போக்க இந்த வழி நிச்சயம் உதவும் என்று குறிப்பி்ட்டுள்ளது. மேலும் பதிவு செய்வதில் நடைபெறுவதாகக் கூறப்படும் ஊழலையும் ஒழிக்கலாம் என்று தனது பரிந்துரையில் சுட்டிக் காட்டியுள்ளது.

2015-16-ம் நிதி ஆண்டில் சுமார் 2 கோடி வாகனங்கள் விற்பனையாகியுள்ளன. இவற்றில் 1.65 கோடி இரு சக்கர வாகனங்களாகும். 27 லட்சம் கார்களும் இதில் அடங்கும்.

வாகனங்களின் பெயர் மாற்றம் மற்றும் உரிமையாளர் மாற்றம் உள்ளிட்ட பணிகளை மட்டும் வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் மேற்கொண்டால் அவற்றின் பணிச் சுமை குறையும் என்று குறிப்பிட்டுள்ளது.

16 வயது நிரம்பியவர்கள் 100 சிசிக்கும் குறைவான கியர் இல்லாத வாகனங்கள் ஓட்ட அனுமதிக்கலாம் என்றும் பரிந்துரைத்துள்ளது. தற்போது 18 வயது நிரம்பியவர்களுக்குத்தான் நிரந்தர வாகனம் ஓட்டும் லைசென்ஸ் வழங்கப்படுகிறது.

அத்துடன் பழகுநர் உரிமத்தை ஆன்லைனில் வழங்கலாம் என்றும் விதிகளை மீறுவோருக்கு விதிக்கப்படும் அபராதத் தொகையை அதிகரித்தும் பரிந்துரை செய்துள்ளது. விரைவாக வாகனம் ஓட்டுவோருக்கு தற்போது விதிக்கப்படும் ரூ.2 ஆயிரம் அபராதத்துக்குப் பதிலாக ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கலாம் என குறிப்பிட்டுள்ளது.

அதேபோல போதையில் வாகனம் ஓட்டுபவருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் 6 மாத சிறைத் தண்டனை விதிப்பதோடு லைசென்ஸை 2 ஆண்டுகளுக்கு சஸ்பெண்ட் செய்யவும் பரிந்துரைத்துள்ளது. மொத்தம் 34 பரிந்துரைகளை இக்குழு அளித்துள்ளது. அதில் டீலர்களே வாகனங்களைப் பதிவு செய்யலாம் என்ற பரிந்துரை நிச்சயம் மிகுந்த வரவேற்பைப் பெறும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x