Last Updated : 14 Nov, 2013 12:00 AM

 

Published : 14 Nov 2013 12:00 AM
Last Updated : 14 Nov 2013 12:00 AM

நீரிழிவு நோய் சிக்கல்கள்: தடுக்கும் முறைகளும் மேலாண்மையும்

நீரிழிவு நோய் சத்தமில்லாமல் கொல்லும் தன்மை கொண்டது. ஏனென்றால் கண்கள், சிறுநீரகம், பாதம், நரம்புகளை அது பாதிக்கும் தன்மை கொண்டது. எதிர்பாராதவிதமாக, பல நீரிழிவு நோயாளிகள், இந்தப் பிரச்சினைகள் அவர்களைத் தாக்க ஆரம்பித்தவுடன்தான் அந் நோயையே கண்டுபிடிக்கிறார்கள்.

நீரிழிவு நோயை மோசமாக மேலாண்மை செய்வதால், எதிர்காலத்தில் சந்திக்கப் போகும் பிரச்சினைகள்: கட்டுப்படுத்தப்படாத ரத்த சர்க்கரை கண்ணின் உள்படலத்தை, குறிப்பாக விழித்திரையை பாதிக்கும். இந்த நிலைக்கு டயாபடிக் ரெட்டினோபதி என்று பெயர். டயாபடிக் ரெட்டினோபதியின் ஆரம்ப நிலைகளில் எந்த நோய் அறிகுறியும் தெரியாது. உங்களுக்கு நீரிழிவு நோய் இருக்கிறது என்றால், ஆண்டுக்கு ஒரு முறையாவது உங்கள் கண்களை பரிசோதித்துக் கொள்வது அவசியம்.

நீரிழிவு நோய் கொண்டவர்களின் சிறுநீரகம் பாதிக்கப்படுவது "டயாபடிக் நெஃப்ரோபதி". இந்த நிலையைத் தடுக்க ரத்தச் சர்க்கரை, ரத்தஅழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். நீரிழிவு நோய் உள்ளவர்கள், 4-6 மாதங்களுக்கு ஒரு முறை "மைக்ரோஅல்புமின்யூரியா" என்ற எளிய பரிசோதனையை செய்து கொள்ள வேண்டும்.

உடல்உறுப்புகளுக்குச் செல்லும் நரம்புகளுக்கு நீரிழிவு நோய் பாதிப்பு ஏற்படுத்துவது "டயாபடிக் நியூரோபதி". இதன் காரணமாக கை, பாதங்கள் மரத்துப் போதல் அல்லது ஜிவுஜிவு உணர்வு போன்றவை ஏற்படலாம். கால்களில் இருந்து நமக்குத் தெரியாமலேயே செருப்பு நழுவிப் போதல் அல்லது ஆண்கள், பெண்களில் பாலுணர்வு படிப்படியாக குறைதல் போன்றவை இதன் பொதுவான அறிகுறிகளாகும். மோசமான நியூரோபதி, பாதங்களுக்கு ரத்தவோட்டத்தைக் குறைத்து, உயிருக்கு உலை வைக்கும் கேங்ரீன் போன்ற நோய்த்தொற்றையோ, ஊனத்தையோ ஏற்படுத்தக்கூடும்.

நீரிழிவு நோய் ரத்தத் தமனிகளை அடைத்துவிடும் என்பதால், மாரடைப்பு வருவதற்கான வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. குறிப்பாக, புகைப்பிடிப்பவர்கள், அதிக ரத்த அழுத்தம் உடையவர்கள், கொழுப்பு அதிகமுடையவர்கள் பாதிக்கப்பட அதிக வாய்ப்பு இருக்கிறது. மாரடைப்பின் வழக்கமான அறிகுறிகளான மார்புவலி போன்ற எதுவும் இல்லாமல் சத்தமில்லாத மாரடைப்பு தாக்கவும் வாய்ப்பு இருக்கிறது. எனவே, நீரிழிவு நோய் உள்ளவர்கள், வழக்கமாக இதயப் பரிசோதனையையும் செய்துகொள்ள வேண்டும்.

ஹைபோகிளைசீமியா அல்லது குறைந்த ரத்தச் சர்க்கரை என்பது நீரிழிவு நோயின் மோசமான சிக்கல், அதிக நீரிழிவு நோய் எதிர்ப்பு மருந்துகள் உட்கொள்வதாலேயோ அல்லது உரிய நேரத்தில் சாப்பிடாததாலேயோ இந்தப் பிரச்சினை ஏற்படும். வியர்த்தல், பலவீனம், தலைசுற்றல் உள்ளிட்டவை குறைந்த சர்க்கரையின் அறிகுறிகள். இதை கண்டுகொள்ளாமல் விட்டால், கோமா நிலைகூட ஏற்படலாம்.

நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தி, சிக்கல்களைக் குறைப்பதற்கான டிப்ஸ்:

#ரத்தச் சர்க்கரை, ரத்தஅழுத்தம், கொழுப்பை கட்டுப்பாட்டில் வைத்திருப்பது

#மூன்று மாதங்களுக்கு ஒரு முறை நீரிழிவு நோய் மருத்துவரைச் சந்தித்து எல்லாம் கட்டுப்பாட்டில் இருக்கிறதா என்று பரிசோதித்துக் கொள்வது

#3மதங்களுக்கு ஒரு முறை ரத்தச் சர்க்கரை, கொலஸ்ட்ரால் பரிசோதனை செய்துகொள்வது. குறிப்பாக ஹெச்.பி.ஏ.1சி வேல்யு எடுப்பது.

வழக்கமான உடற்பயிற்சி

#3 முறை சாப்பிடுவதற்கு பதிலாக, 4-5 முறை சாப்பிடும் முறையை பின்பற்றுவது

#பரிந்துரைக்கப்பட்ட மருந்து களை உட்கொள்வது

#புகைப்பிடிப்பதைக் கை விடுவது

#பாதங்களில் நோய்த்தொற்று, கால்ஆணி, காய்ப்பு போன்றவை ஏற்படுகின்றனவா என்று தினசரி கண்காணிப்பது

#கண் விழித்திரையை ஆண்டுதோறும் பரிசோதிப்பது

#6 மாதங்களுக்கு ஒரு முறை சிறுநீரக செயல்பாடு பரிசோதனை செய்துகொள்வது

#வாய் துர்நாற்றம் அடித்தால் பல் மருத்துவரை பார்ப்பது

மின்னஞ்சல்: drmohans@diabetes.ind.in

- டாக்டர் வி.மோகன், டாக்டர் மோகன்ஸ் குரூப் ஆஃப் டயாபட்டீஸ் இன்ஸ்டிடியூஷன்ஸ் தலைவர்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x